Tuesday 30 October 2018

பெர்சத்துவில் சேர நால்வருக்கு தடை விதிப்பு- டத்தோஶ்ரீ முக்ரிஸ்

அலோர்ஸ்டார்-
அம்னோவில் உள்ள நான்கு பேரை தவிர வேறு யார் வேண்டுமானாலும் பெர்சத்து கட்சியில் இணையலாம் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்தார்.

பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ நஜிப், பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம், பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அஸிஸ் ஆகியோரை அந்த நால்வர் ஆவர்.

இந்நால்வரையும் ஏற்றுக் கொள்வதை  பெர்சத்து கட்சி எப்போதும் சீர் தூக்கி பார்க்காது.

அம்னோவில் உள்ள யார் வேண்டுமானாலும் பெர்சத்துவில் இணையலாம். சில நடைமுறைகளை பின்பற்றி அவர்கள் பெர்சத்து கட்சியில் இணைத்துக் கொள்ளப்படலாம் என டத்தோஶ்ரீ முக்ரிஸ் மேலும் சொன்னார்.

மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் புதிய சாதனை பதித்தது ஆஸ்ட்ரோ


புத்ரா ஜெயா-
இந்தியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை நினைவுபடுத்துவதில் கோலங்களின் பங்கு அளப்பரியதாகும். அவ்வகையில் இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1,600 சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள ஆஸ்ட்ரோ செய்திகள் குழுவினரின் கோலம் புதிய ஒரு சாதனையைப் பதித்து  மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

கிட்டத்தட்ட 15 மீட்டர் நீளத்திலும் 9.5 மீட்டர் அகலத்திலுமான இக்கோலத்திற்கு இன்று “Biggest Portrait Art Made of Multi Colored Grains” எனும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புத்ரா ஜெயாவிலுள்ள ஐஓஐ சிட்டி பேரங்காடியில் நடைபெற்றது. இந்த சான்றிதழை மலேசிய சாதனையாளர் புத்தகத்தின் பிரதிநிதி வழங்க ஆஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சிகளின் குழுமத் தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து பெற்று கொண்டார்.

மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள இக்கோலத்தை பொதுமக்கள் இன்று அக்டோபர் 29-ஆம் தேதி தொடக்கம் நவம்பர் 2-ஆம் தேதி வரை ஐஓஐ சிட்டி பேரங்காடியில் கண்டு களிக்கலாம். மலேசியாவின் மிகப் பெரிய கோலம் என அங்கீகாரம் பெற்றுள்ள இக்கோலத்தை 20 பேர் கொண்ட ஆஸ்ட்ரோ செய்திகள் குழுவினர்கள்,  தன்னார்வலர்கள்  10 மணி நேரத்துக்குள் உருவாக்கியுள்ளார்கள்.

டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கூறுகையில், “இந்த மிகப் பெரிய அழகான கோலத்தை உருவாக்கி மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடிக்க வைத்துள்ள அனைத்து தன்னார்வலர்கள், ஆஸ்ட்ரோ செய்திகள் குழுவினர்களுக்கு இவ்வேளையில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவர்களின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் இல்லையின்றால் இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதற்குச் சாத்தியமில்லை”, என்றார்.

அதை வேளையில் இந்நிகழ்ச்சியின் போது, நம் நாட்டின் 7ஆவது பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது வரலாற்றை மையப்படுத்திய 1 மணி நேரம் ஆவணப்படம் விரைவில் ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்படவுள்ளதாக செய்தி அறிவிக்கப்பட்டது. ‘மஹா சரித்திரம்’ எனும் தலைப்பில் ஒளியேறவுள்ள இந்நிகழ்ச்சியைத் தமிழ், மலாய், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் எதிர்பார்க்கலாம்.

லயன் ஏர் விபத்து; 189 பேரும் பலியாகியிருக்கலாம்- முதல் சடலம் மீட்பு

ஜகார்த்தா-
ஜாவா கடலில் விழுந்த லயன் ஏர் விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் மரணமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இன்று  காலை 6.20 மணியளவில் ஜகார்த்தாவிலிருந்து பங்கால் பினாங்கிற்கு புறப்பட்ட லயன் ஏர் விமானம் 13 நிமிடங்களில் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை துண்டித்துக் கொண்டது.

மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் கடலில்
விமானம் விழுந்ததை உறுதி செய்தனர்.

இவ்விமானத்தில் ஒரு குழந்தை, இரு சிறுவர்கள் உட்பட 189 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் இரு விமானிகளும், 6 பணியாளர்களும் அடங்குவர்.
இதனிடையே, தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒரு பயணியின் சடலத்தை மீட்டுள்ளனர். மரணடைந்தவர் யார் என்பதை கண்டறிய சடலம் சவப்பரிசோதனை கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பயணிகளில் கைப்பை உட்பட பல்வேறு பொருட்கள்
கைப்பற்றப்பட்டுள்ளன.

மக்களுக்கான சேவையை முன்னெடுக்கவே போட்டியிட்டேன்- கேசவன்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் வட்டார மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் பொருட்டே இத்தொகுதியின் பிகேஆர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் என்று சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் தெரிவித்தார்.

மக்களின் பிரதிநிதியாகவும் கட்சியின் தலைவராகவும் விளங்கும் வேளையில் கட்சிக்கும் மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்கிட முடியும்.

அதன் அடிப்படையிலேயே இத்தொகுதியின் பிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். நான்கு முனைப் போட்டி நிலவிய போதிலும் கட்சியினர் வற்றாத ஆதரவை வழங்கியுள்ளனர்.

தனது வெற்றிக்கு வாக்களித்த கட்சியினருக்கு நன்றி கூறி கொள்ளும் வேளையில் மக்களுக்கான எனது சேவை துரிதமாக மேற்கொள்ளப்படும் என கேசவன் கூறினார்.

கடலில் விழுந்தது பயணிகள் விமானம்


ஜகார்த்தா-
காணாமல் போனதாக கூறப்பட்ட லயன் ஏர பயணிகள் விமானம் கடலில் விழுந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சும் வான் போக்குவரத்து இலாகாவும் இதை உறுதி செய்துள்ள நிலையில் அந்த விமானம் கடலில் விழுவதற்கு முன்னர் சுகார்த்தோ-ஹாத்தா அனைத்துலக விமான நிலையத்திற்கு திரும்புவதற்கு விமானி சமிஞ்சை கொடுத்துள்ளார். ஆயினும் அதற்குள் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை அது இழந்துள்ளது.

இன்று காலை 6.20 மணியளவில் ஜகார்த்தாவிலிருந்து பங்கால் பினாங்கிற்கு புறப்பட்ட லயன் ஏர் விமானம் 13 நிமிடங்களில் தனது தொடர்பை இழந்தது.


பயணிகள் விமானம் மாயமானது: கடலில் விழுந்ததா?


ஜகார்த்தா-
ஜகார்த்தாவிலிருந்து பங்கால் பினாங்கிற்கு புறப்பட்ட லயன் ஏர் பயணிகள் விமானம் ஒன்று காணாமல் போனது.

ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து இன்று காலை 6.20 மணிக்கு புறப்பட்ட அவ்விமானம் 13 நிமிடங்களில் தகவல் தொடர்பு கோபுரத்துடனான சிக்னலை இழந்தது.

காணாமல் போன விமானத்தை தேடும் பணி முடக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமல் போன விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருப்பதாக தகவல்கள் வருகின்றன. விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பதாக கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் எத்தனை பயணிகள் பயணித்துள்ளனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

Monday 29 October 2018

தேமுவில் மக்கள் சக்தி கட்சி; உருமாற்றத்திற்கு வழிவகுக்கும்- டத்தோஶ்ரீ தனேந்திரன்

ரா.தங்கமணி

ஈப்போ-
உருமாற்றம் காணவுள்ள தேசிய முன்னணி கூட்டணியில் மலேசிய மக்கள் சக்தி கட்சி இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. ஒரு போராட்ட காலத்திலேயே நாங்கள் தேசிய முன்னணியுடன் இணைய முயற்சிக்கிறோம் என்று அதன் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேமு கூட்டணியில் இடம்பெற்றிருந்த 13 கட்சிகளில் 10 கட்சிகள் வெளியேறி விட்டன. ஆயினும் தேமுவின் போராட்ட காலத்திலும் மலேசிய மக்கள் சக்தி கட்சி துணையாக நிற்கிறது.

தேமுவின் உருமாற்றத்தில் புதிய கட்சிகள், இயக்கங்கள் இடம்பெறலான் என்று அதன் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி கோடி காட்டியுள்ளார். அவ்வகையில் மக்கள் சக்தி கட்சிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

இப்போது ஆளும் கட்சியாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கி விட்டனர். ஆட்சியை கைப்பற்றி ஆறு மாதகாலம் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பக்காத்தான் ஹராப்பான் தோல்வி கண்டுள்ளது.

மக்களின் நம்பிக்கை மீண்டும் பெறும் வகையில் தேசிய முன்னணி உருமாற்றம் காண்பதற்கு மலேசிய மக்கள் சக்தி கட்சி உறுதுணையாக இருப்பதோடு ஆக்ககரமாகவும் செயல்படும் எனவும் டத்தோஶ்ரீ தனேந்திரன் கூறினார்.

பண்டார் பூச்சோங் ஜெயா மாரியம்மன் ஆலயத்திற்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது

ரா.தங்கமணி

பூச்சோங்-
பண்டார் பூச்சோங் ஜெயாவில் அமைந்துள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கான நிலப்பட்டா ஆலய நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக நிலப் போராட்டத்தை எதிர்கொண்டுள்ள இவ்வாலயம்  நிலத்தை பெறுவதற்கு கடந்த தேசிய முன்னணி அரசாங்கத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது.

ஆயினும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் ஆலய நிர்வாகம் தோல்வி கண்ட நிலையில் மக்கள் கூட்டணி ஆட்சியின்போது சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

பின்னர் இந்நில விவகாரம் கிடப்பில் போடப்பின்னர் மீண்டில் 2013ஆம் ஆண்டுக்கு பின்னர் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட வேளையில் மீண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

பிறகு மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையின் காரணமாக இவ்வாலயம் அமைந்துள்ள முக்கால் ஏக்கர் நிலம்  ஆலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலம் அதிக விலைமதிப்பு மிக்கது என்பதோடு அது மேம்பாட்டு நிலமாகவும் வகைபடுத்தப்பட்டிருந்தது. ஆயினும் ஆலய நிர்வாகத்தினார் ஒன்றாக இணைந்து எவ்வித பிளவுகளும் சுயநலமுமின்றி செயல்பட்டதன் விளைவாகவே இந்நிலம் ஆலயத்திற்கு கையகப்படுத்தப்பட்டது.

இவ்வேளையில் ஒற்றுமையாக இருந்து ஆலய நிலத்தை பெற நடவடிக்கை மேற்கொண்ட ஆலய நிர்வாகத்தினருக்கு நன்றி கூறி கொள்வதாக குறிப்பிட்ட கணபதிராவ், இதேபோன்று சீபில்ட் மாரியம்மன் ஆலயமும் ஒன்றாக செயல்பட்டிருந்தால் இன்று எவ்வித சர்ச்சையும் ஏற்பட்டிருக்காது என மேலும் சொன்னார்.

துன் மகாதீர் பதவி விலகினால் பக்காத்தான் கூட்டணி சிதறக்கூடும்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
பிரதமர் பதவியிலிருந்து துன் டாக்டர் மகாதீர் முகம்மது விலகும்போதும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சிதறக்கூடும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி இன்று ஆட்சி அமைத்திருப்பதற்கு துன் மகாதீரே காரணம். முன்பு  எதிர்க்கட்சியாக திகழ்ந்த அவர்களால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. மகாதீரின் வருகையாலே பக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைக்க முடிந்தது.

துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகும்போது நிச்சயம் அக்கூட்டணி சிதறக்கூடும். கெ அடிலான் கட்சியினருடன் இணைந்து ஜசெக செயல்பட முடியாது. நிச்சயம் அக்கூட்டணி பிரியக்கூடும் என்று நேற்று நடைபெற்ற மஇகாவின் 72ஆவது பொதுப் பேரவைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

தேசிய முன்னணி பெயர் மாற்றப்படலாம்- டத்தோஶ்ரீ ஸாயிட்


கோ.பத்மஜோதி

கோலாலம்பூர்-
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேசிய முன்னணியின் பெயர் மாற்றம் காணப்படலாம் என்று அதன்  தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

60 ஆண்டுகால ஆட்சியை நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் இழந்து விட்ட தேசிய முன்னணி மீண்டும் வலுவான கட்சியாக உருமாற சில மாற்றங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது.

அந்த மாற்றத்தில் ஒன்றாக தேசிய முன்னணி பெயர் மாற்றம் காணப்படுவதும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் சில திட்டங்களில் இன்னும் பல கட்சிகளும் பொது இயக்கங்களும் தேமுவில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

நேற்று நடைபெற்ற மஇகாவின் 72ஆவது பொதுப் பேரவையை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோஶ்ரீ ஸாயிட் இவ்வாறு கூறினார்.

நிதி முறைகேட்டில் மஇகாவினரா? விசாரணை மேற்கொள்ளலாம் - டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
தேசிய முன்னணி தலைவர்கள் மீதான நிதி முறைகேடு தொடர்பான விசாரணை மஇகா தலைவர்களிடமும் மேற்கொள்ளப்படும் என்றால் தாராளமாக விசாரணை மேற்கொள்ளலாம் என்று அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் யார் மீது வேண்டுமானாலும் விசாரணை மேற்கொள்ளலாம். குற்றம் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட  வேண்டியது அவசியமாகும்.

மஇகாவின் தலைவர்கள் யார் நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருந்தாலும் விசாரணை மேற்கொள்ளலாம். முன்பு ம இகாவினர் மீது பல்வேறு நிதி மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஆனால், மஇகா மீது குற்றம் சுமத்தியவர்கள் இன்று ஆளும் கட்சியின் பிரதிநிதியாக உள்ள சூழலில் மஇகாவினர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

மஇகாவினர் யாரும் நிதி முறைகேட்டில் ஈடுபடவில்லை என கட்சி தலைமைத்துவம் நம்புவதாகவும் அவ்வாறு நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் எம்ஏசிசி  விசாரணைக்கு ஒருபோதும் தடையாக இருக்க மாட்டோம் என்றும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

Friday 26 October 2018

'பாரதம்' இ-பேப்பர் 26-10.2018







சீபில்ட் ஆலயம் உடைபடுமா? வாக்குவாதம் முற்றுகிறது

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
ஹைகோம் (சீபில்ட்)  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் இன்று உடைபடலாம் என்ற தகவல் பரவியதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

நீதிமன்ற ஆணைக்கு ஏற்ப ஆலயத்தை இடமாற்றம் அங்கீகரிக்கப்பட்ட அணியினர் என கூறப்படும் செல்லப்பா அணியினரும் ஓன் சிட்டி மேம்பாட்டு நிறுவனமும் நடவடிக்கையை முன்னெடுக்கும்போது ஆலயத்தின் மற்றொரு தரப்பான நாகப்பா அணியினர் ஆலயம் உடைக்கக்கூடாது என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இவ்வாலயம் உடைக்கப்படவில்லை; இடமாற்றம் மட்டுமே என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறியுள்ள போதிலும் இந்த ஆலயத்தை உடைக்க விடமாட்டோம் என்று நாகப்பா அணியினருடன் கைகோர்த்துள்ள மஇகாவினரும் பொது இயக்கத்தினரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலய வளாகத்தில் இன்று காலை போலீசார், எப்ஆர்யூ குவிக்கப்பட்ட வேளையில் இரு அணியினருக்கும் மத்தியில் காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இச்செய்தி பதிவேற்றம் செய்யப்படும் வரை ஆலயம் உடைக்கப்படவில்லை என்ற போதிலும் ஆலயம் எந்நேரத்திலும் உடைபடலாம் என்ற பதற்றமான சூழலே நிலவுகிறது.

தற்போது ஆலயம் வீற்றிருக்கும் நிலத்தை ஓன் சிட்டி மேம்பாட்டு நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் ஆலயத்தை இடமாற்றம் செய்வதற்கு யுஎஸ்ஜே  23இல்  ஒரு ஏக்கர் நிலமும் 15 லட்சம் வெள்ளியும் வழங்கப்பட்டு புதிய ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு விட்டது.

Thursday 25 October 2018

தீபாவளிக்கு 2 நாட்கள் மட்டும்தான் விடுமுறையா? இந்திய மாணவர்களுக்கு பேரிடி


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
இந்துக்களின் பெருவிழா கொண்டாட்டமான தீபாவளி திருநாளுக்கு இடைநிலைப்பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாண்டு தீபாவளி கொண்டாட்டம் வரும் நவம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு வாரமும் இடைநிலைப்பள்ளிகளுக்கு இரு நாட்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் அதிகளவு இந்திய மாணவர்கள் பயிலும் இடைநிலைப்பள்ளிகளில் இரு நாட்கள் மட்டுமே விடுமுறை என்பது பெருத்த ஏமாற்றமாக உள்ளது என பெற்றோர்கள் சிலர் குறைபடுகின்றனர்.

அதிகமான இந்திய மாணவர்கள் பயிலும் இடைநிலைப்பள்ளிகளிலும் ஒரு வார காலம் விடுமுறை வழங்கியிருக்கலாமே? அதை விடுத்து இரு நாட்கள் மட்டுமே விடுமுறை என்பது தீபாவளி குதூகலத்தை வெறுமனே செய்துள்ளது.

இதனால் இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகும் நிலையில் அவர்களால் தங்களது குடும்பத்தினருடன் தீபாவளியை குதூகலமாக கொண்டாட முடியாது என்ற அதிருப்தி நிலவுகிறது.

கடந்தாண்டு தீபாவளி பெருநாளுக்கு ஒருவார காலம் விடுமுறை வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை இரு நாட்கள் மட்டுமே விடுமுறை என்பது பெருத்த ஏமாற்றமாக உள்ளது என பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.

புதிதாக ஆட்சியமைத்துள்ள பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண முற்படுமா?

மஇகா தேர்தல்; வீண் ஆருடங்களும் விமர்சனங்களும் வேண்டாம் - டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
அண்மையில் நடந்து முடிந்த மஇகா தேர்தல் தொடர்பான ஆருடங்களையும் விமர்சனங்களையும் பரப்ப வேண்டாம் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர்  டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மஇகா தேர்தலில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பான 9 புகார்களை பெற்றிருக்கிறோம். அதில் 3 புகார்கள் துணைத் தலைவர் வேட்பாளர் டான்ஶ்ரீ எம்.ராமசாமி உடையது.

இந்த 9 புகார்கள் குறித்தும் தேர்தல் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையின் முடிவு தெரிய வரும் வரை கட்சி உறுப்பினர்கள் பொறுமை காக்க வேண்டும்.

வீண் ஆருடங்களையும் விமர்சனங்களையும் பரப்பாமல் கட்சியின்
நலனை கருத்தில் கொண்டு அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும்.
வீணான விமர்சனங்களை பரப்பி கட்சியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் தேர்தல் முடிவில் அதிருப்தி அடைந்துள்ளவர்கள் கட்சியிலிருந்து வெளியேறாமல் கட்சியை இன்னும்  வலுபடுத்தும் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் நேற்று நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

ஒரே நேரத்தில் தேசிய, மாநில பதவிகளுக்கான தேர்தலே குளறுபடிக்கு காரணம்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கோ.பத்மஜோதி

கோலாலம்பூர்-
தேசிய, மாநில பதவிகளுக்கான தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதே மஇகா தேர்தலில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு முதன்மை காரணம் என கருதப்படுவதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காணொளியில் இடம்பெற்றிருப்பது மாநில தேர்தலுக்கான சீட்டுகள் குறித்த கருத்தே தவிர தேசிய நிலையிலான
பதவிகளுக்கான தேர்தல் அல்ல.

இவ்விரு பதவிகளுக்குமான தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதால்  சில
தொகுதித் தலைவர்களின் ஒழுக்கமற்ற செயல் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுத்து விட்டது.

ஆனாலும் தேர்தல் முறைகேடுகள் குறித்து பெறப்பட்டுள்ள புகார்களுக்கு உரிய நடவடிக்கை காண தேர்தல் நடவடிக்கைக் குழு உரிய நடவடிக்கை எடுக்கும்.

புதிய சட்டமுறைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட இத்தேர்தல் சுமூகமான முறையில் நடத்தப்பட்டது. சில இடங்களில் நடைபெற்ற அசம்பாவிதங்களால் மஇகாவின் தேர்தல் விமர்சிக்ககூடாது.

தற்போதையை நிலையில் மஇகாவில் மட்டுமல்லாது பிகேஆர், பிபிபிஎம் போன்ற கட்சிகளில் அரங்கேறியுள்ளது.  மஇகா ஏற்கெனவே 2013இல் சந்தித்த நெருக்கடியை தற்போதும் எதிர்கொள்ள விரும்பவில்லை என நேற்று நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

'பாரதம்' இ-பேப்பர்- 25.10.2018







ஶ்ரீ வீரசக்தி விநாயகர் ஆலயத்தில் துப்புரவுப் பணி


சுங்கைப்பட்டாணி-
விரைவில் கும்பாபிஷேகம் காணவுள்ள ஶ்ரீ வீரசக்தி விநாயகர் ஆலயத்தின் சுற்றுப்புறத்தை மலேசிய மக்கள் சக்தி கட்சியினர் ஒன்றிணைந்து அண்மையில் துப்புரவுப் பணி மேற்கொண்டனர்.

சுங்கைப்பட்டாணி பத்து டூவாவில் அமைந்துள்ள இவ்வாலயம் வரும் நவம்பர் 25ஆம் தேதி கும்பாபிஷேகம் காணவுள்ளது. அதனை முன்னிட்டு கடந்த மூன்றாண்டுகளாக திருப்பணி வேலைகள் நடைபெற்று பூர்த்தியாகக்கூடிய சூழலில் உள்ளது.

இதனையடுத்து ஆலய வளாகத்தி தூய்மைப்படுத்தும் வகையில் பினாங்கு, கெடா  மாநிலங்களைச் சேர்ந்த மலேசிய மக்கள் சக்தி கட்சியினர் துப்புரவுப் பணியை மேற்கொண்டனர்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியில் உள்ள இளைஞர்களிடையே ஒற்றுமையும் சமூகச் சேவையும் மேலோங்க வேண்டும் எனும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதன் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கூறினார்.

இதுபோன்ற நடவடிக்கைகளை அடிக்கடி மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

இந்நிகழ்வின்போது டத்தோஶ்ரீ தனேந்திரனின் துணைவியார் டத்தின்ஶ்ரீ வேணி, கட்சியின் பொருளாளர் ஓ.ஜி.சண்முகம் உட்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சியினர் என்ற எண்ணத்தில் நாம் செயல்பட வேண்டும்- டத்தோ டி.மோகன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
ஆளும் கட்சியினர் என்ற நினைப்பிலிருந்து ம இகாவினர் முதலில் வெளியேற வேண்டும். இப்போது தாங்கள் எதிர்க்கட்சி என்ற எண்ணத்தில் ம இகாவினர் துரிதமாக செயல்பட வேண்டும் என்று அதன் உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் வலியுறுத்தினார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தை இழந்து விட்ட தேசிய முன்னணியில் பங்காளி கட்சியான மஇகா இப்போது சிறந்த எதிர்க்கட்சியாக திகழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஆளும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முன்னெடுக்கும்  நற்காரியங்களுக்கு ஆதரவு கொடுக்கும் அதே வேளையில் இந்திய சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் கட்சியாகவும் ம இகா திகழ்ந்திட வேண்டும்.

வலுவான எதிர்க்கட்சியாக மஇகா உருவெடுப்பதோடு மஇகாவினரின் ஆக்ககரமான செயல்பாடுகளின் வழி இழந்து விட்ட இந்திய சமுதாயத்தின்  உரிமைகளை மீட்டெடுக்கவும் உதவித் தலைவர் எனும் முறையில் எனது பங்கினை செயல்படுத்துவேன்.

மஇகாவின் எதிர்கால நலனை காக்கும் பொருட்டு தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோ எம்.சரவணன், உதவித் தலைவர்கள் டத்தோ சி.சிவராஜ், டத்தோ தோ.முருகையா, மத்திய செயலவை உறுப்பினர்கள் ஆகியோருடன்  ஒன்றிணைந்து பணியாற்றவிருப்பதாக டத்தோ மோகன் மேலும் சொன்னார்.

துப்பாக்கி சூடுபட்ட போலீஸ்காரர் மரணம்

ஈப்போ-
தலையில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் போலீஸ்காரர் ஒருவர் இறந்து கிடக்க காணப்பட்டார்.

பெக்கான் பாரு போலீஸ் நிலையத்தின் குடியிருப்புப் பகுதிக்கு வெளியே இச்சம்பவம் நிகழ்ந்தது.

கார்ப்பெரல் பதவியை வகிக்கும் 29 வயதுடைய அந்த போலீஸ்காரர்  தன்னுடைய துப்பாக்கியை பயன்படுத்தி சுடப்பட்டிருக்கிறார்.

இன்று காலை 5.00 மணியிலிருந்து 7.00 மணிக்கு இடைபட்ட காலத்தில் அவர் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அவரின் சடலத்தை துப்புரவுப் பணியாளர் ஒருவர் காலை 7.55 மணியளவில் பார்த்திருக்கிறார்.

சவப்பரிசோதனைக்காக அவ்வாடவரின் சடலம் ராஜா பெர்மாய்சூரி மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தோல்விக்கு தோல்வியை கொடுப்பவனே சிறந்த தலைவனாகிறான் - வீ.பொன்ராஜ்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
அனைவருக்கும் தலைமைத்துவ ஆற்றல் உள்ளது. ஆனால் அறிந்து செயல்படுபவர்களால் மட்டுமே ஒரு தலைவராக உருவாக முடியும். தோல்விக்கு தோல்வியை கொடுப்பவனே ஒரு தலைவனாகிறான் என்று இந்தியாவின் முன்னாள் அதிபர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசகர் வீ.பொன்ராஜ் கூறினார்.

இன்றைய மாணவர்களிடையே தலைமைத்துவ ஆற்றல் நிறைந்து கிடக்கிறது. ஆனால் அந்த ஆற்றலை பலர் உணர்ந்து கொள்வதில்லை. உணர்ந்தவர்களில் சிலர் தோல்வி மனப்பான்மையினால் அதில் வெற்றி கொள்ள முடிவதில்லை.

இந்நிலை மாற வேண்டும் என்றால்  முதலில் 'நான்' யார் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். அவர்களில் ஆற்றல், லட்சியம் ஆகியவை குறித்து ஆக்ககரமாக சிந்திக்கும் போது தலைமைத்துவ ஆற்றல் தானாகவே அங்கு வெளிபட தொடங்கும்.

எடுத்த உடனேயே ஒரு காரியத்தில் நாம் வெற்றி பெற முடியாது. அதற்காக தோல்வி அடைந்து விட்டால் எடுத்த முயற்சியை கைவிட்டு விடக்கூடாது. ஒரு காரியத்தில் பலமுறை முயற்சி செய்து வெற்றி கண்டவர்கள் பலர் உள்ளனர். தோல்விக்கு தோல்வி பயத்தை கொடுப்பவனே சிறந்த தலைவன் ஆகிறான். அதே போன்று மாணவர்களும் இப்போது சந்திக்கும் சிறு சிறு தோல்விகளில் மனம் தளர்ந்து விடாமல் முயற்சி செய்து கொண்டே இருங்கள்; அதுதான் உங்களை வெற்றி வாசலில் நிலைநிறுத்தும் என்று அண்மையில்  பேரா இந்திய வர்த்தக சபை ஏற்பாட்டில் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'தலைமைத்துவம், நாட்டுப்பற்று, தொழில்முனைவோர்' பயிலரங்கின்போது பொன்ராஜ் தெரிவித்தார்.

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த அமரர் அப்துல் கலாம் ஐயாவின் லட்சியம் அனைத்தும் மாணவர்கள் சிறந்த தலைவர்களாக உருவாக வேண்டும் என்பதே. அதற்காகத்தான் அவர் தனது வாழ்நாள் கடைசி வரை பாடுபட்டார்.

நாட்டு நடப்பு, உலகச் சூழல் ஆகியவற்றை அறிந்து கொள்வதோடு தங்களது குடும்பத்தினரின் ஆலோசனைகளை பின்பற்றுபவர்கள் நிச்சயம் தோல்வியை சந்திக்க மாட்டார்கள்.

எத்தகைய சூழலை எதிர்கொள்ளும் பக்குவத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறந்த தலைவர்களாக உங்களால் உருவெடுக்க முடியும்  என்று அவர் மேலும் சொன்னார்.

இந்நிகழ்வில் பேரா இந்திய வர்த்தக சபையின்  தலைவர் ஹாஜி சுல்தான் அப்துல் காடீர் உட்பட பிரமுகர்களும் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.