Sunday 4 February 2018

சிறார் சட்டத்தின் கீழ் வசந்தபிரியா விவகாரம் விசாரிக்கப்படாதது ஏன்? - டேவிட் மார்ஷல் கேள்வி


நிபோங் தெபால்-
மாணவி வசந்தபிரியா தற்கொலைக்கு முயன்று மரணத்தைத் தழுவியுள்ள நிலையில் அவரின் விவகாரத்தை சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படாதது ஏன்? என்று மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் தலைவர் டேவிட் மார்ஷல் பாக்கியநாதன் கேள்வி எழுப்பினார்.

வசந்தபிரியாவின் விவகாரம் செக்‌ஷன் 309 குற்றவியல் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டு  போலீஸ் விசாரணை அறிக்கை அரசு தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

14 வயதே ஆன சிறுமி வசந்தபிரியா விவகாரம் ஏன் சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பிய டேவிட் மார்ஷல், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு உரிய தண்டனை வழங்குவதும் மரணமடைந்த மாணவி வசந்தபிரியாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கப்பட வேண்டும் என்பதுமே எங்களின் கோரிக்கையாகும் என்றார்.

கைத்தொலைபேசி குற்றச்சாட்டின் பேரின் நான்கு மணிநேரத்திற்கும் மேலாக ஒரே அறையில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட வசந்தபிரியா மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தற்போது மாவட்ட கல்வி இலாகாவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவர் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனதெரிகிறது.

சிறார் சட்டத்தின் கீழ் வசந்தபிரியாவின் மரணம் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது போலீஸ், கல்வி அமைச்சு ஆகியவை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டேவிட் மார்ஷல் காணொளி மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

No comments:

Post a Comment