Thursday 31 December 2020

கோவிட்- 19 காலகட்டத்தில் தைப்பூச விழா கொண்டாட்டம் அவசியமானதா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கோவிட்-19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக மலேசியாவில் பொது கூட்டங்களுக்கும் இனம், சமயம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் அதிகபடியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அரசாங்கம்.

இச்சூழலில் இங்கு வாழும் இந்துக்களின் பெருவிழாவாக கருதக்கூடிய தைப்பூச விழா நடத்தப்பட வேண்டும் என்றும் நடத்தப்படக்கூடாது என்றும் இருவாறான கருத்துகள் தற்போது எதிரொலிக்கக் தொடங்கியுள்ளன.

முருகப் பெருமானை தரிசிக்க ஆண்டுக்கொருமுறை பத்துமலை திருத்தலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வதுண்டு. உள்ளூர் மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டினரும் பெருமளவில் கூடும் தைப்பூச விழா இவ்வாண்டு மிகப்  பெரிய கருத்து மோதலை உருவாக்கியுள்ளது.

தைப்பூச விழாவை ஒருமுறை ரத்து செய்தால் அதுவே சில தரப்பினருக்கு சாதகமான சூழலை உருவாக்கி தொடர்ந்து தைப்பூச விழாவை ரத்து செய்யக்கோருவதற்கு வாய்ப்பாக அமைந்திடலாம். என்ன நடந்தாலும் பத்துமலை தைப்பூச விழா நடந்தே ஆக வேண்டும். வெள்ளி ரதம் கோலாலம்பூர் மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு பத்துமலையை சென்றடைய வேண்டும். ஆனால் புதிய நடைமுறையில் மக்கள் கூட்டம் இல்லாமல் அர்ச்சனை செய்வதற்கு ரதம் எங்கும் நிறுத்தப்படாமல் தண்ணீர் பந்தல் எங்கும் அமைக்கப்படாமல் புதிய நிபந்தனையுடன் தைப்பூச ரத வெள்ளோட்டம் நடந்தேற வேண்டும் என்று கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ ஆர்.நடராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்தாண்டு தைப்பூச விழா நடத்தப்படக்கூடாது, கோவிட்-19 தொற்று பரவல் அச்சம் காரணமாக தைப்பூச விழா ரத்து செய்யப்பட வேண்டும். இவ்விழாவினால் 'தைப்பூச திரள்' உருவெடுத்து விடக்கூடாது என்று ஆகமம் அணி தலைவர் அருண் துரைசாமி உட்பட பல்வேறு தரப்பினர் சமூக ஊடகங்களில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து  வருகின்றனர்.

இவ்விரு கருத்து மோதல்களுக்கு மத்தியில் பினாங்கில் தைப்பூச விழாவை முன்னிட்டு நடத்தப்படும் ரத வெள்ளோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும் பினாங்கு துணை முதல்வருமான பேராசிரியர் பி.இராமசாமி அறிவித்துள்ளார்.

நாட்டில் கொண்டாடப்படும் ஒரு சமய விழாவுக்கு பின்னாளில் பாதகமான சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்ற டான்ஶ்ரீ நடராஜாவின் வாதத்தில் தவறேதும் இல்லை. அதேபோல் மக்கள் நலன் பாதுகாக்க வேண்டியது அவசியம். பெருந்திரளான மக்கள் கூட்டத்தினால் வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துவிடக்கூடாது என்ற எதிர்ப்பாளர்களின் கருத்துகளும் கவனிக்கப்பட வேண்டியவைதான்.

எது எப்படியாயினும் மக்கள் உயிர் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்ற சூழலில் அரசாங்கமும் தேசிய பாதுகாப்பு மன்றமும் பத்துமலை தேவஸ்தானமும் ஆழ்ந்து சிந்தித்து தீர முடிவெடுக்க வேண்டும்.

குறிப்பு; கோவிட்- 19 காலகட்டத்தில் தைப்பூச விழா கொண்டாட்டம் அவசியமானதா? என்ற கேள்விக்கு வாசகர்கள் தங்கள் கருத்துகளை கீழே குறிப்பிடலாம்.

Sunday 27 December 2020

3 நாடாளுமன்ற, 7 சட்டமன்றத் தொகுதிகள் ம.ம.ச.கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும்- டத்தோஸ்ரீ தனேந்திரன்

ரா.தங்கமணி

நீலாய்-

வரும் 15 ஆவது பொதுத் தேர்தலில்  3 நாடாளுமன்றத் தொகுதிகள், 7 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தேசிய முன்னணி வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மலேசிய மக்கள் சக்தி கட்சி முன்வைத்துள்ளது.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 12ஆவது தேசிய பேராளர் மாநாடு இன்று நீலாய் டிவிசி லிட்டில் சென்னை மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு தொடர்ந்து போராடி வரும் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர்கள் தேர்தலில் களமிறக்கப்பட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் வலியுறுத்தினார்.

அதன் அடிப்படையில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளும் 7 சட்டமன்றத் தொகுதிகளும் மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் பேராளர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் சொன்னார் தெரிவித்தார்.

அதோடு தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக மலேசிய மக்கள் சக்தி கட்சி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சபாவில் 60,70ஆம் காலகட்டங்களில் குடியேறிய இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாட்டின் பொதுத் தேர்தல், இடைத் தேர்தல்களில் தேமுவின் வெற்றிக்காக பாடுபட்டு வரும் மலேசிய மக்கள் சக்தி கட்சியை அங்கீகரிக்கும் இந்த தீர்மானங்களை தம் ஏற்றுக் கொள்ளும் என நம்புவதாக டத்தோஸ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.

இதனிடையே, சிலிம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது ம.ம.ச.கட்சிக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடிவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தேமு/ அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி உறுதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ம.ம.ச.கட்சியின் பேராளர் மாநாட்டில் தேமு துணைத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா முகமட் ஹசான் கலந்து கொண்டு மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இதில் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள், தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் 700க்கும் மேற்பட்ட பேராளர்களும் கலந்து கொண்டனர்.

Saturday 26 December 2020

MIED: 15,000 மாணவர்களுக்கு வெ.163 மில்லியன் கல்வி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது- டத்தோஶ்ரீ சரவணன்

 கோலாலம்பூர்-

மஇகாவின் கல்விக் கழகமான எம்.ஐ.இ.டி.  (MIED) மூலம் இதுவரை 163 மில்லியன் வெள்ளி இந்திய சமுதாய மாணவர்களுக்கு கல்வி கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

இந்திய சமுதாயம் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் பலவீனமாக உள்ள நிலையில் கல்வி ஒன்றே இந்திய சமுதாயத்தின் பலம் என்பதை உணர்ந்து 1984இல் தொடங்கப்பட்ட எம்.ஐ.இ.டி. மூலம் இதுவரை 15,000 இந்திய மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

கோவிட்-19 பாதிப்பு காரணமாக பல நிறுவனங்கள், அமைப்புகள் கல்வி உதவிநிதி கொடுப்பதை நிறுத்திக் கொண்டாலும் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா கடந்த ஈராண்டுகளை காட்டிலும் இம்முறை அதிகமான கல்வி நிதியை வழங்கியுள்ளது என்று  மஇகாவின் துணைத் தலைவர் டத்தோ சரவணன் கூறினார்.

இன்று நடைபெற்ற எம்ஐஇடி கடனுதவி காசோலைகள் வழங்கும் நிகழ்வில் 301 மாணவர்களுக்கு 5.8 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டது.


15ஆவது பொதுத் தேர்தலை முன்னிறுத்திய தீர்மானங்களோடு மலேசிய மக்கள் சக்தி மாநாடு- டத்தோஶ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர்- 
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 12ஆவது  தேசிய பேராளர் மாநாடு நாளை 10.30 மணிக்கு நீலாயிலுள்ள டிவிசி லிட்டல் சென்னை மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தேசிய பேராளர் மாநாட்டை தேசிய முன்னணியின் துணைத் தலைவர் டத்தோ முகமட் ஹஸான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கும் வேளையில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் சிறப்பு வருகை புரியவுள்ளார் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

15ஆவது பொதுத் தேர்தலை முன்னிறுத்தி இந்த பேராளர் மாநாட்டில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. மேலும் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் சிறப்பு பணிக்குழு நாளைய மாநாட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக எஸ்ஓபி நடைமுறைகளை பின்பற்றி புதிய அணுகுமுறையில் பேராளர் மாநாடு நடத்தப்படவுள்ளது என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் கூறினார்.

Saturday 12 December 2020

டத்தோ சராணி தலைமையிலான மாநில அரசில் இந்தியர் நலன் விடுபட்டு விடாது- டத்தோ இளங்கோ

ரா.தங்கமணி

ஈப்போ- 

பேரா மாநில 14ஆவது மந்திரி பெசாராக பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்ட டத்தோ சரானி முகமதுக்கு பேரா மாநில மஇகா வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டது.

மாநில மந்திரி பெசாராக பதவி வகித்து வந்த டத்தோஶ்ரீ ஃபைசால் அஸுமு அப்பதவியிலிருந்து வீழ்த்தப்பட்ட பின்னர் அரசியல் நெருக்கடி பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

பேரா மாநில மந்திரி பெசாராக பதவியேற்றுக் கொண்ட டத்தோ சராணி, அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய சிறந்த ஆட்சியை வழங்குவார் என்பதில் பேரா மஇகா நம்பிக்கைக் கொண்டுள்ளது என்று மாநில மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ தெரிவித்தார்.

2018 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அம்னோ தலைமைத்துவத்தில் அமைந்துள்ள பேரா மாநில அரசில், இந்தியர்களின் நலன் விடுபட்டு விடாத சூழலில் மஇகா அணுக்கமான உறவை புதிய மந்திரி பெசாருடன் கொண்டிருக்கும் என்றும் அவர் மேலும் சொன்னார்.

பேரா மந்திரி பெசாராக பதவி வகித்த பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஃபைசால் அஸுமு மாநில சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி கண்டதை அடுத்து அப்பதவியிலிருந்து விலகினார்.

அணமையில் பேரா மந்திரி பெசாராக பதவியேற்றுக் கொண்ட டத்தோ சராணிக்கு டத்தோ இளங்கோ மாலை அணிவித்து சிறப்பு செய்தார். பேரா மஇகாவைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் தொகுதித் தலைவர்களும் உடனிருந்தனர்.


Friday 4 December 2020

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தார் பேரா மந்திரி பெசார்

ஈப்போ-

பேரா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அஹ்மாட் பைசால் அஸூமு மீது கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்ததை அடுத்து அப்பதவியிலிருந்து அவர் விலகவுள்ளார்.

இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் டத்தோஶ்ரீ பைசால் அஸுமுவுக்கு எதிராக 48 வாக்குகளும் ஆதரவாக 10 வாக்குகளும் கிடைத்தன. ஒருவர் வாக்களிக்கவில்லை.

பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்துள்ள டத்தோஶ்ரீ பைசால் அஸுமு பேரா சுல்தானை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்களின் முடிவை முன்வைக்கவுள்ளார்.

நாட்டின் நடப்பு சூழலில் சட்டமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு வழிவிடுவதை காட்டிலும் சுமூகமான முறையில் அதிகார மாற்றம் நிகழலாம் என்று டத்தோஶ்ரீ பைசால் அஸுமு சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

இதனிடையே, பேரா மாநிலத்தில் புதிய மந்திரி பெசாராக மாநில அம்னோ தலைவர் டத்தோ சராணி பதவியேற்பதற்கு ஏதுவாக பேரா சுல்தானை சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Thursday 3 December 2020

தைரியம் இருந்தால் மஇகாவை ரத்து செய்யுங்கள்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் காட்டம்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

தைரியம் இருந்தால் மஇகாவை ரத்து செய்து பாருங்கள் என்று கெடா மந்திரி பெசார் முகமட் சுனுசி முகமட் நோருக்கு சவால் விடுத்தார் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்.

ஆலய உடைப்பு விவகாரங்களில் தன்மூப்பாக செயல்பட்டு வருகிறது பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசு.

கெடா மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியமைத்த குறுகிய காலத்திலேயே இரு ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன.

ஆலய உடைப்பு விவகாரம் குறித்து குரல் எழுப்பிய மஇகாவை தடை செய்ய வேண்டும் என்று கெடா மந்திரி பெசார் கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்திய சமுதாயத்தின் உரிமைக்காக மஇகா தொடர்ந்து குரல் கொடுக்கும்.

பாஸ் கட்சியின் இரட்டை முகம் இப்போதுதான் புரிகிறது. ஆட்சியில் இல்லாதபோது ஒரு முகமும் ஆட்சியில் அமர்ந்த பின்னர் இன்னொரு முகத்தையும் பாஸ் கட்சி காட்டுகிறது.

வெளுத்ததெல்லாம் பால் என நம்பி மஇகா ஏமாந்து விட்டது. இப்போதுதான் பாஸ் கட்சியின் உண்மை முகம் தெரிகிறது.

இந்திய சமுதாயத்திற்காக குரல் கொடுப்பதை மஇகா ஒருபோதும் நிறுத்தாது. 

மஇகா தடை செய்ய வேண்டும் என கூறியுள்ள முகமட் சனுசி, முடிந்தால் மஇகாவை தடை செய்து பாருங்கள் என்று விக்னேஸ்வரன் சவால் விடுத்தார்.

Saturday 28 November 2020

MKPMS தலைவராக கணபதிராவ் நியமனம்- மலேசிய இந்தியர் குரல் வாழ்த்து

 ஷா ஆலம்-

சிலாங்கூர் மக்கள் சமூகநல மேம்பாட்டு கழகத்தின்(MKPMS) தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவுக்கு மலேசிய இந்தியர் குரல் (MIV) வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டது.

இந்த நியமனப் பதவியின் வழி ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் இன்னும் சிலாங்கூர் மாநில மக்களுக்கு சமூக நல மேம்பாட்டு உதவிகளுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று அவ்வியக்கத்தின் பொதுச் செயலாளர் ரா.ஆனந்தன் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகள், தனித்து வாழும் தாய்மார்கள், முதியவர்கள் ஆகியோருக்கான சமூகநல உதவித் திட்டங்களில் ஆக்ககரமான செயலாக்க திட்டங்கள் வரையறுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆனந்தன் மேலும் கூறினார்.

Thursday 26 November 2020

இந்திய தொழில்முனைவர்களுக்கு வெ.200 மில்லியன் கடனுதவி- மைக்கி பரிந்துரை

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

இந்திய தொழில் முனைவர்கள் தங்களது வர்த்தகங்களை மேம்படுத்தி கொள்ள வெ. 200 மில்லியன் ஒதுக்கப்பட வேண்டும் என  நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் (மைக்கி) தெரிவித்தது.

கோவிட்-19 வைரஸ் தொற்றினால் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. அதிலும் இந்திய தொழில் நிறுவனங்கள் பெரும்  பாதிப்பை சந்தித்துள்ளன. அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு  அரசாங்கம் தொழில் நிறுவனங்களுக்கு வர்த்தக கடனுதவிகளை வழங்க வேண்டும்.

அதன் அடிப்படையில் இந்திய தொழில் முனைவர்களுக்கு உதவி புரியும் நோக்கில் வெ.200 மில்லியன் கடனுதவி திட்டத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ரூலிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக மைக்கியின் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த கடனுதவித் திட்டத்தை எஸ்எம்இ உட்பட நாட்டில் செயல்படும் வங்கிகளின் மூலம் துரிதப்படுத்தலாம் என்ற அவர், இதனை கண்காணிக்கும் நடவடிக்கையாக செயலகம் ஒன்றை அமைக்கும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டது என்றார் அவர்.

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் மித்ராவுக்கு அறிவிக்கப்பட்ட வெ.100 மில்லியவை தவிர்த்து கூடுதலாக வெ.200 மில்லியன் கடனுதவித் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்று நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அதே போன்று தெக்குன் கடனுதவித் திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட வெ. 20 மில்லியனை வெ.50 மில்லியனாக உயர்த்துவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

நிதியமைச்சருடனான சந்திப்பில் மைக்கியின் தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் ஏ.டி.குமாரராஜா, மைக்கியின் செயலவை உறுப்பினர்கள், முஸ்லீம் , சீன வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Thursday 19 November 2020

ஜாலான் பங்சாரில் அடையாளம் காணப்படாத ஆடவரின் சடலம் மீட்பு

 கோலாலம்பூர்-

உடலில் பல்வேறு காயங்களுடன் காணப்பட்ட 30 வயதுக்குட்பட்ட ஆடவரின் சடலம் ஜாலான் பங்சாரின் கண்டெடுக்கப்பட்டது.

அதிகாலை 5.38 மணியளவில் சாலையோரத்தில் படுத்திருந்த நிலையில் காணப்பட்ட ஆடவரின் சடலம் இன்னும் அடையாளம் காணப்பட்டவில்லை என்று பிரீக்பீல்ஸ்ட் காவல் நிலைய தலைவர் ஸைருனிஸாம் முகமட் ஸைனுடின் தெரிவித்தார்.

பந்தாய் டாலாம் நோக்கி செல்லும் சாலையில் அசைவற்ற நிலையில் ஆடவர் கிடப்பதாக மலாய் ஆடவரிடமிருந்து போலீஸ் தகவலை பெற்றது. அவ்வாடவரிடம் எவ்வித அடையாள ஆவணங்களும் காணப்படவில்லை. கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதால் அவ்வாடவர் உயிரிழந்திருக்கலாம். செக்‌ஷன் 302 குற்றவியல் சட்டத்தின் கீழ் இச்சமபவம் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்

 இவ்விசாரணைக்கு உதவும் பொருட்டு தங்களது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் காணவில்லையென்றால் 603-22979222 எனும் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி சவப்பரிசோதனைக்காக யூனிவர்சிட்டி மலாயா மருத்துவக் கழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

டாக்சி ஓட்டுனர்களுக்கு தீபாவளி பற்றுச்சீட்டுகளை வழங்கினார் செராஸ் எம்பி தான் கொக் வய்

ரா.தங்கமணி

செராஸ்-

உலகையே அச்சுறுத்தும் கோவிட்-19 வைரஸ் தொற்றால் வருமான பாதிப்புக்கு இலக்கான டாக்சி ஓட்டுனர்களும் தீபாவளி பெருநாளை கொண்டாடி மகிழும் வகையில் தீபாவளி பற்றுச்சீட்டுகளை வழங்கினார் செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கொக் வய்.



கோவிட்-19 பாதிப்பினால் கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் (எம்சிஓ) பல்வேறு தொழில்நிறுவனங்கள் முடக்கப்பட்டன. அதனால் பல நிறுவனங்கள் மூடப்பட்டதோடு பெரும்பாலானோர் வேலை இழப்புக்கும்  ஆளாகினார்.

மக்கள் நடமாட்டம் குறைந்ததால் பொதுமக்களையே பெரிதும் நம்பியிருக்கும் டாக்சி ஓட்டுனர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கினர். வருமானம் ஏதுமின்றி பாதிப்புக்கு இலக்கான துறைகளில் டாக்சி தொழிலும் ஒன்றாகும் என்று ஜசெக தலைவருமான தான் கொன் வய் விவரித்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு டாக்சி தொழில்துறையும் இன்றியமையாதது. எனவே பொருளாதார பாதிப்பை எதிர்நோக்கியுள்ள டாக்சி ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட அரசாங்கம் சிறப்பு உதவித் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மையில் நடைபெற்ற இந்த பற்றுச்சீட்டு வழங்கும் நிகழ்வில் கோலாலம்பூர் வட்டாரத்தில் சேவையில் ஈடுபட்டு  வரும் 200 டாக்சி ஓட்டுனர்களுக்கு தீபாவளி பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது.


Friday 13 November 2020

மைக்கி முயற்சியில் வியாபாரிகளுக்கு கட்டண முறையில் TNB சலுகை

கோலாலம்பூர்-

மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின்  சம்மேளனத்தின் தலைமையில் இந்திய வர்த்தகச் சங்கங்கள் நேற்று  டி.என்.பி நிறுவனத்துடன் சந்திப்பு நடத்தினர்.

முன்னதாக மலேசிய இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, டி.என்.பி நிறுவனம்  வர்த்தகர்களுக்குச் சில சலுகைகளை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை  டி.என் பி வாரிய  இயக்குனர்  டத்தோ ரவிச்சந்திரனிடம் மைக்கி  முன்வைத்தாக மைக்கியின் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று டத்தோ ரவிச்சந்திரன் தலைமையில் டி.என்.பி.யின் சி.ஆர்.ஓ அதிகாரி டத்தோ மெகாட் ஜலாலுதீன் பின் மெகாட் ஹசானுடன்  மைக்கி சந்திப்பு நடத்தியது.

இந்தச் சந்திப்பில் மைக்கியின் பொதுச்செயாலாளர் டத்தோ ஏ.டி குமாரராஜா, பிரிமாஸ் தலைவர் தி. முத்துசாமி, பிரேஸ்மா துணைத் தலைவர்  டத்தோ மோஹசின் மற்றும் கோலாலம்பூர் டி.என்.பி தலைமை அதிகாரி ஏ. சிவனாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement


இந்தப் பேச்சுவார்த்தையின் வாயிலாக இந்திய வியாபாரிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி, டத்தோ ரவிச்சந்திரனின் முயற்சியில் தீபாவளியை முன்னிட்டு கிடைத்துள்ளது.

டி.என்.பியின்  பாக்கி நிலுவைக்  கடனைஅதிகமாக வைத்துள்ள வியாபாரிகள், 6 மாதம் முதல் 2 வருட காலகட்டத்தில் தவணை முறையில் செலுத்த டி.என்.பி. நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது .

இந்தச் சலுகை, பாக்கி கடனுக்கு மட்டுமே. அந்தந்த மாதக் கட்டணத்தை முறையாக வியாபரிகள் மாதம் தோறும் செலுத்த வேண்டும்.

அதோடு இந்தச் சலுகை, மாநில வர்த்தகச் சம்மேளனம் மற்றும் இந்திய வர்த்தகச் சங்கங்களான மிம்தா, மிண்டாஸ், பிரிமாஸ், பிரஸ்மா, மீதா, மிக்ஜா இன்னும் சில வர்த்தகச் சங்கங்களின் வாயிலாகக் கோரிக்கை வைக்கும் வியாபாரிகளுக்கு வழங்கப்படுவதாக, மைக்கியின் பொதுச் செயலாளர்  டத்தோ  டாக்டர் ஏ.டி குமராராஜா தெரிவித்தார். 

வியாபாரிகள் மாநில வர்த்தகச் சம்மேளனம், அந்தந்த வர்ததகச் சங்கங்கள் வாயிலாக  அணுக, இதற்கான விளக்கங்களைப்  பெற்றுக்கொள்ளலாம். அதோடு சங்கத்தின் வாயிலாக வரும் கோரிக்கை பாரங்களை மைக்கி பரிசீலனை செய்து,  இந்தச் சலுகையைப் பெற்றுத் தரும் என டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா தெரிவித்தார்.

இவ்வேளையில், இந்தப் பிரச்னைக்கு உடனடி தீர்வு கண்ட டத்தோ ரவிச்சந்திரனுக்கு, மைக்கி நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதாக டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா தெரிவித்தார்!


ஆடம்பரம் தவிர்த்து ஆரோக்கியம் காப்போம்; டத்தோஶ்ரீ சரவணனின் தீபாவளி வாழ்த்து

 கோலாலம்பூர்-

இந்த வருட தீபாவளி இந்த நூற்றாண்டின் இதுவரை கண்டிராத ஒரு திருநாளாக, வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் குறிப்பிட்டார்.

தீபாவளி சந்தைகள் கிடையாது, தீபாவளி ஆரவாரம் கிடையாது, திறந்த இல்ல உபசரிப்பு கிடையாது, உற்றார் உறவினர் ஒன்று கூடல் கிடையாது.

ஆனால் அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வணங்கி, பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெற்று, வீட்டில் விளக்கேற்றி இருளை விலக்கி ஒளிபரப்பச் செய்வோம்.

உறவுகளை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும், மனதளவில் இணைந்து ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து மகிழ்ச்சியாய் கொண்டாடுவோம்.

ஆக இந்த வருடம் மனித நேயத்துடன், நம்மிடம் உள்ளதை அக்கம் பக்கத்தினர், உற்றார் உறவினர், நண்பர்கள் என அனைவரோடும் பகிர்ந்து குறிப்பாக இல்லாதோர்க்குக் கொடுத்து மகிழ்வோம். இதுநாள் வரை ஆடம்பரத் தீபாவளியாகக் கொண்டாடியிருக்கலாம். இன்று அந்த வசதி இல்லாமல் போகலாம். ஆனால் இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையோடு சிக்கனமாக இந்த தீபாவளியை வரவேற்போம்.

Advertisement

அரசாங்கம் விதித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாடு, முகக்கவசம் அணிதல், இடைவெளிவிட்டு இருத்தல், போன்ற கொரோனா பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடித்து சுகாதார முறையில் இந்த வருட தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வோம்.

கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து இன்னும் நாம் விடுபடவில்லை. அதோடு பொருளாதாரச் சிக்கல் வேறு. இதை எதிர் கொள்ள இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. மாற்றம் ஒன்றே மாறாதது. நம்மை பொருளாதார ரீதியாக உயர்த்திக் கொள்ள நம்மிடம் உள்ள திறமைகளை, தொழில்திறன்களை மேம்படுத்திக் கொள்வோம். அரசாங்கத்தின் திட்டங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உழைப்பதற்கு நம்மை தயார் படுத்திக் கொள்வோம்.

இப்படி பிரச்சனைகளைச் சந்திக்கும் வேளையில் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம். மகிழ்ச்சியாய், கோலாகலமாய் கொண்டாடிய தருணங்களைச் சிந்தித்து பார்ப்போம். இந்த தருணத்தில் ஆடம்பரம் அல்ல ஆரோக்கியம்தான் முக்கியம் என்பதை உணர்வோம்.

தீபாவளியின்  தத்துவம் இருள் நீங்கி ஒளி பிறக்கும், தீமை அழிந்து நன்மை பிறக்கும். அதே போல் கொரோனா நீங்கி சுதந்திரமாய் வாழும் நாள் தொலைவில் இல்லை என நம்புவோம். உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் என்று மஇகா தேசிய துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ சரவணன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

Wednesday 11 November 2020

கிராண்ட் ஆசியான் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது 'பரமபதம்'-விக்னேஷ் பிரபு

ரா.தங்கமணி

கோலாலம்பூர்- 

திரைக்கு வரும் முன்னே பல்வேறு விருதுகளை குவித்துள்ள ‘பரமபதம்; திரைப்படம்  கிராண்ட் ஆசியான் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

மலேசியாவில் முதல் முறையாக பேண்டஸி  திரைப்படமாக உருவாகியுள்ள ‘பரமபதம்’ திரைப்படத்தை விக்னேஷ் பிரபு, தனேஷ் பிரபு சகோதரர்கள் இயக்கியுள்ளனர்.

திரையிடப்படுவதற்கு முன்பே  உலக அளவில் 34 போட்டிகளில்  பங்கேற்று 16 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. இன்னும் இரு விருதுகளை பெறவில்லை. இந்நிலையில் IMDB (Internet Movie Data Base) நற்சான்றிதழை பெற்றுள்ள ‘பரமபதம்’ திரைப்படம்  மலேசிய சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது என்று இயக்குனர் விக்னேஷ் பிரபு தெரிவித்தார்.

கிராண்ட் ஆசியான் நற்சான்றிதழ்

இந்நிலையில் இந்தியாவை தளமாகக் கொணடு செயல்படும் கிராண்ட் ஆசியா உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. மிக பெரிய சாதனையாக கருதப்படும்  கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் பிரிவின் கீழ் உள்ள இந்த கிராண்ட் ஆசியா உலக சாதனை புத்தகத்தில் 18 விருதுகளை வென்ற பேண்டஸி திரைப்படம் என இடம்பெற்றுள்ளது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளதாக அவர் சொன்னார்.

Advertisement

மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதுக்கு அடுத்த நிலையிலான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 26ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டிய  இத்திரைப்படம் கோவிட்-19 பாதிப்பு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் சரியான தருணத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறோம்.

இயக்குனர் விக்னேஷ் பிரபு

ரசிகர்களை நிச்சயம் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘பரமபதம்’ திரைப்படத்திற்கு மலேசியர்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று விக்னேஷ் பிரபு கேட்டுக்  கொண்டார்.

Monday 9 November 2020

தமிழ்ப்பள்ளிகளுக்கான மானிய ஒதுக்கீட்டை நிதியமைச்சர் விரைவில் அறிவிப்பார்- டத்தோஶ்ரீ சரவணன்

 ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

அண்மையில் அறிவிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான  வரவு செலவு திட்டத்தில் (பட்ஜெட்)  தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் ஒதுக்கீடு செய்யப்படாதது இந்திய சமுதாயத்தில் அதிருப்தி அலை ஏற்படுத்தியுள்ளதை நன்கு அறிவேன். ஆனால் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 பில்லியன் வெள்ளியில் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிச்சயம் மானியம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஸஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ் வாக்குறுதி வழங்கியுள்ளார் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன் வெள்ளி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளது. அப்போது அந்நிதி ஒதுக்கப்பட்டதில் தம்முடைய பங்கும் இருந்தது

ஆனால் 2021க்கான பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் ஒதுக்கப்படாதது குறித்து அரசியல் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ள நிலையில் தாமும் நிதியமைச்சரிடம் இவ்விவகாரம் தொடர்பில் முறையிட்டுள்ளேன்.

Advertisement

புதிய பட்ஜெட்டில் தேசியப்பள்ளி, தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளி  என்று பாகுபாடு பிரிக்காமல் அனைத்துப் பள்ளிகளையும் ஒன்றிணைத்து 50 பில்லியன் வெள்ளி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் நிச்சயம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்.

கூடிய விரைவில் தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் தொடர்பில் நிதியமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார். அதுவரை இந்திய சமுதாயம் அமைதி காக்க வேண்டும் என்று டத்தோஶ்ரீ சரவணன் வெளியிட்டுள்ள காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.


சுகாதாரப் பிரச்சினையால் காலை இழந்த காந்தனுக்கு தமிழால் நாம் இயக்கம் உதவி

ரா.தங்கமணி

ஈப்போ-

தமிழால் நாம் இயக்கத்தின் முயற்சியில் புந்தோங் வட்டாரத்தைச் சேர்ந்த காந்தன் /பெ செயமணியத்திற்குச் சுயத்தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இளம் வயதிலேயே முதுகுத் தண்டு பிரச்சனையால் நடக்க முடியாமல் சில ஆண்டுகளுக்கு முன் தனது இடது காலையும் இழந்தார் காந்தன். ஆயினும் தன் விடாமுயற்சியாலும் பல நல்லுள்ளங்களின்  உதவியாலும்  தனது கைவினைப் பொருட்களை ஈப்போ சுற்றுவட்டாரத்தில்  பண்டிகை விழாக் காலங்களில் விற்று தன் வாழ்வுக்கு பொருளாதாரம் ஈட்டி வந்தார்

இருப்பினும் தற்போது சுகாதாரப் பிரச்சனைகளை எதிர் நோக்கி உள்ள அவர்  தனது சுயத்தொழிலை மேற்கொள்ள முடியாமல் போனதாகவும், கோறனி நச்சுப் பரவாலால் நாட்டில் அறிவிக்கப்பட்ட நடமாட்டக்  கட்டுபாட்டு ஆணையாலும்  தனது அன்றாட வாழ்க்கைச் சுமை இன்னும்  அதிகரித்துள்ளதாகவும் அதனால் தனது பொருளாதாரம் தடைக் பட்டுள்ளாதாகவும் தன்னிடம் தெரிவித்தார் என்று "தமிழால் நாம்" இயக்க ஒருங்கிணைப்பாளரான  ரா.கதிரவன் தெரிவித்தார்.

முருகன் மாரிமுத்து

தற்போது அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினங்களைச் சமாளிக்க சமூகநலத் துறை வழங்கும் உதவித் தொகை மருத்துவச் செலவுக்கேப் போதாத நிலையில், தனக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட்டால், தனது சுயத் தொழிலை மீண்டும் தொடர்வேன் என்று தன்னம்பிக்கையுடன் "தமிழால் நாம்" இயக்கத்தினரை அனுகிய காந்தன் தெரிவித்தார். அவருக்கு  நம்பிக்கை ஒளியை விதைக்கும் வகையில் தனது இயக்க உதவியுடன் நன்கொடை வசூலிக்கப்பட்டு,   கைவினை பொருட்கள் தயாரிக்க  வெ.1200 மதிப்புள்ள அச்சுக் கருவிகள்,  சில உபகரணங்களும் வழங்கியதாக  முருகன் மாரிமுத்து விவாரித்தார்.

கதிரவன் ராஜா

"தமிழால் நாம்' புலனக்குழுத்  தொடங்கப்பட்டு இரண்டு மாதமே ஆன   போதிலும் அது சமுதாயச் சிந்தனைகளுடன் செயல்பட்டு வருகிறது என்றும், கடந்த செப்டம்பர் 27-ஆம் திகதி  " மக்கள் தொகை இயக்கம்" நடத்திய இயங்கலை மூலம் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதையும், தொடர்ந்து பல செயல் திட்டங்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழர் வாழ்வுக்குக்காவும் திட்டமிடப் பட்டுள்ளதாகவும், தகுந்த நேரத்தில் அவை செயல் வடிவம் பெறும் எனவும் இயக்கப் பொறுப்பாளர்கள்  தெரிவித்தனர்.  ஒரு கை ஓசை எழுப்பாது என்ற கருத்துக்கேற்ப எம் தமிழ் மக்கள் கரம் கோர்த்து இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மேலும் இயக்கத்தின் நிர்வாக அமைப்பினர் கேட்டுக் கொண்டனர்.


Sunday 8 November 2020

உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கி பல்வேறு சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக உயர்கல்விக்கூடங்கள் மூடப்பட்டு இணையம் வாயிலாக கல்வி போதனாமுறைகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் இங்கு பி40 பிரிவு குடும்பத்தைச் சேர்ந்த உயர்கல்வி மாணவர்கள் இணையம் வழி கல்வி பயில போதிய உபகரணங்கள் இல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர்.

இவ்விவகாரம் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட சூழலில் 30 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டார்.

அவ்வகையில் இன்று இங்குள்ள தேசிய முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 30 மாணவர்களுக்கும் மடிக்கணினிகளை டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வழங்கினார்.


ஷா ஆலம் நிர்வணா நினைவுப் பூங்காவில் துப்புரவுப் பணி

 ரா.தங்கமணி

ஷா ஆலம்-

தீபாவளி பெருநாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் தங்களது முன்னோர்களை வழிபாடு செய்வது இந்துக்களின் முதன்மை கடமையாகும். அவ்வகையில் மரணித்து விட்ட தங்களது உறவுகளை நினைவுக் கொள்ளும் வகையில் தீபாவளி பெருநாளின் முதல் நாளன்று கல்லறை வழிபாட்டை இந்துக்கள்  மேற்கொள்வர்.

அதன்  அடிப்படையில் இங்கு  ஷா ஆலம், செக்‌ஷன் 21இல் உள்ள நிர்வணா நினைவு பூங்காவில் இந்துக்கள் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

6ஆவது ஆண்டாக மேற்கொள்ளப்படும்  இந்த துப்புரவுப் பணி  சிலாங்கூர் கைலாசம் சமூகநல இயக்கம் (ஷா ஆலம் கைலாசம் காஸ்கேட்), சிலாங்கூர் மில்லினியம் சமூகநல இயக்கம், சிலாங்கூர் இந்திய சமூகநல சங்கம், சாய் சிவம் காஸ்கேட் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக இந்த துப்புரவுப் பணியை 3 இயக்கங்கள் முன்னெடுத்து வந்த நிலையில் தற்போது சாய் சிவம் காஸ்கேட் இயக்கம் தம்முடன் இணைந்து தோள் கொடுத்தது என்று சிலாங்கூர் மில்லினியம் சமூகநல இயக்கத்தின் தலைவர் டத்தோஶ்ரீ கே.சரவணன் தெரிவித்தார்.

மரணத்திற்கு பின்னர் துயில் கொள்கின்ற இந்த நினைவுப் பூங்காவில் இந்துக்கள் தங்களது உறவுகளை வழிபடுவதற்கு ஏதுவாக  இந்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார்.

தீபாவளி காலகட்டத்தில்  மட்டுமல்லாது பிற நாட்களிலும் தங்களது உறவுகள் துயில் கொள்கின்ற நினைவுப் பூங்காக்களில் துப்புரவுப் பணி மேற்கொள்வது அவசியம் என்று டத்தோஶ்ரீ கே.சரவணன், சிலாங்கூர் கைலாசம் சமூகநல இயக்கத்தின் தலைவர் குனேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த துப்புரவுப் பணியில் கோலசிலாங்கூர் புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஷோபா செல்வராஜு, ஷா ஆலம் நகராண்மைக் கழக உறுப்பினர் எஸ்பி சரவணன் செல்வராஜு, சிலாங்கூர் இந்திய சமூகநல சங்கத்தின் தலைவர் தினாகரன்,  சாய் சிவம் காஸ்கேட் இயக்கத்தின் பன்னீர், பத்மா,உட்பட பொதுமக்களும் பங்கேற்றனர்.


பி40 பிரிவைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் அன்பளிப்பு

ரா.தங்கமணி

ஷா ஆலம்- 

தீபாவளி பெருநாளை முன்னிட்டு பி40 பிரிவைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு உதவும் வகையில் அலாம் மெகா பகுதியைச் சேர்ந்த இந்திய சமூகத் தலைவர் கோபி 150 குடும்பத்தினருக்கு மளிகைப் பொருட்களை வழங்கினார்.

கோவிட்-19 வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் வருமானத்தை பெரும்பாலான இந்தியர்கள் இழந்துள்ளனர். இந்த நன்னாளில் அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு இந்த உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன என்று கோபி தெரிவித்தார்.

ஹைக்கோம், கம்போங் பாரு மண்டபத்திலும் அலாம் மெகா முத்து மாரியம்மன் ஆலயத்திலும் நடைபெற்ற இந்த அன்பளிப்பு நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கலந்து கொண்டு உணவுப் பொட்டலங்களை எடுத்து வழங்கினார்.



இந்நிகழ்வு குறித்து பேசிய கணபதிராவ், தமது கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியின் உள்ள பி40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஷா ஆலம் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ராய்டு, யுகராஜா, தர்மிஸி இந்திய சமூகத் தலைவர்கள் கோபி, பத்மநாதன், பொன்.சந்திரன் ஆகியோர் மளிகைப் பொருட்கள், பற்றுச்சீட்டுகள் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.

Advertisement

அதுமட்டுமல்லாது, இவ்வாண்டு மாநில அளவிலான தீபாவளி பொது உபசரிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை கொண்டு 4,000 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இவை இம்மாநிலத்திலுள்ள இந்திய சமூகத் தலைவர்களின் மூலம்  பி40 பிரிவினர் அடையாளம் காணப்பட்டு வழங்கப்படுகிறது.



இவ்வாண்டு தீபாவளி கொண்டாட்டத்தை மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டாடுவது அவசியமானது ஆகும் என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.



இந்த நிகழ்வின்போது அலாம் மெகா கிராமத் தலைவர் ஹாஜி மாலிக், ஷா ஆலம் நகராண்மைக் கழக உறுப்பினர் தர்மிஸி, இந்திய சமூகத் தலைவர் பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பட்ஜெட் 2021இல் இந்தியர்கள் புறக்கணிப்பு: டான்ஶ்ரீ விக்கியின் கூற்றே நிதர்சன உண்மை

எழுத்து: ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

மலேசிய இந்தியர்களின் வீழ்ச்சிக்கு மஇகாவே காரணம்... இந்தியர்களுக்கான மானியத்தை மஇகா கொள்ளையடிக்கிறது... மஇகாவை புறக்கணிக்கப்பட  வேண்டும் என்ற ஒவ்வொரு கோஷங்களுக்கு பின்னால் மஇகா எனும் மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சி புறக்கணிக்கப்பட்டதன் விளைவு இன்று ஆளும் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படும் நிலைக்கு மலேசிய இந்தியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

டான்ஶ்ரீ விக்கியின் நாளிதழ் அறிக்கை


கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இந்தியர்களை புறந்தள்ளி ஒதுக்கிய ஒரு வரவு செலவு திட்டமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது அரசியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் வரையிலும் உணர்ந்துள்ளனர்.

கோவிட்-19 பாதிப்பில் உலகமே முடங்கி போயுள்ள நிலையில் மலேசிய இந்தியர்களின் பொருளாதார, சமூக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் மித்ராவுக்கு 100 மில்லியன் வெள்ளியும் தெக்குன் கடனுதவி திட்டத்திற்கு 20 மில்லியன் வெள்ளியும் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப்பள்ளிக்கூடங்களுக்கு கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படாத 2021 பட்ஜெட் மீது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.

இன்றைய இந்த நிலைமைக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு ஒரே பதில் பலவீனமான சமுதாயமாக இந்தியர்கள் உருமாறி நிற்பதே ஆகும்.

'இன்றைய இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்பதை மறந்து விட்டார்கள்.  மஇகா ஒன்றும் செய்யவில்லை. வழங்கப்படும் மானியங்களை எடுத்துக் கொள்கிறார்கள் என்று பொதுத் தேர்தலில் மஇகாவை தோற்கடித்தார்கள். 

இறுதியில் என்ன நடந்தது? அரசாங்கத்தை உரிமையோடு தட்டிக் கேட்கும் உரிமையை மஇகா இழந்தது. ஒன்றும் கிடைக்கவில்லையே என்று இப்போது அழுவதால் என்ன பயன்?' என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறியுள்ள கருத்து இன்றைய சூழலுக்கு எவ்வளவு நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

இந்தியர்களை மட்டுமே சார்ந்திருந்த கட்சியான  மஇகாவை பலவீனப்படுத்தி பல இனங்களை உள்ளடக்கிய கட்சியான பிகேஆர், ஜசெக, அமானா, பாஸ் கட்சிகள் வலுவடைந்துள்ளன. ஆனால் இந்தியர்களுக்காக குரல் கொடுக்கும் வலிமை இந்திய சமூகம் இழந்து நிற்பதுதான் துயரிலும் துயரமானது.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின்போது 4 முழு அமைச்சர்கள், ஒரு துணை அமைச்சர் என 5 பேர் பதவி வகித்தபோதும் இந்தியர்களுக்கான பல விவகாரங்களில் 'மெளனம்' மட்டுமே பதிலாக கிடைத்தது.

Advertisement

இன்று பெரிக்காத்தா நேஷனல் அரசாங்கத்தில் அங்கம்  வகிக்கும் மஇகாவை பிரதிநிதித்து தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.

மக்களவையில் இந்தியர்களின் பிரதிநிதியாக எதிர்க்கட்சியில் 20 பேர் இருந்தாலும் அவர்களின் கதறலும் ஆவேசமும் ஒருபோதும் எடுபடாது. பலவீனமாக்கப்பட்ட மஇகாவின் பிரதிநிதியாக ஒருவர் மட்டுமே இருந்து கொண்டு மலேசிய இந்தியர்களின் பிரதிநிதியாக குரலெழுப்பச் சொன்னால் இந்தியர்களின் ஆதரவை இழந்து விட்ட கட்சி என மஇகாவின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படலாம்.

2008 தேர்தலுக்குப் பின்னர் மஇகா புறக்கணிக்கப்பட்டதன் விளைவு இன்று இந்திய சமுதாயத்திற்காக குரல் கொடுக்க தகுதியான மக்கள் பிரதிநிதி இல்லாத சூழலை உருவாக்கி உள்ளது.

இந்தியர்களே இந்தியர்களை சார்ந்துள்ள கட்சியையோ தலைவர்களையோ புறக்கணிக்கும்போது இந்திய சமுதாயம் கூனி குறுகியே நிற்க வேண்டிய அவலநிலைதான் தொடர்கதையாகும்.

பிகேஆர், ஜசெக ஆகிய கட்சிகளில் உள்ள இந்திய தலைவர்களை புறக்கணிக்காமல் அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதுபோல்  மஇகா தலைவர்களை புறக்கணிக்காமல் அவர்களையும் மக்கள் பிரதிநிதியாக உருவாக்குவோம். நம்முடைய பலத்தை நாமே கட்டமைப்போம். 

இனிமேலாவாது இந்திய சமுதாயம் விழித்துக் கொள்ளுமா?