Wednesday 31 January 2018

சமய நெறிகளை மீறாமல் தைப்பூச விழாவை கொண்டாடுங்கள்- பொன்.சந்திரன்


ரா.தங்கமணி

ஈப்போ-
முருகப் பெருமானின் அருளாசி பெற கொண்டாடப்படும் தைப்பூச விழாவில் இந்துக்கள் சமய நெறிகளை மீறாமல் கொண்டாட வேண்டும் என மலேசிய இந்து சங்கத்தின் பேராக் மாநிலத் தலைவர் பொன்.சந்திரன் வலியுறுத்தினார்.

சமய விழாவாக கொண்டாடப்படும் தைப்பூச விழாவில் இந்து மக்கள் காவடிகளை ஏந்துவதிலும்  உடைகளை அணிவதிலும் சமய நெறிகளை கடைபிடிக்க வேண்டும்.

இந்து மக்களிடையே சமய நெறிகள் மேம்படவும் பக்தர்களின் பாதுகாப்புக்காகவும் 'தைப்பூச பணிப்படை' 4ஆவது ஆண்டாக மேற்கொள்ளப்படுகிறது.

இம்முறை போலீஸ் படை, குற்றச்செயல் தடுப்பு இயக்கம், ஈப்போ அருணகிரிநாதர் மன்றம், இந்து இளைஞர் மன்றம், தாஜ் அனைத்துலக கல்லூரி ஆகியவற்றின் ஆதரவோடு 'பணிப்படை' மேற்கொள்ளப்படுகிறது என அவர் சொன்னார்.

வழக்கில் வெற்றி; முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினார் திருமதி இந்திரா காந்தி

தனது மகள் தேவதர்ஷினியுடன் திருமதி இந்திரா காந்தி...

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
ஒருதலைபட்ச மதமாற்ற வழக்கை 9 ஆண்டுகளாக நடத்தி அதில் வெற்றி கண்டுள்ள முன்னாள் பாலர்பள்ளி ஆசிரியை திருமதி இந்திரா காந்தி முருகப் பெருமானுக்கு தனது நேர்த்திக் கடனைச் செலுத்த புறப்பட்டார்.

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் விழாவான தைப்பூச விழாவை நாளை உலகமெங்கும் உள்ள பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லா என்ற கே.பத்மநாபன்  மூன்று பிள்ளைகளையும் தனது  அனுமதியின்றி மதமாற்றம் செய்ததை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தினார்.

கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்தது செல்லத்தக்கது அல்ல எனவும் மதமாற்றம் செய்யப்பட்டது ரத்து செய்யப்படுவதாகவும் கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தன்னுடைய சட்டப் போராட்டத்தில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதை எண்ணி மகிழ்ச்சி கொள்ளும்  வேளையில் முருகப் பெருமானுக்கு பால்குடம் ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்தவிருப்பதாக திருமதி இந்திரா காந்தி கூறினார்.

நேர்த்திக் கடன்; ஈப்போ கல்லுமலையில் பக்தர்கள் படையெடுப்பு


ரா.தங்கமணி

ஈப்போ-
இந்துக்களின் பெருவிழாவா தைப்பூச விழா நாளை உலகமெங்கும் கொண்டாடப்படும் வேளையில் இன்று தொடங்கி பலர் முருகன் திருத்தலங்களின் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் ஈப்போ கல்லுமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நேர்த்திக் கடனை செலுத்த பக்தர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

பால்குடம், காவடிகள் ஏந்தி வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.



பேராக் மைபிபிபி இளைஞர் பிரிவு முயற்சியில் நடமாடும் கழிவறை அமைக்கப்பட்டன


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
தைப்பூச விழாவை முன்னிட்டு முருகன் திருத்தலங்களுக்கு வழிபட வரும் பக்தர்களின் வசதிக்காக பேராக் மைபிபிபி இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் ஈப்போ வட்டாரத்தில் நடமாடும் கழிவறைகள் அமைக்கப்பட்டன.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் உடல் உபாதைகளை கழிக்க  இன்னல்களை எதிர்நோக்கக்கூடாது எனும் நோக்கில் 4ஆவது ஆண்டாக நடமாடும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என புந்தோங் மைபிபிபி ஒருங்கிணைப்பாளர் டத்தோ நரான் சிங் தெரிவித்தார்.

மைபிபிபி இளைஞர் பிரிவு நாடு தழுவிய நிலையில் இதுபோன்ற கழிப்பறை வசதியை ஏற்பாடு செய்துள்ள நிலையில் பேராக் மைபிபிபி இளைஞர் பிரிவு ஈப்போ கல்லுமலை ஆலயம் மட்டுமல்லாது சுற்று வட்டாரத்தில்  30 நடமாடும் கழிவறைகளை அமைத்துள்ளனர் என அவர் சொன்னார்.

இதனிடையே, பேராக் மைபிபிபி இளைஞர் பிரிவு மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கை ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக இருப்பதோடு அவர்களின் சேவை தொடரப்பட வேண்டும் எனவும் பேராக் மைபிபிபி இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் நோர் ஃபட்சில், அவர்தம் குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக ஆலயத் தலைவர் ஆர்.வி.சுப்பையா தெரிவித்தார்.

Tuesday 30 January 2018

"ஒருதலைபட்ச மதமாற்றம் செல்லாது" - 9 ஆண்டுகால போராட்டத்தில் திருமதி இந்திரா காந்திக்கு வெற்றி


புத்ராஜெயா-
தனது மூன்று பிள்ளைகளை ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்தது செல்லாதது என அறிவிக்கக் கோரி கடந்த 9 ஆண்டுகளாக போராட்டம் நடத்திய திருமதி இந்திரா காந்தியின் வழக்கில் வெற்றி நிலைநாட்டப்பட்டது.

தனது முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லா தனது அனுமதியின்றி 3 பிள்ளைகளை மதமாற்றம் செய்தது செல்லத்தக்கது அல்ல என அறிவிக்கக் கோரி திருமதி இந்திரா காந்தி சட்டப் போராட்டம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் கூட்டரசு நீதிமன்றத்தில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்தது செல்லத்தக்கது அல்ல எனவும் மூன்று பிள்ளைகளின்   மதமாற்றம் உடனடியாக நிராகரிக்கப்படுவதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

தாய், தந்தை ஆகிய இருவரின் சம்மதத்தோடு மட்டுமே 18 வயதுக்கு மேற்போகாத பிள்ளைகளை மதமாற்றம் செய்ய முடியும் என்ற ஒருதலைபட்சமாக செய்யப்பட்ட மதமாற்றம் செல்லத்தக்கது அல்ல.

கூட்டரசு அரசியலமைப்பு சட்டவிதி 12(4)இன் படி "parent" என குறிப்பிடப்பட்டுள்ளது தாய், தந்தை ஆகிய இருவரையும் உள்ளடக்கியதாகும். என கூறிய நீதிமன்றம், திருமதி இந்திரா காந்தியின் போரட்டத்திற்கு ஒரு தீர்வை அளித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு தனது மூன்று பிள்ளைகளையும் ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்த முகமட் ரிடுவான், 9 மாத குழந்தையாக இருந்த பிரசன்னா டிக்‌ஷாவை தூக்கிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் போட்டியிட நானும் தயார்- லோகநாதன் அறிவிப்பு


(ரா.தங்கமணி)
சுங்கை சிப்புட்
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட நானும் விருப்பம் தெரிவித்துள்ளேன். போட்டியிடும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என சுங்கை சிப்புட் மஇகா தொகுதி முன்னாள் தலைவர் லோகநாதன் தெரிவித்தார்.

இத்தொகுதியில் போட்டியிட பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் வெற்றி வேட்பாளர் யார் என்பதை ஆராய்ந்து வாய்ப்பு வழங்கினால் மட்டுமே இத்தொகுதியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை மஇகா, தேமு தலைமைத்துவம் உணர வேண்டும்.

கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது இத்தொகுதியில் போட்டியிட்ட  மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலுவின் தோல்விக்கு நான் தான் காரணம் என்ற குற்றச்சாட்டை மறுக்கவில்லை.

அப்போதைய காலகட்டம் எனக்கும் சாமிவேலுவுக்கும் மிகப் பெரிய போராட்ட காலமாக இருந்தது. இருவருக்கும் இடையே விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாத சூழலில் 'அந்த' சம்பம் நிகழ்ந்தது.
இதை துரோகம் என கூற முடியாது. இருவருக்கும் புரிந்துணர்வு இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.

வரும் தேர்தலில் போட்டியிட  4 பேரின் பெயர் பட்டியலை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளதாக  மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கூறுகிறார்.

அந்த 4 பேரின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்கும் முன்னர் அவர்களால் இங்கு வெற்றி பெற முடியுமா, அவர்களை இங்குள்ளவர்களுக்கு எவ்வளவு நாளாக தெரியும்?,  போட்டியிடவிருப்பவர்க்கு இங்குள்ள நிலவரங்கள் தெரியுமா?, 30 விழுக்காடாக்கும் காடாக உள்ள இங்குள்ள மக்களின் ஆதரவை அவர்களால் பெற முடியுமா? என்ற ஆய்வுகள் நடத்தப்பட்டதா? என இங்கு நடைபெற்ற மாபெரும் பொங்கல் விழாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் லோகநாதன் கேள்விகளை எழுப்பினார்.

வெற்றி பெற வேண்டுமானால் மக்களின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும். அந்த ஆதரவை பெற்ற வேட்பாளர் யார் என்பதை அறிந்து தேர்தலில் களமிறக்குங்கள் என லோகநாதன்  மேலும்  கூறினார்.

சுங்கை சிப்புட் கல்வி சமூகநல இயக்கம் உட்பட பல அரசு சார்பற்ற பொது இயக்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓம்ஸ் குழுமத்தின் தலைவர் ஓம்ஸ் ப.தியாகராஜன், தொழிலதிபர் டத்தோஶ்ரீ டாக்டர் ஏ.கே.சக்திவேல், மலேசிய அபிராம் சமூகநல இயக்கத்தின் தலைவர் சண்முகம் கிருஷ்ணன், அதன் ஆலோசகர் அமுசு.ஏகாம்பரம்,  சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, செயலாளர் கி.மணிமாறன் தொகுதி மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் மு.நேருஜி, மலேசிய கர்மா இயக்கத்தின் தலைவர் வின்சென்ட் டேவிட்  உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Monday 29 January 2018

சுங்கை சிப்புட்டில் அறிமுகம் கண்டது "மை பாரதம்" மின்னியல் அகப்பக்கம்


கோ.பத்மஜோதி, புனிதா சுகுமாறன்

சுங்கை சிப்புட்-
மலேசிய தமிழ் ஊடகங்களின் வரிசையில் புதிய பரிணாமமாக அவதரித்துள்ள "மை பாரதம்" மின்னியல் அகப்பக்கம் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது.

நவீன மயமாகிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் இணையதள பயன்பாடு மக்களிடையே அதிகரித்து கொண்டிருக்கிறது. அன்றாட செய்திகளை உடனுக்குடன் வழங்குவதில் மின்னியல் ஊடகங்கள் துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.


அவ்வகையில் கடந்தாண்டு தொடங்கப்பட்ட "மை பாரதம்" மின்னியல் ஊடகம் நாட்டு நடப்புகள், உலகச் செய்திகள், அரசியல் செய்திகள், மக்கள் கருத்துகள், சினிமா, நேர்காணல் போன்றவற்றை தாங்கி இணையதளங்களில் உலா வருகிறது.


இதனிடையே, இன்று சுங்கை சிப்புட் வட்டாரத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற 'மாபெரும் பொங்கல் விழா'வில் "மை பாரதம்" மின்னியல் ஊடகம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த அறிமுக நிகழ்வில் ஓம்ஸ் குழுமத்தின் நிறுவனரும் தொழிலதிபருமான ஓம்ஸ் ப.தியாகராஜன், சுங்கை சிப்புட் கல்வி சமூகநல இயக்கத்தின் தலைவரும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான லோகநாதன்,  "மை பாரதம்" மின்னியல் ஊடக நிர்வாக ஆசிரியர் ரா.தங்கமணி, சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து, சுங்கை சிப்புட் மஇகா தொகுதிச்  செயலாளர் கி.மணிமாறன், தொழிலதிபர் டத்தோ டாக்டர் ஏ.கே.சக்திவேல், மலேசிய அபிராம் இயக்கத்தின் ஆலோசகர் அமுசு.ஏகாம்பரம், மலேசிய அபிராம் இயக்கத்தின் தலைவர் சண்முகம் கிருஷ்ணன், பேராக் மாநில  மஇகா இளைஞர் பிரிவுத் தலைவரும் சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவருமான மு.நேருஜி, கமுனிங் இளைஞர் மன்றத்தின் தலைவர் நடராஜா, சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி சாந்தகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 3,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலய கும்பாபிஷேகம்- 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


ரா.தங்கமணி

தைப்பிங்-
கமுண்டிங், கம்போங் பாரு ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக  இன்றுக் காலை நடைபெற்றது.

சக்தி அறவாரியம், ஆலய நிர்வாகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் திருப்பணி செய்யப்பட்ட இவ்வாலயம் 3ஆவது முறையாக மகா கும்பாபிஷேகம் கண்டது.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தலைமையில் திருமுருகன்  திருவாக்கு திருபீடம் ஸ்தாபகர் பாலயோகி சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதினம் ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் இந்த மகா கும்பாபிஷேகன் நடைபெற்றது.

1964ஆம் ஆண்டு முதலாவதாக கும்பாபிஷேகம் கண்ட இவ்வாலயம் 35 ஆண்டுகளுக்கு பின்னர் 1999ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கும்பாபிஷேகம் கண்டது.

மூன்று ஆண்டுகால தாமதத்திற்குப் பின்னர் டத்தோஶ்ரீ தனேந்திரன் முயற்சியில் திருப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு இன்று கும்பாபிஷேகம் காண்பதாக ஆலயத் தலைவர் பொன்.முத்துசாமி தெரிவித்தார்.

இதனிடையே, 1 மில்லியன் வெள்ளி செலவில் திருப்பணி நடைபெற்றுள்ள இவ்வாலயம் ஆறு மாதத்திற்குள் நிறைவு பெற்றது என டத்தோஶ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.

சமயப் பணியை மட்டுமல்லாது, பல்வேறு சமூக நடவடிக்கைகளையும் இவ்வாலயம் மேற்கொள்ளும் என்பதன் அடிப்படையில் ஆலய நிர்வாகம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது என அவர் மேலும் சொன்னார்.

இந்த கும்பாபிஷேக விழா உபயத்தை முவாலிம் தொகுதி மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் தேசிய உதவித் தலைவருமான் ஏஸ்.ஏ.கிருஷ்ணராவ் தம்பதியர் ஏற்று நடத்தினர்.

இவ்விழாவில் டத்தின்ஶ்ரீ வாணி, மலேசிய மக்கள் சக்தி கட்சியின் கெளரவச் செயலாளர் சுதாகரன், சென்னை., தமிழ்நாடு  இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் முனைவர் ஜெ.சசிகுமார் உட்பட சுற்று வட்டாரங்களிலிருந்து மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Sunday 28 January 2018

சுங்கை சிப்புட் கல்வி சமூகநல இயக்கத்தின் ஏற்பாட்டில் "மாபெரும் பொங்கல் விழா"

சுங்கை சிப்புட்-

சுங்கை சிப்புட் கல்வி சமூகநல இயக்கத்தின் ஏற்பாட்டில்  பல பொது இயக்கங்கள் ஆதரவில் 'மாபெரும் பொங்கல் விழா' மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை 28ஆம் தேதி சுங்கை சிப்புட் மாநாட்டு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் விழா பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
மாலை 6.00 மணி முதல் மாநாட்டு மையத்திற்கு எதிரே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் 1,000 பேர் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இரவு 8.00 மணி தொடக்கம் கலை நிகழ்ச்சியோடு அரங்கேறவுள்ள
இந்நிகழ்வில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவிநிதியும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு அன்பளிப்பு வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில்  ஓம்ஸ் குழுமத்தின் தலைவர் ப.தியாகராஜன், தொழிலதிபர் ஏ.கே.சக்திவேல், சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இளங்கோவன்ன முத்து, மலேசிய அபிராம் சமூகநல இயக்கத்தின் தலைவர் சண்முகம் கிருஷ்ணன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் என நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் லோகநாதன் தெரிவித்தார்.

மிகச் சிறப்பாக நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு லோகநாதன் கேட்டுக் கொண்டார்.

இழந்த தொகுதிகளை மீட்டெடுக்க வேண்டும்- டத்தோஶ்ரீ ஸம்ரி

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
கடந்த இரு பொதுத் தேர்தல்களில் இழந்து நிற்கும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியையும் ஜாலோங் சட்டமன்றத் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் தேமு கட்சிகளிடம் வலியுறுத்தினார்.

இத்தொகுதிகளை இழந்து நிற்பதால் நாம் பலவீனமானவர்களாக அடையாளப்படுத்தப்படுகிறோம். நாம் பலமானவர்கள் என்பதை நிரூபிக்க இவ்விரு தொகுதிகளை மீண்டும் நாம் கைப்பற்ற வேண்டியது அவசியமாகும்.
இங்கு நம்முடைய மக்கள் பிரதிநிதி இல்லாதது மக்களுக்குதான் பாதிப்பு என்பதை உணர வையுங்கள்.

நம்முடைய (தேமு) மக்கள் பிரதிநிதி இருந்ததால்தான் இங்கு இவ்வளவு பெரிய அழகான மண்டபம் அமைந்துள்ளது. இது நம்முடைய சாதனை  என மாநாட்டு மையத்தை சுட்டிக் காட்டி பேசிய டத்தோஶ்ரீ ஸம்ரி, அந்த சாதனையை மக்களிடம் கொண்டு சேருங்கள். நாம் செய்தவற்றை மக்கள் உணரும் வகையில் களப்பணி ஆற்றுங்கள் என சுங்கை சிப்புட் வட்டாரத்திலுள்ள தேசிய முன்னணி நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இந்த தேர்தல் கடுமையான ஒன்றாக கருதப்படுகிறது. நமது வெற்றியை நிலைநாட்டிக் கொள்ள தேமு கட்சிகளிடையே ஒற்றுமை மிக அவசியம். நாம் ஒற்றுமையாக இருந்து மக்கள் பணிகளில் களமிறங்கினால்தான் வெற்றியை தற்காத்துக் கொள்ள முடியும் என்றார் அவர்.

இந்நிகழ்வில் லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சூல்கிப்ளி, சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, உதவித் தலைவர் முனைவர் சண்முகவேலு, செயலாளர் கி.மணிமாறன், ஜாலோங் தொகுதி கெராக்கான் ஒருங்கிணைப்பாளர் டத்தோ டான் லியான் ஹோ, உட்பட அம்னோ, மஇகா, மசீச, கெராக்கான் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Saturday 27 January 2018

கூடுதலாக 8 தொகுதிகளை கைப்பற்றுவோம்- பேராக் ஜசெக


ஈப்போ-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலின்போது பேராக் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் கூடுதலாக 8 தொகுதிகளை கைப்பற்றி தேசிய முன்னணியை விட பெரும்பான்மை வகிக்கும் என பேராக் ஜசெக இளைஞர் பிரிவு தெரிவித்துள்ளது.

இத்தேர்தலில் மஞ்சோய், குபு காஜா, கமுண்டிங், லுபோன் மெர்பாவ், மனோங், ருங்குப், சங்காட் ஜோங், பாசீர் பஞ்சாங் ஆகிய தொகுதிகளை வெல்ல இலக்கு கொண்டுள்ளதாக அதன் தலைவர் வோங் கா வோ தெரிவித்தார்.

தற்போதுள்ள 24 சட்டமன்றத் தொகுதிகளை தக்கவைத்துக் கொள்வதோடு கூடுதலாக 8 தொகுதிகளை கைபற்றி 32 தொகுதிகளை கொண்டு பேராக் மாநில ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என பேராக் பக்காத்தான் இளைஞர் பிரிவு அறிமுக நிகழ்வில் அதன் தலைவர் அஹ்மாட் பைசால் அஸுமு கூறினார்.

 வரும் தேர்தலில் போட்டியிட பக்காத்தான் கூட்டணி இளையோருக்கு முன்னுரிமை வழங்கும் எனவும் இதில் 20 விழுக்காட்டுக்கும் அதிகமான இளைஞர்கள் வேட்பாளர்களாக களமிறங்குவர் எனவும் அவர் சொன்னார்.

இந்தியாவின் 69ஆவது குடியரசு தினம்: வீர மரணமடைந்த கம்மேண்டோ ஜே பி நிராலாவின் 'அசோக் சக்ரா' விருது


புதுடெல்லி-
இந்திய நாட்டின் 69ஆவது குடியரசு தினம் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.  குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் நாம்நாத் கோவிந்த் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்.

தலைநகர் டெல்லியில் கொண்டாடப்பட்ட குடியரசு தின விழாவில் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சைன் லூங், வியட்நாம் பிரதமர் குயென் யுவான் ஹுக், மலேசிய பிரதமர் முகம்மது நஜிப் அப்துல் ரசாக், தாய்லாந்து பிரதமர் ஜெனரல் சான் ஓ சா, மியான்மர் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி, பிலிப்பைன்ஸ் அதிபர் டோட்ரிகோ டடெர்டே, புருனே மன்னர் ஹாஜி ஹஸ்ஸானல் போல்க்யா வாதாதுலா, லாவோஸ் பிரதமர் தோங்லூன் சிஸோலித் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் சென் ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். குடியரசு தின விழாவில் ஏதேனும் ஒரு நாட்டின் தலைவரே பங்கேற்கும் நிலையில் இன்று 10 நாடுகளின் தலைவர்களின் பங்கேற்றனர்.

வீரர்களின் அணிவகுப்புடன் வருகை தந்த குடியரசுத் தலைவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.

இவ்விழாவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா பகுதியில் உள்ள ஹாஜின் என்ற பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில்  விமானப்படையைச் சேர்ந்த கம்மேண்டோ ஜே பி நிராலா, மூன்று தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று தானும் வீர மரணம் எய்தினார். அவரது இந்த தியாகத்தை பாராட்டி இந்த ஆண்டுக்கான 'அசோக் சக்ரா' விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரிடம் குடியரசு தலைவர்  இந்த விருதை வழங்கினார்.

மருத்துவமனையில் தீ; 41 பேர் பலி


சியோல்-
தென் கொரியாவில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 41 பேர் மரணமடைந்துள்ளனர், 70 பேர் படுகாயம் அடைந்துளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7.30 மணியளவில் மருத்துவமனையின் முதலாவது மாடியிலுள்ள அவசர சிகிச்சை பிரிவில் தீவிபத்து ஏற்பட்டது என  மிர்யாங் தீயணைப்பு இலாகா தலைவர் சொய் மான் - வூ தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் 31 பேர் மரணமுற்றனர். 69 பேர் காயமடைந்தனர். முதலாவது, இரண்டாவது மாடியில் அதிகமானோர் இறந்து கிடந்ததாக அவர் சொன்னார்.

இதனிடையே, தென் கொரியா அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 41 பேர் மரணமடைந்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள் உடனடியாக வழங்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் மூன் ஜியா இன் தெரிவித்தார்.

ஹீவூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியை பார்வையிட்டார் டத்தோ கமலநாதன்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
நாட்டில் 529ஆவது தமிழ்ப்பள்ளியாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் ஹீவூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியை கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் பார்வையிட்டார்.

இப்பள்ளியின் நிர்மாணிப்புப் பணிகள் குறித்து கட்டட பொறியியளாளரிடம் கேட்டறிந்த டத்தோ கமலநாதன், அப்பள்ளிக்கூட கட்டட நிர்மாணிப்புகளை பார்வையிட்டார்.

5.5 ஏக்கர் நிலத்தில் 12 வகுப்பறைகள் உட்பட பல அடிப்படை வசதிகளோடு நிர்மாணிக்கப்படவுள்ள இப்பள்ளிக்கூட நிர்மாணிப்புக்கு 6.5 மில்லியன் வெள்ளி செலவிடப்பட்டுள்ளது எனவும் இவ்வருடம் இறுதிக்குள் பள்ளி கட்டட நிர்மாணிப்பு பூர்த்தி செய்யப்படும் எனவும் டத்தோ கமலநாதன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் ம இகா உதவித் தலைவர்  சண்முகவேலு, செயலாளர் கி.மணிமாறன், எஸ்ஐடிஎஃப் அதிகாரி பிரகாஷ், கட்டடக் குழுவினர், அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Friday 26 January 2018

பள்ளி கட்டட நிர்மாணிப்பின் காலதாமதத்திற்கு அனுபவமின்மையே காரணம்- டத்தோ கமலநாதன்


 ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
தமிழ்ப்பள்ளிகளை நிர்மாணிப்பதில் இந்திய குத்தகையாளர்களுக்கு அனுபவமில்லாத காரணத்தால் சில தமிழ்ப்பள்ளிகளின் புதிய கட்டடம், இணைக் கட்டட நிர்மாணிப்புப் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என கல்ல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகளை பொறுத்த வரையில் புதிய கட்டடம், இணைக் கட்டடங்களை நிர்மாணிக்கும் பொறுப்பு இந்திய குத்தகையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பள்ளி நிர்மாணிப்பு  குத்தகைகள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்ப்பள்ளிகள் கட்டட நிர்மாணிப்புப் பணிகளில் சுணக்கம் நிலவுவது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால் இந்த கட்டடங்களை நிர்மாணிக்க இந்தியக் குத்தகையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது என இங்குள்ள மெத்தடிஸ் இடைநிலைப்பள்ளிக்கு வருகை தந்தபொது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ கமலநாதன் கூறினார்.

பள்ளிகளை நிர்மாணிப்பது எளிதான காரியமல்ல. கல்வி அமைச்சு, மாநில, மாவட்ட கல்வி இலாகா, நிலத்தின் உரிமையாளர்கள், அரசு சார்புடைய நிறுவனங்கள், மாநகர் மன்றம், தீயணைப்புப் படை  உட்பட பல நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. அவற்றின் ஒப்புதலை பெற்று பள்ளிக்கூடம் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்த பின்னரே அப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன.

'இவ்வளவு பிரச்சினைகளையும் எதிர்கொள்வதில் இந்தியக் குத்தகையாளர்கள் அனுபவமில்லாதவர்கள். அதனால் அதன் நிர்மாணிப்புப் பணிகள் நிறைவு பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இப்பிரச்சினைகளை கல்வி அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளது. அப்பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு காலதாமதம் ஏற்பட்டுள்ள பள்ளிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இந்நிகழ்வில் பள்ளி முதல்வர் கருணாகரன், லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சூல்கிப்ளி, சுங்கை சிப்புட் மஇகா தொகுதி உதவித் தலைவர் முனைவர் சண்முகவேலு, தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன், சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் பரமேஸ்வரன், வழக்கறிஞர் அமுசு.பெ.விவேகானந்தா, தொழிலதிபர் யோகேந்திரபாலன் உட்பட பல பிரமுகர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் பங்கேற்றனர்.

Thursday 25 January 2018

குனோங் சிரோ சுப்பிரமணியர் ஆலய சாலை சீரமைப்பு; உதவியர்களுக்கு நன்றி - டத்தோ நரான் சிங்

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
குனோங் சிரோ ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் முறையற்ற சாலை வசதியினால் தைப்பூச கொண்டாட்டத்திற்கு காவடி ஏந்தும் பக்தர்கள் பெரும் வேதனைக்குள்ளாகியிருந்தனர்.

இவ்வாலயத்தின் சாலை சீரமைக்கப்பட வேண்டும் என பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர், ஈப்போ மாநகர் மன்ற மேயரின் செயலாளர் ஸுரியானா,  ஈப்போ பாரார் அம்னோ தலைவர் டத்தோ சம்சுடின் ஆகியயோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட வேளையில் 24 மணி நேரத்தில் இச்சாலை சீரமைப்பு செய்யப்பட்டது.

இந்துக்களின் நம்பிக்கைகளில் ஒன்றான தைப்பூச நாளில் காவடி ஏந்தும் பக்தர்கள் எவ்வித இன்னல்களையும் எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சாலை சீரமைப்புக்கு உதவி புரிந்த டத்தோஶ்ரீ ஸம்ரி, ஸுரியானா, டத்தோ சம்சுடின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக புந்தோங் தொகுதி மைபிபிபி ஒருங்கிணைப்பாளர் டத்தோ நரான் சிங் தெரிவித்தார்.