Thursday 28 September 2017

கட்சியை போன்று இந்தியர்களுக்கான திட்டங்களில் உருமாற்றமும் அமலாக்கமும் தேவை- எஸ்.பி.மணிவாசகம்



கோலாலம்பூர்-
மஇகாவின் 71ஆவது பேராளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள  மாற்றங்கள் ஆக்ககரமானது ஆகும். டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தங்கள் கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்ல வழிவகுக்கும் என முன்னாள் மஇகா  மத்திய செயலவை உறுப்பினர் எஸ்.பி.மணிவாசகம் குறிப்பிட்டார்.

இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக மஇகா பல்வேறு ஆக்ககரமான திட்டங்களை வகுத்து வருகிறது. இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் மேம்பாட்டை உறுதி செய்வது மஇகா மட்டுமே.

அவ்வகையில் மஇகாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்த்திருத்தங்களின் மூலம் கிளை மட்டத்தில் உள்ள தலைவர்களும் செயலவையினரும் துடிப்பாற்றலுடன் செயல்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.



ஆனாலும், இந்திய சமுதாயத்திற்காக மஇகா முன்னெடுக்கும் திட்டங்களை விரைந்து அமலாக்கம் செய்வதில் தீவிரம் காட்ட வேண்டும். ஏனெனில், இந்திய சமுதாயத்திற்காக பல திட்டங்களை வகுத்துள்ள மஇகா, இன்னமும் அதனை திட்டமாகவே அறிவித்துக் கொண்டிருக்காமல் அதனை அமல்படுத்தி  அதன் மூலம் நிறைவு  செய்துள்ள அடைவுநிலையை மக்களிடத்தில் அறிவிக்க வேண்டும்.

அப்போதுதான் இந்திய சமுதாயத்தில் இழந்துள்ள செல்வாக்கை மஇகா மீண்டும் பெற முடியும் என்பதோடு, வகுக்கப்பட்ட திட்டங்களின் மூலம் அடைந்துள்ள அடைவு நிலையே நம்முடைய வெற்றியை இந்தியர்களிடத்தில் கொண்டுச் செல்லும்.


மேலும், கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு வேண்டிய சலுகைகளை ஏற்படுத்திக் கொண்டு இப்போது இளைய தலைமுறையினர் அடுத்தக்கட்டத்திற்கு கட்சியை வழிநடத்திச் செல்வதற்கான தலைமைத்துவ ஆற்றலை மேம்படுத்த வேண்டும்.

ம இகாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உருமாற்றத்தை போன்று இந்திய சமுதாயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உருமாற்றங்களை விரைந்து மேற்கொண்டால் இழந்து நிற்கு இந்திய சமுதாயத்தின் ஆதரவை மீண்டும் பெற முடியும் என மணிவாசகம் குறிப்பிட்டார்.



No comments:

Post a Comment