Thursday 15 July 2021

'புளூபிரிண்ட்' திட்டத்தின் கீழ் இந்தியர்களுக்கு வணிகப் பொருட்கள் வழங்கப்பட்டன- KKI பாலசந்திரன்

ரா.தங்கமணி

உலு சிலாங்கூர்-

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வருமானம் இழந்துள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிலாங்கூர் மாநில அரசின் 'புளுபிரிண்ட்' (Blueprint) உதவித் திட்டத்தின் கீழ் இந்தியக் குடும்பங்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என்று உலு சிலாங்கூர் கோலகுபுபாரு இந்திய கிராமத் தலைவர் (KKI) பாலசந்திரன் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவின் கண்காணிப்பின் கீழ் வழங்கப்பட்டு வரும் புளுபிரிண்ட் உதவித் திட்டத்தில் பல தரப்பட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

அவ்வகையில் சிறு, நடுத்தர வணிகங்களை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் இங்கு சிறு வணிகங்களை மேற்கொண்டு வரும் இந்தியர்களை அடையாளம் கண்டு அதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட இலாகாவிடம்  சமர்ப்பிக்கப்பட்டன.

முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்பட்ட இவர்களுக்கு உதவிப் பொருட்கள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் அணமையில் நான்கு இந்தியர்களுக்கு அப்பொருட்கள் வழங்கப்பட்டன என்று பாலசந்திரன் குறிப்பிட்டார். 

இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிலாங்கூர் மாநில அரசு வழங்கி வரும் வாய்ப்புகளை இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் சொன்னார்.


Wednesday 14 July 2021

சிம்பாங் லீமா மின்சுடலையின் தகன இயந்திரம் பழுதுபார்க்க நடவடிக்கை- கணபதிராவ்


 ஷா ஆலம்-

கிள்ளான் சிம்பாங் லீமா மின்சுடலையில் பழுதடைந்திருக்கும் தகன இயந்திரத்தை சரி செய்வதற்கு மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  இருப்பதாக சிலாங்கூர் மாநில  ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கிள்ளான், ஷா ஆலம் மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுவதோடு அதனால் மரணமடைவோரின் எண்ணிக்கையும் அண்மைய காலமாக அதிரித்து காணப்படுகிறது.

சிம்பாங் லீமா மின்சுடலையில் ஒரு தகன இயந்திரம் பழுதடைந்து கிடப்பதால் சடலங்களை தகனம் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதோடு அது மரணமடைந்தோரின் குடும்பத்தினரையும் அசெளகரியத்திற்கு ஆளாக்குகிறது.

இவ்விவகாரம் இன்றைய ஆட்சிக்குழு கூட்டத்தில் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரி கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டதோடு இதற்கு உரிய தீர்வை மாநில அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.

இதனிடையே, மாநில அரசாங்க செயலாளருடன் தொடர்பு கொண்ட மந்திரி பெசார் கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் கீழ் இயங்கும் சிம்பாங் லீமா மின்சுடலை தகன இயந்திரத்தை பழுதுபார்க்கும் நடவடிக்கை எடுக்கப்படி கேட்டுக் கொண்டதாகவும் கணபதிராவ் குறிப்பிட்டார்.

டான்ஶ்ரீ முஹிடினை ஆதரிக்கும் அம்னோ எம்.பி.க்கள்

கோலாலம்பூர்-

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கான ஆதரவை அம்னோ வாபஸ் பெற்று ஒரு வாரம் நெருங்கும் நிலையில்  டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான அரசாங்கம் கவிழாமல் இருப்பதற்கு அமைச்சரவை உட்பட அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு ஆதரவாக இருப்பதுதான் காரணமாக உள்ளது.

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வேளையில் இன்னும் பலர் அவர்களின் ஆதரவாளராக உள்ளனர்.

அதோடு கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் அம்னோ ஆதரவாளர்கள் இருப்பதால் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் இன்னமும் வலுவாக உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

Tuesday 13 July 2021

பாஸ் ஆதரவு மன்ற பேரவையின் மகளிர் பிரிவுத் தலைவி குமுதா மரணம்

புத்ராஜெயா- 

பாஸ் ஆதரவு மன்ற பேரவையின் மகளிர் பிரிவுத் தலைவி குமாரி குமுதா இராமன்  திடீர் மரணமடைந்தது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இஸ்லாமிய கட்சி என வர்ணிக்கப்படும் பாஸ் கட்சியில் ஆதரவாளர் மன்றத்தின் பிரபல நபராக விளங்கிய குமுதா, தற்போது மகளிர், குடும்ப, சமூக நல துறை துணை அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

புத்ராஜெயா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று மரணமடைந்தார்.

12, 13ஆம் பொதுத் தேர்தல்களில் திராம் சட்டமன்றத் தொகுதியிலும் 14ஆவது பொதுத் தேர்தலில்ஜொகூர் ஜெயா சட்டமன்றத் தொகுதியிலும் பாஸ் கட்சியின் வேட்பாளராக குமாரி குமுதா களம் கண்டார். 

குமுதாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கு பாஸ் கட்சி அனுதாபம் தெரிவித்துள்ளது.

வறுமையில் வாடுவோருக்கான உதவித் திட்டங்கள் தொடரப்பட வேண்டும் - கோபி வலியுறுத்து

 

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

கோவிட்-19 பெருந்தொற்றால் வருமானம் இழந்து தவிக்கும் தரப்பினருக்கான உதவித் திட்டங்கள் தொடரப்பட வேண்டும் என்று சிலாங்கூர், அலாம் மெகா இந்திய சமூகத் தலைவர் மு.கோபி வலியுறுத்தினார்.

கோவிட்-19 பாதிப்பை கட்டுப்படுத்த நாட்டில் நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட நிலையில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்து வருமானப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்தகைய தரப்பினருக்கு நாடு முழுவதும் தற்போது உதவிப் பொருட்களை பல்வேறு தரப்பினர் வழங்கி வருகின்றனர். அதே போன்று கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வீ.கணபதிராவின் ஏற்பாட்டில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

வேலை வாய்ப்பை இழந்துள்ள மக்களும் வருமான ரீதியில் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ள மக்களும் தங்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தி கொள்ளும் வரை உதவிப் பொருட்கள் வழங்கப்படுவது தொடரப்பட வேண்டும்.

எம்சிஓ 3.0 முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும்  என்பது கேள்விக்குறியே. அதனை கருத்தில் கொண்டு மக்களுக்கான உதவித் திட்டங்கள் தொடரப்படுவதை மத்திய, மாநில அரசுகளும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொது அமைப்புகளும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கோபி குறிப்பிட்டார்.

Monday 12 July 2021

5,600க்கும் அதிகமான உதவிப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன- கணபதிராவ்


ரா.தங்கமணி 

கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலினால் அமலாக்கம் செய்யபட்டுள்ள எம்சிஓ 3.0 நடவடிக்கையினால் வருமானப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி. 

ஜூன் 1ஆம் தேதி முதல் இந்நாள் வரை இதுவரை 5, 600க்கும் அதிகமான உதவி பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் குறிப்பிட்டார். 


இன்றைய காலகட்டம் மக்களுக்கு சோதனையான காலகட்டம். பெரும்பாலானோர் வேலை,  வருமானம் இழந்து வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். 

இத்தகைய சூழலில் மக்களுக்கு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உதவிப் பொட்டலங்கள் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் மட்டுமல்லாது கிராமத் தலைவர்கள், மாநகர் மன்ற உறுப்பினர்கள், இந்திய கிராமத் தலைவர்கள் என பலவேறு தரப்பினரும் இந்த உதவிகளை  வழங்கி வருகின்றனர் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான கணபதிராவ் சொன்னார். 

Sunday 11 July 2021

வெள்ளைக் கொடியின் அர்த்தம் மக்களுக்கு தெரியாதா? சந்தேகம் எழுப்பும் குலாவின் காணொளி


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டை அண்மைய காலமாக உலுக்கி வரும் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று மக்களின் வாழ்வாதார சூழலை பாதித்துள்ளதோடு நாட்டின் அரசியல் நிலைத்தன்மையையும் சீர்குலைத்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்பட்டுத்த கடந்த ஜூன் மாதம் முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 (எம்சிஓ 3.0) அமல்படுத்தப்பட்ட நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் வெள்ளை கொடி, கறுப்பு கொடி பிரச்சாரம் சூடுபிடித்திருந்தது.

எம்சிஓ 3.0 அமலாக்கத்தினால் வேலை இழந்து வருமானம் பாதிக்கப்பட்டோர் தங்களுக்கு உதவிகள் வேண்டும் எனும் நோக்கில் தங்களது வீடுகளில் வெள்ளைக் கொடியை பறக்கவிட்டனர்.

வெள்ளைக் கொடி பிரச்சாரம் மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில் பல குடும்பங்களுக்கு உதவிக்கரங்கள் நீண்டன. 'மக்களுக்காக மக்கள்' எனும் முழக்கத்துடன் இந்த வெள்ளைக் கொடி பிரச்சாரம் பல குடும்பங்களுக்கு கை கொடுத்துள்ளது.

அதே போன்று அரசியலை உள்ளடக்கி  கறுப்புக் கொடி பிரச்சாரம் சமூக ஊடகங்களில்  முன்னெடுக்கப்பட்டது. பிரதமர் பதவி விலக வேண்டும், நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அவசரகால சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கறுப்புக் கொடி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் வெள்ளைக் கொடி, கறுப்புக் கொடி பிரச்சாரம் என்னவென்று தெரியாமல் மக்கள் குழம்பி போயுள்ளனர் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் டிக் டாக் காணொளியை வெளியிட்டுள்ள ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரனின் செயல்தான் மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெருந்தொற்று காலத்தில் வருமானம் இழந்து தவிப்போரின் இன்னலை தீர்க்க தொடங்கப்பட்ட வெள்ளைக் கொடி பிரச்சாரத்தின் பயனாக மக்களுக்கான உதவித் திட்டங்களை பல சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது இயக்கங்கள், தனி நபர்கள் என பல்வேறு தரப்பினர் ஆக்கப்பூர்வ நடவடிக்கையை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் வெள்ளைக் கொடியின் அர்த்தம் என்னவென்று மக்களுக்கு தெரியவில்லை என கூறுவது நியாயமாகுமா? வெள்ளைக் கொடிக்கான அர்த்தம் என்னவென்று கூட தெரியாத  அளவுக்கு மக்கள் மடையர்களாகவா இருக்கிறார்கள்? என்ற சந்தேகத்தை  குலாவின் காணொளி எழுப்புகிறது.

குலாவின் காணொளி 

22 மாத கால ஆட்சியில் என்ன செய்தோம், எதை செய்யாமல் விட்டோம் என்ற குழப்பத்தில் நீங்கள் (குலசேகரன்) வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து செயல்படக்கூடியவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு இருந்த மக்கள்தானே.  நாம் என்ன சொன்னாலும் வாய் மூடி கேட்டுக் கொண்டிருப்பார்கள்? என்ற எண்ணத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற தோரணையில் காணொளி வெளியிட வேண்டாம் YB குலா.

அதேபோன்று மக்கள் இப்போதுதான் தெளிவாக உள்ளனர். யாரை நம்ப வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும். யாரை புறந்தள்ள வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து செயல்படக்கூடிய அளவுக்கு மக்கள் தெளிவாக உள்ளனர். 

அரசியல்வாதிகளிடமே தெளிவாக சிந்தித்து செயல்படக்கூடிய நிலையில் இருக்கும் மக்களுக்கா வெள்ளைக் கொடியின் அர்த்தம் தெரியாது... விளக்குவீர்களா குலா.....? 

Saturday 10 July 2021

வாடகை வாகனத்தில் இரு பயணிகள்; அரசு அனுமதிக்க வேண்டும்

சுங்கை சிப்புட்-

வாடகை வாகனத்தில் இரு பயணிகள் பயணிக்க அரசு அனுமதி வழங்க வேண்டுமென நாட்டிலுள்ள அனைத்து வாடகை வாகன ஓட்டுநர்கள் சார்பில் சுங்கை சிப்புட் வாடகை வாகன ஓட்டுநர் சங்கம் கோரிக்கை முன் வைப்பதாக அதன் துணைத் தலைவர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் நடமாட்ட கட்டுப்பாடு விதிமுறைகளின்படி வாடகை வாகனத்தில் அவசர மருத்துவ பயணத்திற்கு இருவரும், இரத பயணத்திற்கு ஒருவர் மட்டுமே பயணிக்க முடியுமெனும்  நிலை இருக்கிறது

ஏற்கனவே போதிய வருமானத்தை இழந்த நிலையில், இந்த ஆணை மேலும் எங்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் அல்லது ஒரே இடத்துக்கு செல்ல விரும்பும் இரு பயணிகள், இரு வாடகை வாகனத்தை பயன்படுத்த தவிர்க்கின்றனர். இது அவர்களுக்கும் சுமை ஓட்டுனர் எங்களுக்கும் இழப்பு. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் வாடகை வாகன ஓட்டுநர்கள் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்

எனவே குறைந்தபட்சம் வாடகை வாகனத்தில் இருவர் பயணிக்கவும் அவசர மருத்துவ தேவைகளுக்கு மூவர் பயணிக்கவும் அரசு அனுமதிக்க வேண்டுமென சுங்கை சிப்புட் வாடகை வாகன ஓட்டுநர் சங்கம் கோரிக்கை வைப்பதாக  பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்

டான்ஶ்ரீ முஹிடின் யாசின் முன்னாள் பிரதமரே- டத்தோஶ்ரீ தனேந்திரன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் பெரும்பான்மையாக இருந்த அம்னோ தனது ஆதரவை மீட்டுக் கொண்ட நிலையில் பெரிக்காத்தான் நேஷனல் அரசு இனியும் சட்டப்பூர்வமானது அல்ல. எனவே அதன் தலைவரான டான்ஶ்ரீ முஹிடின் யாசின் மலேசிய மக்கள் சக்தி கட்சியை பொறுத்தவரை இனி முன்னாள் பிரதமரே என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

பெரும்பான்மை இல்லாத ஓர் அரசு ஆட்சியில் நீடிக்க முடியாது என்பதை அரசியலமைப்பு சட்டம் கூறுகின்ற நிலையில் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தை கூட்டி தனக்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து இன்னும் நாங்கள் தான் அரசாங்கம் என்று கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கக்கூடாது.

ஜனநாயகம் இல்லாத ஓர் ஆட்சியில் கோவிட்-19 பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்  நிலைதன்மையற்ற அரசியல் சூழலால் வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் பொருளாதார பின்னடைவை நோக்கி நமது நாடு சென்றுக்  கொண்டிருக்கிறது.

இடைக்கால அரசு தேவையில்லை

அதோடு, பெரிக்காத்தான் நேஷனல் அரசு கலைக்கப்பட்டால் பொதுத் தேர்தல் நடத்தப்படுவது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வாக அமையும். 

ஆனால், நாட்டின் இன்றைய சூழலில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவது சாத்தியம் இல்லாத நிலையில் இடைக்கால அரசு நியமனம் செய்யப்படுவதை காட்டிலும் நாட்டின் தலைமைச் செயலாளரையே நாட்டின் தலைவராக மாமன்னர் நியமிக்க வேண்டும். 

3 மாத காலகட்டத்தில் நாட்டின் தலைமைச் செயலாளர் சிறந்த முறையில் செயல்பட்டு கோவிட்-19 பாதிப்புகளை 80 விழுக்காடு கட்டுப்படுத்திய பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு அதன் பின்னர் மக்களின் அங்கீகாரத்துடன் புதிய அரசாங்கம் ஆட்சியில் அமர வேண்டும் என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.

 

இனம், மதங்களை கடந்து உதவி நலத்திட்டம்

ஈப்போ-

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக விதிக்கப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையினால் வேலையிழந்து வருமானம் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தம்புன் கிளை.

வருமானம் இழந்து தவிப்பவர்கள் பசியில் வாடி விடக்கூடாது எனும் நோக்கில் உணவுப் பொட்டலங்களை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக அதன் தலைவர் தினேஸ் காளியப்பன் கூறினார்.

இனம், மதங்களை கடந்து முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் உட்பட வருமானம் இன்றி தவிப்பவர்களுக்கு தமது குழு உதவிக்கரம் நீட்டி வருகிறது. அதன் முதற்கட்டமாக 10 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

Thursday 8 July 2021

பிஎன் அரசுக்கான ஆதரவை மீட்டுக் கொண்டது அம்னோ

கோலாலம்பூர்-

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொள்வதாக அம்னோ இன்று அறிவித்துள்ளது. 

நேற்று நடைபெற்ற அம்னோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி அறிவித்தார். 

கோவிட்-19 வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் பதவியிலிருந்து டான்ஸ்ரீ முஹிடின் யாசின் விலக வேண்டும் எனவும் புதியவர் ஒருவர் பிரதமராக பதவியேற்க வழிவிட வேண்டும் எனவும் ஸாயிட் ஹமிடி குறிப்பிட்டார். 

Wednesday 7 July 2021

துணைப் பிரதமர் ஆனார் டத்தோஸ்ரீ இஸ்மாயில்

கோலாலம்பூர்-

தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் துணை பிரதமராக நியமனம் செய்யப்படவிருப்பதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்துள்ளார். 

துணைப் பிரதமாக நியமிக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ இஸ்மாயில் தற்காப்பு அமைச்சர் பதவியை தொடரும் அதே வேளையில் வெளியுறவு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் முதன்மை அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரித்துள்ளார்.

Wednesday 30 June 2021

உதவி வேண்டுமா? வெள்ளை கொடியை ஏற்றுங்கள்


கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்பினால் அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் வருமானம் பாதிக்கபட்டுள்ள மலேசியர்கள் தங்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பிறரின் உதவிகள் கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் இருக்கும் மலேசியர்களுக்கு ஒரு தீர்வாக அமைந்துள்ளது வெள்ளை கொடி பிரச்சாரம். வறுமையில் சிக்கி தவிப்பவர்கள் தங்கள் வீடுகளில் வெள்ளை கொடியை ஏற்றினால் உதவும் நல்லுள்ளம் கொண்டவர்களால் அவர்களுக்கு உதவிகள் வந்து சேரலாம் எனும் எண்ணத்தில் வெள்ளை கொடி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வெள்ளை கொடி பிரச்சாரத்திற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் வறுமையில் உள்ளவர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Saturday 12 June 2021

செட்டி பாடாங் பெயர் நிலைநிறுத்தம்

ஷா ஆலம்-

அண்மைய காலமாக சர்ச்சையாக வெடித்திருந்த செட்டி பாடாங் விவகாரத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் முயற்சியில் அப்பெயர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று கணபதிராவின் சிறப்பு அதிகாரி ரா.ஆனந்தன் தெரிவித்தார்.

இந்திய வணக சமூகமான செட்டி சமூகத்தின் அடையாளமாக திகழும் கிள்ளான் செட்டி பாடாங் இந்நாட்டு சமூகத்தின் வரலாற்றுச் சின்னமாக திகழ்ந்து வருகிறது.

சுற்றுலா தலமாக உருவாக்கம் காணும் Royal Klang Town Heritage Walk என அழைக்கப்படும்  வரலாற்று முனையத்திற்காக செட்டி பாடாங் பெயரை மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை கிள்ளான் நகராண்மைக் கழகம் முன்னெடுத்தது. அதற்கு இந்திய சமுதாயத்தின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் கணபதிராவ் முயற்சியில் செட்டி பாடாங் பெயர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று ஆனந்தன் கூறினார்.

செட்டி பாடாங் பெயரை நிலைநிறுத்த முயற்சியை முன்னெடுத்த சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரி, கணபதிராவ் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.


பூ விற்பனைக்கு அனுமதி - டத்தோஶ்ரீ சரவணன்

கோலாலம்பூர்-

நாட்டில் அமல்படுத்தப்பட்ட முழு முடக்கத்தினால் முடங்கி போன பூ விற்பனை தொழில்துறை மீண்டும் செயல்படுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றத்துடனான சந்திப்புக் கூட்டத்தில் பூ விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று கூறிய டத்தோஶ்ரீ சரவணன், கேமரன் மலை பூ உற்பத்தியாளார்கள் உட்பட இதர பூ உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் விவசாயம், மூலப்பொருள் தொழில்துறை அமைச்சின் அலுவலகத்தின் அனுமதி கடிதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் சொனார்.

ஜூன் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட முழு முடக்கத்தின் காரணமாக பூ விற்பனைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பூ உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஆலய வழிபாட்டிற்கும் வீட்டில் சமய நிகழ்வுகளுக்கும் பூக்கள் அவசியமானது எனும் நிலையில் பூ விற்பனைக்கு அனுமதி தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் டத்தோஶ்ரீ சரவணன் முயற்சியில் பூ வியாபாரிகளின் வாழ்வில் ஒளியேற்றப்பட்டுள்ளது.


அம்னோவிலிருந்து ஹிஷாமுடின் நீக்கமா?

கோலாலம்பூர்-

வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேன் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டதாக வெளியான தகவலை அக்கட்சி மறுத்தது. டான்ஶ்ரீ முஹிடினுக்கு பதிலாக டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் பதவியேற்கவுள்ளதாக நேற்று தகவல் உலாவி கொண்டிருந்த நிலையில் அவர் செம்புரோங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக போலியான கடிதம் சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்நிலையில் அம்னோவின் உச்சமன்றக் கூட்டம் நேற்று நடைபெறாத நிலையில் டத்தோஶ்ரீ  ஹிஷாமுடினை கட்சியிலிருந்து எவ்வாறு வெளியேற்றிருக்க முடியும் என்று அம்னோ வட்டாரம் கேள்வி எழுப்பியுள்ளது.


உதவித் திட்டங்களை துரிதப்படுத்துக- டத்தோஶ்ரீ நஜிப்

கோலாலம்பூர்-

இன்னும் இரு வாரங்களுக்கு முழு முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கான உதவித் திட்டங்களை பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் வலியுறுத்தினார்.


ந்த முழு முடக்க காலத்தில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருக்க ஐ-சினார், ஐ-லெஸ்தாரி போன்ற திட்டங்களை மீண்டும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று வலுயுறுத்திய நஜிப், மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதில் அரசாங்கம் மெத்தனப்போக்கை கடைபிடிக்கக்கூடாது என்றார்.


Friday 4 June 2021

DMPK பெயர் பலகை அகற்றம்

கிள்ளான் -

கிள்ளானில் வரலாற்றுப்பூர்வ  இடமாக விளங்கி வரும் செட்டி பாடாங்-ஐ Dataran Majlis Perbandaran Klang என மாற்றுவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக அங்கு பொருத்தப்பட்டிருந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டன.

இந்திய வணிக சமூகமான செட்டி சமூகத்தின் வரலாற்று தடமான இது அழிக்கப்பட்டு விடக்கூடாது எனும் நோக்கில் செட்டி பாடாங்கிற்கு படாங்கிற்கு பதிலாக டத்தாரான் செட்டி என பெயர் மாற்றம் செய்யப்படலாம் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் முன்மொழிந்த பரிந்துரை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செட்டி பாடாங்-ஐ காக்க அரசியல் பேதங்களை கடந்து ஒன்றிணைவோம்

ஷா  ஆலம்- 

கிள்ளான் பாடாங் செட்டி வரலாற்று தடத்தை பாதுகாப்பதில் அரசியல் பேதங்களை கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைய வேண்டும் என்று மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ரா.ஆனந்தன் வலியுறுத்தினார்.

இந்திய சமூக வணிகமான செட்டி சமூகத்தின் 100 ஆண்டுகால வரலாற்றை கொண்டுள்ள செட்டி பாடாங் பெயர் மாற்றப்படுவது தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில் செட்டி பாடாங்-ஐ 'டத்தாரான் செட்டி' என பெயர் மாற்றத்தை முன்மொழிந்துள்ள சிலாங்கூர்  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவின் பரிந்துரையை மலேசிய இந்தியர் குரல் வரவேற்கிறது.

அதே வேளையில் ஒட்டுமொத்த இந்திய சமுதாயமும் செட்டி பாடாங் வரலாறு நிலைபெற்றிட அரசியல் பேதங்களை கடந்து இந்தியர் என்ற ஒருமித்த உணர்வுடன் ஒன்றிணைய வேண்டும் என்று ஆனந்தன் வலியுறுத்தினார்.


சாலை வாகனங்கள் அதிகரிப்பு

 கோலாலம்பூர்-

நாட்டில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும் இன்னமும் சாலைகளில் அதிகமான வாகனங்களை காண முடிகிறது என்று தற்காப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

ஜூன் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு முடக்கத்தின் 4ஆவது நாளான இன்றும் கூட பெரும்பாலானோர் இன்னமும் வெளிநடமாட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் சோதனை சாவடிகள் அதிகப்படுத்தப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.


மக்களின் பிரச்சினைகளை விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்டுக

கோலாலம்பூர்-

மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க  நாடாளுமனறம் கூட்டப்பட வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் வலியுறுத்தினார்.

கோவிட்-19, பாலஸ்தீன தாக்குதல் உட்பட நாட்டு மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், கல்வி, வேலையின்மை, சமூகநலன் போன்ற பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. நடப்பிலுள்ள அவசர கால சட்டத்தை நாடாளுமன்றத்தை இன்னமும் முடக்காமல் நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.


தடுப்பூசியை கட்டுமாக்குங்கள்- பிரதமர் பரிந்துரை

 


கோலாலம்பூர்-

நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்டுவதில் தாமதம், அல்லது தோல்வி ஏற்பட்டால் மக்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்குவதை பரிசீலிக்கும்படி பிரதமட் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கோவிட் கையிருப்பை உறுதி செய்யும் செயற்குழுவிடம் பரிந்துரைத்துள்ளார்.

கோவிட் தடுப்பூசியை ஒரு தரப்பினருக்கு செலுத்தி விட்டு மற்றொரு தரப்பினர் அதை எடுத்துக் கொள்ளாவிட்டால்  கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு எவ்வித பலனையும் கொண்டுவராது என்று அவர் சொன்னார்.


6 லட்சத்தை தொட்டது கோவிட்-19 பாதிப்பு


கோலாலம்பூர்-

நாட்டை உலுக்கி வரும் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது. இந்த பெருந்தொற்றுக்கு இன்று புதிதாக 7,748 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 603,122ஆக பதிவாகியுள்ளது. கோவிட்-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.


Thursday 3 June 2021

செட்டி பாடாங்-க்கு பதில் டத்தாரான் செட்டி' என பரிந்துரை

ஷா ஆலம்-

நாட்டில் தற்போது சர்ச்சையாக  உருவெடுத்துள்ள செட்டி பாடாங் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணும் வகையில் செட்டி பாடாங் என்பதை டாத்தாரான் செட்டி என  மாற்றுவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

இந்திய வணிக சமூகத்தின் அடையாளமாக திகழும் செட்டி சமுகத்தின் பங்களிப்பை உணர்த்தும் செட்டி பாடாங்கை அழிப்பதற்கு கிள்ளான்  நகராண்மைக் கழகம் முயற்சிக்கிறதா?

2008ஆம் ஆண்டுக்கு முன்பே இத்தகைய முயற்சிக்கு தேசிய முன்னணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2015 இல் மீண்டும் இந்த விவகாரம் எழுந்தபோது கோத்தா அலாம் ஷா  சட்டமன்ற உறுப்பினராக இருந்த நானும் கிள்ளான் நகரக் கழக உறுப்பினராக இருந்த யுகராஜாவும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தோம். அதனால் அத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

இப்போது மீண்டும் அந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ள கிள்ளான் நகராண்மை கழகத்தின் உள் நோக்கம் தான் என்ன? 

இவ்விவகாரம் தலைதூக்க விடாமல் இருப்பதற்கு ஏதுவாக செட்டி பாடாங்-ஐ இனி  டத்தாரான் செட்டி  என மாற்றுவதோடு அதனை ஆவணப்படுத்தும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சிக் குழுக் கூட்டத்தில் பரிந்துரைத்தேன். அதற்கு ஆட்சிக்குழு  உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர் என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.

Wednesday 2 June 2021

எம்40 பிரிவினருக்கு உதவித் திட்டங்கள் எங்கே? நஜிப் கேள்வி

 கோலாலம்பூர் -

எம்40 பிரிவைச் சேர்ந்த வர்க்கத்தினருக்கு அரசாங்கம் வழங்கியுள்ள புதிய திட்டங்கள் என்ன என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு முடக்கத்தை அடுத்து பிரதமர் உதவி நிதி திட்டங்களில் எம்40 பிரிவினர் விடப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

5000 வெள்ளிக்கும் அதிகமான குடும்ப வருமானம்  கொண்ட எம்40 பிரிவினருக்கு பிபிஆர் நிதி, ஐ-லெஸ்தாரி, ஐ-சினார், மின்சார கழிவு, ஆஸ்ட்ரோ கட்டண கழிவு என எவ்வித உதவி திட்டங்களையும் நடப்பு அரசாங்கமான பெரிக்காத்தான் நேஷனல் வழங்கவில்லை என்று டத்தோஸ்ரீ நஜிப் குற்றஞ்சாட்டினார்.