Friday 23 February 2018

வசந்தபிரியா மரணம்: மரண நீதி விசாரணைக்கு அட்டெர்னி ஜெனரல் அலுவலகம் அனுமதி



ஜாவி-
தற்கொலைக்கு முயற்சித்து மரணத்தைத் தழுவிய மாணவி வசந்தபிரியாவின் மரண நீதி விசாரணைக்கு அட்டெர்னி ஜெனரல் அலுவலகம் அனுமதி வழங்கியிருக்கிறது.

இதனை உறுதிபடுத்திய பினாங்கு மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ அ.தெய்வீகன், இந்த அனுமதி கடந்த வாரம் தங்களுக்கு கிடைத்ததாகவும் மரண விசாரணை தொடங்குவதற்கான தேதிக்காக காத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

இந்த விசாரணைக்கு சாட்சியம் அளிக்க 30 பேர் அழைக்கப்படுவர் எனவும் இந்த மரண விசாரணை பொதுவில் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியரின் கைப்பேசியை திருடியது தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவி வசந்தபிரியா, கடந்த மாதம்  24ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆயினும் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 1ஆம் தேதி வசந்தபிரியா மரணமடைந்தார்.

நிபோங் தெபால் தேசிய இடைநிலைப்பள்ளியில் இரண்டாம் படிவம் பயின்று வந்த வசந்தபிரியா, தற்கொலைக்கு முயன்றதற்கு முன்னர் 'தான் அந்த கைப்பேசியை எடுக்கவில்லை எனவும் தான் ஒரு நிரபராதி எனவும்' கடிதம் எழுதி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment