Thursday 30 July 2020

பிஎன் கூட்டணியிலிருந்து அம்னோ விலகியது

கோலாலம்பூர்-
பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்)  கூட்டணியிலிருந்து அம்னோ விலகுவதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பாஸ் கட்சியுடன் இணைந்து தேசிய முன்னணி அமைத்துள்ள முவாஃபாக்காட் நேஷனல் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் இம்முடிவு அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து அம்னோ விலகினாலும் அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அரசுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவர் என்று ஸாயிட் ஹமிடி மேலும் சொன்னார்.

Wednesday 29 July 2020

மூன்று துறைகளில் மட்டுமே அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இனி அந்நியத் தொழிலாளர்கள் மூன்று துறைகளில் மட்டுமே பணி புரிவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

கட்டுமானம்,விவசாயம், தோட்டத்துறை ஆகியவற்றில் மட்டுமே அந்நியத் தொழிலாளர்கள்  பணியாற்ற அரசாங்கம் அனுமதிக்கிறது என்று மனிதவள துணை அமைச்சர் அவாங் சலாஹுடின் தெரிவித்தார்.

ஏனைய துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு உள்ளூர் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

தற்போது நாட்டில் அந்நியத் தொழிலாளர்கள் உற்பத்தி, சேவை துறைகளில் பெருமளவு பணியாற்றி வருகின்றனர் என்று அவர் சொன்னார்.

வங்கிக் கடன் செலுத்தும் தவணைக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு- பிரதமர்

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்று பரவல், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) ஆகியவற்றால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்கள் தங்களது வங்கிக் கடனை செலுத்துவதற்கான தவணைக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

ஆனால் இந்த சலுகை  இவ்வாண்டு வேலை இழந்தவர்களுக்கு மட்டுமே ஆகும். வேலை இழந்தவர்கள், தற்போது வேலை வாய்ப்பை தேடுபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.

இதன் தொடர்பில் நிதியமைச்சர், பேங்க் நெகரா ஆளுநருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் அம்லபடுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் வேலை வாய்ப்பை இழந்தவர்கள் தங்களது வீடு, வாகன கடன் செலுத்தும் தவணை ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

SOP-ஐ பின்பற்றாத நஜிப் ஆதரவாளர்கள்; கோவிட்-19 பரவல் அதிகரிக்குமா? பீதியில் மலேசியர்கள்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான் ஊழல் வழக்கு விசாரணையின் தீர்ப்பின்போது திரண்ட ஆதரவாளர்கள் கோவிட்-19 பரவல் அச்சம் மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது.

நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் டத்தோஶ்ரீ நஜிப் தொடர்புடைய எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தில் நிகழ்ந்த ஊழல் முறைகேடு வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டனர்.

கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று  அரசாங்கம் அறிவுறுத்தியும் பலரும் அதனை பின்பற்ற தவறியுள்ளனர்.

இக்கூட்டத்தில் திரண்ட ஆதரவாளர்களிடையே சுய ஒழுக்கம் இல்லாதது குறித்து சுகாதாரத் துறை தலைமை இயக்குன் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் தனது கவலையை தெரிவித்தார்.

நாட்டில் ஏற்கெனவே கோவிட்-19 பாதிப்பு மீண்டு அதிகரித்து வரும் நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களால் மீண்டும் கோவிட்-19 அச்சம் நாட்டு மக்களிடையே தலை தூக்க தொடங்கியுள்ளது.

தற்போது இரண்டு இலக்கமாக இருக்கும் கோவிட்-19 பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்று இலக்கமாக எட்டினால் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) மீண்டும் அமலாக்கம் செய்யப்படும் என்று முதன்மை தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருந்தார்.

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பெரும் திரளாக திரண்ட நஜிப்பின் ஆதரவாளர்களால் கோவிட்-19 பரவல் அதிகரிக்குமா? மீண்டும் எம்சிஓ அமலாக்கம் காணுமா? என்ற பீதி மலேசியர்களிடையே ஏற்பட்டுள்ளதை சமூக ஊடகங்களின் வாயிலாக காண முடிகிறது.  

சட்டம் நடுநிலையாக செயல்படுகிறது- பிரதமர்

கோலாலம்பூர்-

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு நாட்டின் சட்டத்துறை நடுநிலையாகவும் சுதந்திரமாகவும் செயல்படுவதை புலப்படுத்தியுள்ளது என்று பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

தனது நண்பருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தண்டனை வேதனை அளிப்பதாக உள்ளது. ஆனாலும் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் சட்டம் நிலைநாட்டப்படுவது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.



ஆயினும் டத்தோஶ்ரீ நஜிப் இத்தீர்ப்பு எதிராக மேல்முறையீடு செய்யவிருக்கும் முடிவை அரசாங்கம் மதிக்கிறது. சட்டம் அனைவருக்கும் பொதுவாக செயல்படுகிறது என்பதை புலப்படுத்தும் வகையில் அனைவருக்கும் வழிவிடப்படுகிறது என்று அவர் சொன்னார்.



தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது; நஜிப் ஆதங்கம்

கோலாலம்பூர்-

எஸ்ஆர்சி நிறுவனம் தொடர்புடைய வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமக்கு அதிருப்தி அளிப்பதாகவும் ஊழல் குற்றச்சாட்டில் தனது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதற்கு தொடர்ந்து போராட்டம் நடத்தவிருப்பதாக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் நீதிமன்ற வளாகத்தில் தெரிவித்தார்.

எஸ்ஆர்சி  நிறுவனம் தொடர்பில் தமது தரப்பு சார்பாக வாதிட்ட டான்ஶ்ரீ ஷாபி, வழக்கறிஞர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வாதிட்ட போதிலும் அதனை நிராகரித்து விட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதிருப்தி அளிக்கிறது. இருந்த போதிலும் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடுவேன் என்று அவர் சொன்னார்.

கூடிய விரைவில் தமது தரப்பு வாதத் தொகுப்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் தமது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைத்தெறிவேன் என்று நீதிமன்றத்தில் திரண்டிருந்த 100க்கும் மேற்பட்ட உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஶ்ரீ நஜிப் இவ்வாறு கூறினார்.

இதற்கு முன்னதாக எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதி மோசடி, கள்ளப்பணம் பரிமாற்றம், அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட டத்தோஶ்ரீ நஜிப்புக்கு  12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வெ.210 மில்லியன் அபராதமும் வழங்கி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


டத்தோஶ்ரீ நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறை; வெ.210 மில்லியன் அபராதம்

கோலாலம்பூர்-

வெ.42 மில்லியன் வெள்ளி மோசடி நிகழ்த்தப்பட்ட எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்புடைய வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.


இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில்  டத்தோஸ்ரீ நஜிப் மீதான ஊழல் வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

இத்தீர்ப்பில் ஒவ்வொரு குற்றங்களுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்ற அடிப்படையில் 72 ஆண்டுகள்  சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆயினும் இச்சிறைத் தண்டனை ஒருசேர விதிக்கப்படுவதால் 12 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி முகமட் நஸ்லான் தமது தீர்ப்பில் கூறினார்.

மாதத்திற்கு இரு முறை காவல் நிலையத்தில் டத்தோஸ்ரீ நஜிப் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் வெ. 20 லட்சம் ஜாமீன் தொகை செலுத்தி வெளியேறினார்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையிலும் டத்தோஶ்ரீ நஜிப் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்வார் என கூறப்படுகிறது.


Tuesday 28 July 2020

தேர்தலில் போட்டியிடலாம்; வாக்களிக்கலாம்- மேல் முறையீட்டு வழக்கில் டத்தோ சிவராஜ் வெற்றி

கோலாலம்பூர்-
தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாக்களிப்பதற்கும் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்த  வழக்கில் மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ சி.சிவராஜ் வெற்றி பெற்றார்.
இந்த மேல் முறையீட்டு வழக்கில் சிவராஜுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்தும் உத்தரவிட்டது  டத்தோஶ்ரீ கமாலுடின் முகமட் சைட் தலைமையிலான மூன்று பேர் கொண்ட மேல் முறையீட்டு நீதிமன்றம்.

கேமரன் மலை தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ சிவராஜ் பூர்வக்குடியினருக்கு கையூட்டு வழங்கியதன் குற்றச்சாட்டின் பேரில்  2018ஆம் ஆண்டு தொடங்கி ஐந்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் தடை விதிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின்  முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று டத்தோ சிவராஜ்  வழக்கு தொடர்ந்தார்.

இதனிடையே, தமக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பில் தற்போது நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. ஜனநாயக உரிமைகளில் ஒன்றான வாக்களிக்கும் உரிமை தமக்கு மீண்டும் வழங்கப்பட்டதில் பேரானந்தம் கொள்கிறேன்.

மேலும் இவ்வழக்கில் தமக்கு ஆதரவாக இருந்த ம இகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன், ஆதரவாளர்களுக்கு நன்றி கூறி கொள்வதாக டத்தோ சிவராஜ் குறிப்பிட்டார்.

சமூக இடைவெளியை கடைபிடிக்காத நஜிப் ஆதரவாளர்கள்-டத்தோ நோர் ஹிஷாம் வேதனை

கோலாலம்பூர்-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான் நிதி மோசடி வழக்கின் தீர்ப்பிற்காக இன்று நீதிமன்ற வளாகத்தில் திரண்ட ஆதரவாளர்களால் சுகாதார தலைமை இயக்குனர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
டத்தோஶ்ரீ நஜிப்பின் வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் காலை முதலே நீதிமன்ற வளாகத்தில் பெரும் திரளான ஆதரவாளர் கூட்டம் திரண்டது.

கோவிட்-19 தொற்று பரவல் அச்சம் நாட்டை தொற்றிக் கொண்டிருக்கும் சூழலில் சமூக இடைவெளியை யாரும் பின்பற்றாதது வேதனையளிக்கிறது என்று சுகாதார தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கவலை தெரிவித்தார்.

பெரும் திரளானோர் திரண்ட கூட்டத்தில் சுய கட்டுப்பாடு யாரும் கடைபிடிக்காதது வேதனைக்குரியதாகும் என்று அவர் மேலும் சொன்னார்.

நஜிப் குற்றவாளியே- நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர்-
1எம்டிபி நிறுவனத்தின் கிளை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென். பெர்ஹாட் நிறுவனத்தில் நிதி மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற டத்தோஶ்ரீ நஜிப்பின் வழக்கு விசாரணையில் தீர்ப்பில் நீதிபதி முகமர் நஸ்லான் முகமட் கஸாலி இந்த தீர்ப்பை வழங்கினார்.

42 மில்லியன் நிதி மோசடி தொடர்பில் தம் மீது சுமத்தப்பட்ட மூன்று மோசடி குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நியாயமான சந்தேகங்களை எழுப்ப நஜிப் தவறி விட்டார்.

இதன் அடிப்படையிலேயே அரசு தரப்பு நஜிப் மீது வழக்கு தொடர முடிந்தது என்று நீதிபதி சொன்னார்.

அதிகார துஷ்பிரயோகம், நிதி மோசடி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளிலும் டத்தோஶ்ரீ நஜிப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

மலேசியாவின் வரலாற்றில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முதல் பிரதமராக டத்தோஶ்ரீ நஜிப் திகழ்கிறார்.

Monday 27 July 2020

மலைப்படி மாரியம்மன் ஆலயப் பிரச்சினைக்கு இரு பரிந்துரைகள் முன்மொழிவு- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

ஷா ஆலம், செக்‌ஷன் 11இல் அமைந்துள்ள ஶ்ரீ மகா ஆலயம் (மலைப்படி மாரியம்மன்) ஆலயம் அகற்றப்பட வேண்டும் என்ற விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று மத்திய நில அலுவலகத்திடம் வலியுறுத்தப்பட்டதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

இவ்வாலயம் விவகாரம் தொடர்பில் மத்திய நில அலுவலகம், ஆலய தரப்பு  உட்பட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

150 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள இவ்வாலயப் பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண்பதற்காக இரு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.


முதலாவதாக, ஆலயத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அருகிலுள்ள பள்ளி மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இரண்டாவதாக ஆலயத்தை அகற்றுவற்கு முன்னர் வேறு இடம் ஆலயத்திற்கு (செக்‌ஷன் 11இல் மட்டும்) மாற்று நிலம் ஒதுக்கப்பட வேண்டு என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே தோட்டப்புற இந்தியர்களால் வழிபாடு செய்யப்பட்ட இந்த ஆலயம் வெறுமனே அகற்றப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அழுத்தமாக தெரிவிக்கப்பட்டது.


இந்த மாரியம்மன் ஆலய விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காணவே அனைத்துத் தரப்பினரும் விரும்புகின்றனர். இதில் அரசியல் ஆதாயம் தேட யாரும் முற்பட வேண்டாம், ஆலயம், தமிழ்ப்பள்ளி, சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்

செக்‌ஷன் 11இல் அமைந்துள்ள மலைப்படி மாரியம்மன் ஆலயம் அந்நிலத்திருந்து அகற்றப்பட வேண்டும் என்று அண்மையில் எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


Friday 24 July 2020

வறுமைகோட்டில் வாழும் தாய்மார்களுக்கு ''கிஸ்'' அட்டைகள் வழங்கப்பட்டன

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
வறுமை நிலையில் வாழும்  தாய்மார்களின் குடும்பச் சுமையை குறைக்கும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு  அறிமுகப்படுத்திய கிஸ் திட்டத்தில் பதிந்து கொண்ட தகுதியானவர்களுக்கு கிஸ் அட்டைகளை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் எடுத்து வழங்கினார். 
கோத்தா கெமுனிங் பகுதியில் பகுதியில் வசிக்கும் 18 வயதுக்கும் வயதுக்கும் குறைவான பிள்ளைகளை கொண்டுள்ள தனித்து வாழும் தாய்மார்கள் கிஸ் திட்டத்தில் பதிந்து கொண்ட நிலையில் அவர்களில் தகுதியானவர்களுக்கு கிஸ் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமது சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் வாயிலாக பதிந்து கொண்டவர்களில் 50 பேருக்கு இந்த கிஸ் அட்டைகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. 

தாய்மார்களின் சுமையை குறைக்கும் வகையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவியை பெறுபவர்கள் அதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தில் கோவிட்-19 எஸ்ஓபி-பின்பற்றி  இந்த 50 பேருக்கும் இரு கட்டங்களாக கிஸ் அட்டைகள் வழங்கப்பட்டன.

Wednesday 22 July 2020

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; 9 வீரர்களின் உடல்கள் கண்டெடுப்பு

பொகோத்தா-
 பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் காணாமல் போன 11 ராணுவ வீரர்களில் 9 பேரின் சடலங்களை கண்டுபிடித்துள்ளதாக கொலம்பியா ராணுவம் தெரிவித்துள்ளது. 
செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில் ஒன்பது பணியாளர்களின் சடலங்களை கண்டுபிடித்துள்ளதாக ராணுவப் பேச்சாளர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உணவகத்தில் உணவருந்திய பெண் அடையாளம் காணப்பட்டார்

சுங்கை சிப்புட்-
வீட்டுக்குள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவை மீறி உணவகத்தில் உணவருந்திய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பேரா மாநில சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் அஹ்மாட் சைடி முகமட் டாவுட் தெரிவித்தார். 

கையில் இளஞ்சிவப்பு வளையத்துடன் வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய பெண் ஒருவர் பண்டார் மேரு ராயாவில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.

பிகேபி மீறல்; வெ.6 லட்சம் அபராதத் தொகை வசூலிப்பு

கோலாலம்பூர்-
கோவிட்-19 நோய் தொற்று காரணமாக நாட்டில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய குற்றத்திற்காக தனிநபர், நிறுவனங்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட அபராதத் தொகையாக 6 லட்சம் வெள்ளி வசூலிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரை வெளியிடப்பட்ட அபராதத் தண்டனையின் வாயிலாக 5,928.000 வெள்ளி வசூலிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சுழல் முறையில் 54 பள்ளிகள் செயல்பட தொடங்கின

கோலாலம்பூர்-
இன்று முழுமையாக செயல்பட்டுள்ள பள்ளித் தவணையில்  54 பள்ளிகள் சுழல் முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளன. போதிய இடப் பற்றாக்குறையை எதிர்நோக்கியிருப்பதால் இந்த பள்ளிகள் அனைத்தும் காலை, மாலை என இரு வேளை பள்ளிகளாக செயல்படுகின்றன கல்வித்துறை தலைமை இயக்குனர் டாக்டர் ஹபிபா அப்துல் ரஹிம் தெரிவித்தார். 

கோவிட்-19 தாக்கத்தின் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதலாம் வகுப்பு நான்காம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

''Murder In Malaysia'' ஆவணப்படம்; ஆஸ்ட்ரோவுக்கு அபராதம் விதித்தது SKMM

கோலாலம்பூர்-
மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அல் ஜஸீராவில் ஒளியேறிய ''Murder In Malaysia'' எனும் ஆவணப்படத்திற்காக தனியார் ஒளிபரப்பு நிலையமான ஆஸ்ட்ரோவுக்கு தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் (SKMM) அபராதம் விதித்துள்ளது.
101  EAST எனும் நிகழ்ச்சியின் வாயிலாக ''Murder In Malaysia'' ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. ஆஸ்ட்ரோவின் முதன்மை நிறுவனமான Measat Broadcast Network Systems Bhd இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி ஒளிபரப்பப்பட்ட இந்த ஆவணப்படம் தொடர்பில் ஐந்தாண்டுகளுக்கு பின்னர் அபராதம் விதிக்கப்படுகிறது.

Tuesday 21 July 2020

உழைப்பால் உயரம் தொட்ட டத்தோஶ்ரீ ஏ.கே.சக்திவேல்

ரா.தங்கமணி

"'மகிழ்ச்சி''.... கபாலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உச்சரித்த இந்த வாசகம் அன்றைய காலகட்டத்தில்பெரும் புகழை அடைந்தது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் சொன்னதை காட்டிலும் பல மடங்கு தன்வாழ்நாளில் ''மகிழ்ச்சி'' எனும் வார்த்தையை அன்றாடம் உச்சரிக்கும் வேதச் சொல்லாக கொண்டிருக்கிறார் தொழிலதிபர் டத்தோஶ்ரீ ஏ.கே.எஸ் என்று அழைக்கப்படும் ஏ.கே.சக்திவேல்.
உழைப்பு மட்டுமே ஒரு மனிதன் வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கான அடிப்படையான ஆணிவேர் என்பதை தனது உழைப்பின் மூலம் வெற்றி சிகரத்தை தொட்டுள்ளார் ஈப்போவைச் சேர்ந்த டத்தோஶ்ரீ சக்திவேல்.

சுங்கை சிப்புட் சந்தைப் பகுதியில் காய்கறி விற்பனையாளராக தனது வியாபார தளத்தை தொடங்கிய சக்திவேல், இன்று அடைந்திருக்கும் உயரம் பிறரை வியப்படையச் செய்துள்ளது. காய்கறி விற்பனையை தொடங்கி செய்துக் கொண்டிருக்கும்போதே இது மட்டுமே தனது மைல்கல் அல்ல என்பதை உணர்ந்து உணவு விநியோக (Food Catering) தொழிலையும் மேற்கொண்டார்.
திருமணங்களுக்கு உணவு விநியோகச் சேவையை மேற்கொண்ட டத்தோஶ்ரீ சக்திவேல், பின்னர் மண்டப அலங்காரச் சேவை (Wedding Decoration) முன்னெடுத்து செயல்படுத்தினார். இதன் மூலம் திருமண ஜோடிகள் விரும்பும் வகையில்  பலவிதமான டிசைன்களின் மண்டப அலங்காரச் சேவையிலும் கால் பதித்தார்.

இது மட்டுமல்லாது, மண்டப அலங்காரம், உணவு விநியோகச் சேவையை மட்டும் வழங்கினால் போதாது. திருமண வைபவத்தை முன்னிட்டு தன்னை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து  சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கப்பெறும் வகையில் ஶ்ரீ ஏ.கே.எஸ். மண்டபத்தை நிர்மாணித்து திருமணம், கலைவிழா, பொது கூட்டம் என அனைவருக்கும் தனது சாதனையில் வாசலை திறந்துள்ளார்.
காலம் எப்போதும் நின்றுக் கொண்டிருப்பதில்லை. காலவோட்டத்தின் மாறுதலுக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்பவர்களே சாதிக்க முடியும் என்பதால் அந்த மாற்றத்தை தனது தொழில்துறையிலும்  கடைபிடித்து வந்தேன். அதன் பலனையே இன்று எனது வெற்றியாக சுவைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தனது அனுபவங்களை விவரிக்கிறார் டத்தோஶ்ரீ ஏ.கே.சக்திவேல்.

இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடும் "மகிழ்ச்சி" நாயகன் டத்தோஶ்ரீ ஏ.கே.சக்திவேலுக்கு  "பாரதம்இணைய ஊடகம் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

Saturday 18 July 2020

சிலிம் இடைத் தேர்தல்; மஇகா போட்டியிட வேண்டும்- டத்தோ முருகையா

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

இடைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிலிம் சட்டமன்றத் தொகுதியில் அம்னோவுக்கு பதிலாக மஇகா வேட்பாளர் களமிறக்கப்பட வேண்டும் என்று மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கோரிக்கை விடுத்துள்ளார்.

பேரா மாநில அரசில் மஇகாவின் பிரதிநிதி அங்கத்துவம் பெறுவதற்கு ஏதுவாக சிலிம் சட்டமன்றத் தொகுதி தற்காலிமாக இரவல் (Pinjam) அடிப்படையில் மஇகாவுக்கு வழங்கப்பட  வேண்டும்.

பேரா மாநிலத்தை தற்போது பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி செய்து வருகின்ற போதிலும் அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள மஇகாவுக்கு ஓர் நியமனப் பதவிகளை வழங்கக்கூட இன்றைய மந்திரி பெசார் தயக்கம் காட்டுகிறார்.

கடந்த பொதுத் தேர்தல்களில் மஇகாவுக்கு வெற்றி வாய்ப்பிருந்த தொகுதிகளை அம்னோ எடுத்துக் கொண்டு தோல்வி அடையக்கூடிய தொகுதிகளான ஜெலாப்பாங், சுங்காய் போன்ற தொகுதிகளை வழங்கப்பட்டன. தோல்வி என்றாலும் அதனை ஏற்றுக் கொண்டு போட்டியிட்டு தோல்வியை ஏற்றுக் கொண்டது மஇகா.

நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணியின் எண்ணிக்கை சரிந்து விடக்கூடாது எனும் நோக்கி இடைத் தேர்தலை எதிர்கொண்ட கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவுக்கு தற்காலிகமாக விட்டுக் கொடுத்தது மஇகா. அங்கு மஇகா வெற்றி பெற்றிருந்த போதிலும் மஇகாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த போதிலும்  பெருந்தன்மையுடன் அம்னோவுக்கு விட்டுக் கொடுத்தது மஇகா.

அதேபோன்று பேரா மாநில அரசில் இந்தியர் பிரதிநிதி இடம்பெறும் வகையில் சிலிம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் கருணை மனதோடு பங்காளி கட்சியான மஇகா மீண்டும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள அம்னோ பெருந்தன்மையுடன் இத்தொகுதியை தற்காலிகமாக மஇகாவுக்கு இரவல் கொடுக்க வேண்டும் என்று டத்தோ முருகையா குறிப்பிட்டார்.

சிலிம் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த டத்தோ குசாய்ரி அப்துல் தாலிம் அண்மையில் காலமானதை அடுத்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.


Thursday 16 July 2020

பேரா மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாகிறார் விஜயதாமரை?

ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகள் ம இகாவுக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தற்போது மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாக குமாரி விஜயதாமரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.

பேரா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ  அஹ்மாட் பைசால் அஸுமுவின் தம்புன் நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தில் பணியாற்றும் விஜயதாமரை அங்குள்ள இந்தியர்களின் பிரச்சினையை கவனித்து வரும் நிலையில், மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்படுவதன் வழி  இம்மாநிலத்திலுள்ள இந்தியர்களின் பிரச்சினையை கவனிக்கப்படும்.

இது குறித்து விஜயதாமரையிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி நியமனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இப்பொறுப்பில் பணியாற்றும்படி கேட்டுக் கொண்டதன் பேரில் தாம் கடமையாற்றி வருவதாக கூறினார்.

ஆலயம் உட்பட பேரா மாநில இந்தியர்களின் பிரச்சினைகள் தமது நேரடி பார்வையின் கீழ் கவனிக்கப்படும் என்று டத்தோஶ்ரீ பைசால் அஸுமு அண்மையில் அறிவித்திருந்த நிலையில் தேசிய முன்னணி ஆட்சியில் மஇகாவுக்கு  வழங்கப்பட்ட சிறப்பு ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகள் கேள்விக்குறியாகின.

மஇகாவுக்கு சிறப்பு ஆலோசகர், சிறப்பு அதிகாரி பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று அரசு சார்பற்ற பொது இயக்கங்கள் மந்திரி பெசார் அலுவலகத்தில் மகஜர் வழங்கின.

 மேலும், மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாக குமாரி விஜயதாமரை நியமனம் செய்யப்படுவது சிறப்பான முடிவு என்று சுங்கை சிப்புட் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த உமாபரன் குறிப்பிட்டார்.
எவ்வித கட்சி பேதமுமின்றி பொதுநிலையில் அனைத்தத் தரப்பினருடனும் இணங்கி பணியாற்றக்கூடிய ஒருவரை தனது சிறப்பு அதிகாரியாக டத்தோஶ்ரீ அஹ்மாட் பைசால் அஸுமு நியமனம் செய்வது வரவேற்கக்கூடியது ஆகும் என்று சமூகச் சேவையாளருமான அவர் மேலும் சொன்னார். 

Wednesday 15 July 2020

மது அருந்தி வாகனம் செலுத்தினால் வெ.1 லட்சம் அபராதம்

கோலாலம்பூர்-
மது அருந்தி விட்டு வாகனமோட்டும் ஓட்டுனர்களுக்கு அதிகபட்சமாக 1 லட்சம் வெள்ளி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தற்போது நடப்பில் உள்ள இக்குற்றத்திற்கான  முதற்கட்ட அபராதத் தொகை 20,000 வெள்ளியிலிருந்து 1 லட்சமாக உயர்த்தப்படுவதோடு தொடர்ந்து இக்குற்றங்களை புரிபவருக்கு 150,000 வெள்ளி வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என்று இந்த சட்டத் திருத்தத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்தார்.

அதோடு முதல் முறையாக குற்றம் புரிபவர்களுக்கு 15 ஆண்டுகால சிறையும் தொடர்ந்து குற்றம் இழைப்போருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுவதோடு அவர்களின் வானகமோட்டும் உரிமம் (லைசென்ஸ்) 10 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொற்கால ஆட்சியை வழங்கிய கர்மவீரர் காமராஜர்

ரா.தங்கமணி

காமராஜரின் 117ஆவது பிறந்தநாள் சிறப்பு கட்டுரை

இப்போது வரை தமிழ்நாடு ஒருவரின் ஆட்சியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை தான். எப்போது தேர்தல் வந்தாலும் காமராஜர் ஆட்சியை வழங்கும் என்ற கட்சிகளின் வாக்குறுதிகளிலே நமக்கு தெரிந்து விடும் காமராஜர் ஆட்சி எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று.

தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சியை வழங்கிய கர்மவீரர் காமராஜர் பிற தலைவர்களை போல் எளிதில் கடந்து விட முடியாது. தனது ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை முன்னெடுத்து இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

1953ஆம் ஆண்டு ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தின் பெருமளவு எதிர்ப்புகள் கிளம்பியதனால் செல்வாக்கு குறைந்த ராஜாஜி தனது பதவியிலிருந்து விலகினார். ஆனால் தனது பதவிக்கு சி.சுப்பிரமணியத்தை ராஜாஜி முன்னிறுத்திய போதிலும் சட்டமன்ற உறுப்பினர்களின் பேராதரவுடன் 1953இல் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார் காமராஜர்.

முதல்வராக பதவியேற்றவுடன் முதல் பணியாக ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தினை கைவிட்டு அவரால் மூடப்பட்ட 6,000 பள்ளிகளை திறந்தார். 17,000க்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்ததோடு பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை ஏற்படுத்தி ஏழை மக்களிடையே கல்வி முன்னேற்றத்தையும் ஏற்படுத்தினார்.இதனாலேயே கல்வி கண் திறந்த காமராஜர் என்ற புகழாரமும் பெற்றார்.

காமராஜர் தன்னுடைய அமைச்சரவையை அனைவரும் வியக்கும்படி அமைத்திருந்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும் அவரை முன்மொழிந்த எம்.பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கியிருந்தார்.

மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட காமராஜர், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதி “கே-ப்ளான்  (K-PLAN)” எனப்படும் “காமராஜர் திட்டத்தினை” கொண்டுவந்தார். அதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். அதன் பேரில் அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்த காமராஜர் அப்பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு, டில்லிக்குச் சென்றார். பிறகு, அதே ஆண்டில் அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இத்திட்டத்தினை நேரு போன்ற பெரும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் செகசீகன்ராம், எஸ்.கே. பட்டேல் போன்றோர் பதவியைத் துறந்து இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இதனால், கட்சியினரிடமும், தொண்டர்களிடமும், மக்களிடமும் மரியாதைக்குரிய ஒருவராக மாறி, அனைவருக்கும் முன்மாதிரியாகவும் கிங் மேக்கர் என்று புகழக்கூடிய காமராஜர் இந்திய நாட்டின் இரு பிரதமர்களை உருவாக்கிய பெருமையையும் பெற்றிருந்தார். 

1964 ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். பிறகு, 1966ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயதே நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின்  புதிய பிரதமராகவும் உருவாக்கினார் காமராஜர்.

சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த காமராஜர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் உட்பட 150 ரூபாய் மட்டுமே.

அரசியல் தடத்தில் தனக்கென ஒரு வரலாற்றை படைத்து இன்றளவும் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் பொற்கால ஆட்சியை வழங்கிய கர்மவீரர் காமராஜர்  1903 ஜூலை 15இல் பிறந்து 1975, அக்டோபர் 2ஆம் தேதி மறைந்தார்.

நிர்வாகத் திறன், நேர்மை, உழைப்பு, உறுதி,தொலைநோக்குச் சிந்தனை என்று பொற்கால ஆட்சியை வழங்கிச் சென்ற காமராஜரின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் மனதில் நிறுத்தி தலை வணங்கி வாழ்த்துவோம்.



Tuesday 14 July 2020

வறுமை ஒழிப்பு திட்டத்தில் சிலாங்கூர் முன்மாதிரியாக உருவெடுக்கும்- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநிலத்தில் வாழும் வசதி குறைந்த மக்களுக்கு உதவிடும் வகையில் முன்னெடுக்கப்படும் உதவித் திட்டத்தின் வாயிலான பெறப்படும் தகவல்களைக் கொண்டு துரித குடிமக்கள் உதவி நலத் திட்ட அமைப்பு (SSIPR) உருவாக்கப்பட்டு வருகிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது உரையாற்றிய கணபதிராவ், இம்மாநிலத்திலுள்ள வசதி குறைந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவி நலத் திட்டங்கள் குறித்து விவரித்தார்.

தற்போது மாநில அரசு வழங்கும் புளூபிரிண்ட் வறுமை ஒழிப்பு உதவித் திட்டம், பெருநாள் காலத்தின்போது வறுமை குறைந்தவர்களுக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டு ஆகியவற்றின் வழி வறுமை கோட்டில் உள்ள மக்களின் தரவுகள் திரட்டப்படுகின்றன.

இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு துரித குடிமக்கள் உதவி நலத் திட்ட அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 2025ஆம் ஆண்டில் துரித வளர்ச்சி கண்ட முதன்மை மாநிலமாக சிலாங்கூரை உருமாற்றும் மாநில அரசின் குறிக்கோளுக்கு ஏற்ப இந்த SSIPR-ஐ வலுப்படுத்தும் என்று கணபதிராவ் தெரிவித்தார்.

நிறவெறியை உதிர்க்க மக்களவை மாண்புமிகுகள் மன்றமா? மூடர்கூடமா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
கறுப்பின ஆடவருக்கு எதிராக போலீசார் நிகழ்த்திய நிறவெறி தாக்குதலும் அதனை தொடர்ந்து எழுந்த போராட்டத்தாலும் அமெரிக்காவே அதிர்ந்தது. கொரோனா பாதிப்பிலும் கூட நிறவெறிக்காக ஓர் உயிர் கொல்லப்படுவதை பொறுத்துக் கொள்ளாத வெள்ளையர்கள் கூட கறுப்பினத்தவர்களுக்காக வீதி போராட்டங்களில் இறங்கினர்.

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த நிறவெறிக்கு எதிராக  அமெரிக்கர்களின் இந்த போராட்டத்தின் சுவடு அடங்கி சில மாதங்களே ஆன நிலையில் தற்போது மலேசியாவிலும் தலைதூக்குகிறது. அதுவும் சாதாரண வீதியோரம் அல்ல, மாண்புமிகுகளாக போற்றப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகள் கூடுகின்ற மக்களவையில்தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராகவே நிறவெறி கருத்துகள் வெளிபடுத்தப்பட்டுள்ளது.

நேற்று தொடங்கிய  நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது  நம்பிக்கைக் கூட்டணியில் பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டுவின் தோல் நிறம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார் பாலிங் தொகுதி தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹீம்.

மக்களவையில் நாட்டு மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களை விவாதிப்பதை காட்டிலும் தனி மனித தாக்குதல் முன்னெடுக்கப்படுவதும் தோல் நிறம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை உதிர்ப்பதுதான் ஒரு மக்கள் பிரதிநிதியின் தலையாய கடமையா?

இப்படி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவிப்பதற்கு மக்கள் பிரதிநிதியாக இருப்பதை காட்டிலும் டத்தோஶ்ரீ அஸிஸ் முட்டாளாகவே இருந்து விட்டு போய்விடலாம். ஏனெனில் மக்களவைக்கென்று ஒரு மாண்பு உள்ளது. அது முட்டாள்கள் கூடும் மூடர்கூடம் கிடையாது என்பதை மாண்புமிகு டத்தோஶ்ரீ அப்துல் அஸிஸ் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஓர் இனத்தின் மீது சர்ச்சைக்குரிய கருத்துகள் முன்வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.நாயர் மீது இனத்துவேஷக் கருத்துகள் உதிர்க்கப்பட்டன. அவர் நெற்றியில் இடும் திருநீறு குறித்து சர்ச்சையான கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகுகளால் போற்றப்பட வேண்டிய மக்களவை நிறவெறியரான டத்தோஶ்ரீ அப்துல் அஸிஸ் போன்றவர்களால் அதன் மாண்பு குறைந்து விடாமல் காக்கப்பட கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் தங்கள் கடமையை சரி வர செய்ய வேண்டும். செய்வார்களா...?

Monday 13 July 2020

இந்தியர்கள் கையேந்தி நிற்க வேண்டும் என நினைக்கிறாரா பேரா எம்பி?

ஈப்போ-
பேரா மாநிலத்தில் இந்தியர் பிரதிநிதியை நியமிக்க தயக்கம் காட்டும் பேரா மந்திரி மர்ம நடவடிக்கை என்ன?

இந்தியர்கள் தன்னிடம் கையேந்தி நிற்க வேண்டும் என நினைக்கிறாரா டத்தோஶ்ரீ பைசால் அஸுமு?

மேலும் தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்க.


Friday 10 July 2020

சிங்கப்பூரில் இன்று வாக்களிப்பு

கோவிட்-19 காலகட்டத்திலும் பொதுத் தேர்தலை அறிவித்த சிங்கப்பூரில் இன்று வாக்களிப்பு நடைபெறுகிறது.

காலை 8.00 மணி முதல் 1,100 வாக்களிப்பு மையங்கள் செயல்பட தொடங்கியுள்ளன.

2,653,942 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ள இந்த தேர்தலில் கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் சமூக இடவெளி உட்பட முன்னேற்பாடு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


கடந்தாண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இதுவரை உலகம் முழுவது 12 மில்லயன் பேரை பாதித்துள்ளது. இதில் சிங்கப்பூரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Thursday 9 July 2020

தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பு நில விவகாரத்தில் சுயநலப்போக்கு எதுவும் கிடையாது- திருமதி இந்திராணி

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

சுங்கை சிப்புட், தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பு நில விவகாரம் தொடர்பில் தனக்கு எவ்வித சுயநலப் போக்கும் கிடையாது. தன்னுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டே அக்குடியிருப்பு விவகாரம் தொடர்பில் குரல் கொடுத்துள்ளேன் என்று பெனெராஜு இன்சான் இயக்கத்தின் தலைவி திருமதி இந்திராணி தெரிவித்தார்.

40 ஆண்டுகால வரலாற்றை கொண்டுள்ள தாமான் துன் சமப்ந்தன் குடியிருப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட  வீடமைப்புத் திட்டத்தின்போது அங்கு கோயில்,சூராவ், மண்டபம், சந்தைப்பகுதி ஆகியவை நிர்மாணிப்பதற்கு மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டு நில ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் திட்டமிட்டதைப்போல இந்த நான்கும் நிர்மாணிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் அந்நிலத்தில் புற்கள் காடு மண்டிக்கிடக்கின்றன.

இதன் தொடர்பில் அங்குள்ள மக்கள் தம்மிடம் முறையிட்டதன் விளைவாகவே தமது  இயக்கத்தின் மூலம் இந்நில விவகாரம் குறித்து குரல் எழுப்பியுள்ளேண்.

சட்ட ரீதியிலான வகையிலே தமது நடவடிக்கை அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட திருமதி இந்திராணி, தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொண்டதாலேயே இவ்விவகாரத்தை தாம் கையிலெடுத்ததாக அவர் சொன்னார்.

மேலும் இந்நில விவகாரம் தொடர்பில் மேம்பாட்டு நிறுவனம் வாக்குறுதி அளித்ததைபோல் ஆலயம், சூராவ், மண்டபம், சந்தைப்பகுதி ஆகியவை நிர்மாணிப்பதற்காக முழுமையான ஆய்வு மேற்கொண்டு 30 நாட்களுக்குள் தமக்கு பதில் அளிக்குமாறு மாநில மந்திரி பெசாரிடம் மகஜர் சமர்ப்பித்துள்ளதாக திருமதி இந்திராணி மேலும் சொன்னார்.


இரவோடு இரவாக ஶ்ரீ மதுரை வீரன் ஆலயம் உடைப்பு; இந்தியர்கள் கொந்தளிப்பு

அலோர் ஸ்டார்-

70 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள அலோர் ஸ்டார், ஜாலான் ஸ்டேசன் அருகே இருந்த ஶ்ரீ மதுரை வீரன் ஆலயம் அதிகாலை வேளையில் உடைக்கப்பட்ட சம்பவம் இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை வேளையில் அந்த ஆலயத்தை அலோர் ஸ்டார் மாநகராட்சி மன்ற அதிகாரிகள் உடைத்துள்ள சம்பவம் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரவோடு இரவாக ஓர் ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது? என்று சமூக ஊடகங்களில் பலர் கேள்வி எழுப்புகின்றன.

கெடா மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்து பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி அமைந்து இரு மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில் இந்தியர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கெடா மாநிலத்தில் தற்போது பாஸ் கட்சி ஆட்சி புரியும் சூழலில் இந்தியர்களின் பிரதிநிதியாக யாரும் இல்லாததால் இதுபோன்ற  அவலநிலை அரங்கேற்றப்படுகிறதா? எனும் கேள்வியும் இந்தியர்களிடையே எழுந்துள்ளது.

இதனிடையே, ஶ்ரீ மதுரை வீரன் ஆலயம்  உடைபட்ட சம்பவம் தனக்கு பேரதிர்ச்சி அளிப்பதாக கெடா மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ எஸ்.ஆனந்தன் தெரிவித்தார்.


இந்த ஆலய விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கடந்த ஜூன் 30ஆம் தேதி மகஜர் வழங்கினோம். இவ்விவகாரம் குறித்து மாநில மந்திரி பெசார் விளக்கம் கோரப்படும் என்று அவர் சொன்னார்.

கேடிஎம் தொழிலாளர்களால் 1942ஆம் ஆண்டு இவ்வாலயம் இங்கு கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Wednesday 8 July 2020

தேர்தல் காலத்தில் மட்டும்தான் மக்கள் பிரச்சினைகள் கிளறப்படுமா?

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-

தேர்தல் களம் நெருங்கும் போதெல்லாம்  ஏதேனும் ஒரு பிரச்சினையை கிளறி விட்டு அதில் குளிர் காய்வதே சிலரின் வாடிக்கையாகி விட்டது.

அவ்வகையில் இப்போது அரசியல் சதுரங்க ஆட்டத்தில் சிக்கிக் கொண்டிருப்பது சுங்கை சிப்புட், தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பு வளாகமாகும்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு துன் ச.சாமிவேலு இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தபோது கேபிஜே கழகத்தின் வழி நிர்மாணிக்கப்பட்டது இந்த குடியிருப்புப் பகுதி.

பெரும்பாலும் இந்தியர்கள் குடியிருக்கும் இப்பகுதியில் வீடமைப்பு மேம்பாட்டின்போது ஆலயம், சூராவ், சந்தைப்பகுதி, காவல் நிலையம் ஆகியவற்றை உள்ளடக்கிய நில ஒதுக்கீடு செய்யப்பட்ட  நிலையில் வாக்குறுதி அளித்ததைபோல் அங்கு மேற்குறிப்பிடப்பட்ட திட்டங்கள் நிர்மாணிக்கப்படாமல் அந்நிலங்கள் சில நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் 2004ஆம் ஆண்டிலேயே இந்நிலங்கள் விற்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

2004ஆம் ஆண்டே விற்கப்பட்டதாக சொல்லப்படும் நில விவகாரம் குறித்து சுங்கை சிப்புட் தொகுதி மஇகா முன்னாள் தலைவர் லோகநாதன், Pertubuhan Penaraju Insan  இயக்கத்தின் வழியும்  திருமதி இந்திராணி ஆகியோர் இப்போது கேள்வி எழுப்புவதன் அவசியம் என்ன? என்று உள்ளூர்வாசிகள் கேட்கின்றனர்.

திடீரென இப்போது மட்டும் தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பு நில விவகாரம் வெடிப்பதற்கான அடிப்படை காரணம் என்ன? என்பதையும் அறியாதவர்களாக இங்குள்ள மக்கள் இல்லை.

பொதுத் தேர்தல் விவகாரம் சூடு பிடிக்கும் காலகட்டத்தில் மட்டும் துன் சாமிவேலுவை உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்டங்கள், நில விவகாரங்களை  தொட்டு கேள்வி எழுப்புவது ஏன்?

தாமான் துன் சம்பந்தனில் ஆலயம், சூராவ், சந்தை, காவல் நிலையம் என போராடும் இத்தரப்பினர் அதே சுங்கை சிப்புட் வட்டாரத்தில் கம்போங் பெங்காளி, சிங் சோங் மேடு குடியிருப்புப் பகுதி உட்பட கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் நில விவகாரம், இளையோருக்கான வேலை வாய்ப்பின்மை போன்றவற்றுக்கு எப்போதாவது போராடியுள்ளார்களா?

மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களுக்காக குரல் எழுப்புவதாக இருந்தால் அனைத்து விவகாரத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமே தவிர தனிநபர் மீதான தாக்குதலாகவும் அதன் பின்னால் மறைந்திருக்கும் சுயநலப்போக்காகவும் இருக்கக்கூடாது.

தனிநபர் போராட்டம் எதை நோக்கி உள்ளது என்பதை அறியாத அளவுக்கு சுங்கை சிப்புட் மக்கள் இன்னமும் இளிச்சவாயர்கள் கிடையாது. படித்தவர்களும் விவரம் அறிந்தவர்களும் இம்மண்ணில் அதிகரித்துள்ளனர் என்பதை உணர்ந்து சுயநலப் போக்கை 'மக்களின் சேவை' என இனியும்  சொல்லிக் கொள்ள வேண்டாம் என உள்ளூர்வாசிகள் குறிப்பிட்டனர்.

தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பும் அதை சுற்றி நடத்தப்படும் அரசியல் நாடகமும் இனி விரிவான அலசலாக 'பாரதம்' இணையதளத்தில் இடம்பெறும்.