Sunday 24 September 2017

2ஆவது முழு அமைச்சர் பதவி: டத்தோஶ்ரீ சுப்ரா முன்மொழிய வேண்டும் - கி.மணிமாறன்

-ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
கைநழுவி போன 2ஆவது முழு அமைச்சர் பதவிக்கான பரிந்துரையை மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் முன்மொழிய வேண்டும் என சுங்கை சிப்புட் தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன் வேண்டுகோள் விடுத்தார்.

மஇகாவின் 71ஆவது பொதுப் பேரவை நாளை 24ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மஇகாவை சார்ந்திருக்கும் பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
அவ்வகையில் கட்சி இழந்து நிற்கும் 2ஆவது முழு அமைச்சர் பதவியை  மீட்டெடுப்பதற்கு இந்த பேராளர் மாநாடு  வழிவகை காண வேண்டும்.
கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் வகித்து வந்த முழு அமைச்சர் பதவி 2015இல் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின்போது பறிபோனது. பின்னர் 2016இல் கட்சியின் தேசிய துணைத் தலைவரான டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணிக்கு துணை அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது.

இன்று நடைபெறும் மஇகா பொதுப் பேரவையில் இழந்து விட்ட மற்றொரு முழு அமைச்சர் பதவிக்கான பரிந்துரையை டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் முன்மொழிய வேண்டும் என சுங்கை சிப்புட் பேராளருமான  மணிமாறன் வலியுறுத்தினார்.

கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பின்னர் 20011ஆம் ஆண்டு நடைபெற்ற மஇகாவின் பொது பேரவையில் கட்சியின் தேசியத் தலைவராக இருந்த டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் தோட்டத் தொழில், மூலபொருள் துணை அமைச்சராக பதவி வகித்து வந்த வேளையில் அவரை பிரதமர் துறை அமைச்சராக பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அறிவித்தது ஒரு வரலாறாகும்.

அதேபோன்றதொரு வரலாற்று பதிவினை நாளை நடைபெறும் மஇகா பேராளர் மாநாடு பதிவு செய்ய வேண்டும் என மணிமாறன் குறிப்பிட்டார்.

தற்போது மஇகாவை  பிரதிநிதித்து  டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் முழு அமைச்சராகவும் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, டத்தோ எம்.சரவணன், டத்தோ ப.கமலநாதன் ஆகியோர் துணை அமைச்சர்களாக உள்ளனர்.

No comments:

Post a Comment