Thursday 26 December 2019

மொழிக்காக போராட்டம் நடத்த சிறுபான்மையினருக்கு உரிமையில்லையா? கணபதிராவ் சாடல்

ஷா ஆலம்-
இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையினர் தங்களின் தன்மான உரிமையை காக்க தன்மான கூட்டம் நடத்தும்போது சிறுபான்மையின மக்கள் தங்களின் மொழி உணர்வு காக்கப்பட கருத்தரங்கு நடத்துவது எவ்வகையில் தவறாகும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கேள்வி எழுப்பினார்.
தாய்மொழிப்பள்ளிகளில் 'காட்' சித்திர எழுத்து அமலாக்கம் செய்யப்படுவதற்கு சீனர்களின் கல்வி அமைப்பான 'டோங் ஸோங்' எதிர்ப்பு மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

'காட்' எதிர்ப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டால் அது மலாய்க்காரர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கி அது பாதகமான செயலுக்கு இட்டுச் செல்லும் என பிரதமர் துன் மகாதீர் எச்சரித்துள்ளார்.

தாய்மொழிப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரின் சம்மதத்துடன் பள்ளிகளில் அமல்படுத்தலாம் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அமைச்சரவை முடிவை மீறி அதனை அமல்படுத்த நீதிமன்றத்தை  சில தரப்பினர் நாடியுள்ளனர்.

காட் அமலாக்கத்தில் தீவிரம் காட்டும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தனது தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்iதுவதில் தீவிரம் காட்ட வேண்டும்.

காட் சித்திர மொழியை தாய்மொழிப் பள்ளிகளில் அமல்படுத்த காட்டும் தீவிரத்தை மாணவர்களின் பிடிபிடிஎன்  கல்வி கடனுதவியை தீர்ப்பதிலும் புறப்பாட நடவடிக்கைகளை மேம்படுத்துவதிலும் காட்ட வேண்டும்.

காட் சித்திர மொழி அமலாக்கம் நொடர்பில் தங்களது உரிமையை பற்றி பேசுவதற்கு கூட சிறுபான்மையினத்தினருக்கு உரிமைகள் கிடையாதா?

முந்தைய ஆட்சியின்போது தலைதூக்கியிருந்த இனவாத பிளவுகள் தற்போதைய பக்காத்தான் கூட்டணியிலும் தொடர்வது இக்கூட்டணி மீதான நம்பிக்கையை குறைக்கச் செய்கிறது.

பெரும்பான்மையினர் தங்களின் உரிமைக்காக கூட்டம் நடத்தும்போது சினுபான்மையினர் தங்களின் மொழி உணர்வை காக்க கூட்டம் நடத்துவதில் எவ்வகையில் தவறாகும்? என்று கணபதிராவ் வினவினார்?


Saturday 21 December 2019

டிசம்பர் 19 முதல் Pinkfong & Baby Shark’s Space Adventure Sing-Along Special




முக்கிய சிறப்பம்சங்கள்
·         டிசம்பர் 19 முதல் மலேசியாவைச் சுற்றியுள்ள 34 GSC சினிமாக்களில் நட்ப்புணர்வு கொண்ட magenta நரி, Pinkfong மற்றும் அபிமான  Baby Shark  ஆகியோரின் ரசிகர்கள் மலேசியாவின் முதல் அறிமுகமான  Pinkfong & Baby Shark’s Space Adventure Sing-Along Special’- இன் வாயிலாக மகிழ்விக்கப்படுவர்.

·         SmartStudy Co., Ltd.-ஆல் தயாரிக்கப்பட்டு ஆஸ்ட்ரோ மற்றும் அதன் பிரத்தியேக கூட்டாளரான GSC சினிமா கூட்டணியில் விநியோகிக்கப்படும் இந்த 66 நிமிட சிங்கலாங் (singalong) Pinkfong மற்றும் Baby Shark அவர்களின் புதிய விண்வெளி சாகசத்தை சிறப்பாக காட்சிப்படுத்துகிறது. டினோ பிளானட் (Dino Planet), ஜங்கிள் பிளானட் (Jungle Planet), ஸ்பூக்கி பிளானட் (Spooky Planet), கேம் பிளானட் (Game Planet) மற்றும் ஓஷன் பிளானட் (Ocean Planet) ஆகியவற்றின் குடிமக்களைப் பார்வையிடும் இவர்களின் விண்மீன் பயணத்தில் 27 அற்புதமான குறுகிய இசை காணொளிகள் இடம் பெற்றுள்ளன.

·         சிறப்பு Pinkfong & Baby Shark’s Space Adventure Sing-along 2 டி மற்றும் 3 டி இரண்டிலும் மலாய் மற்றும் ஆங்கில வசன வரிகளில் இடம் பெற்றிருக்கும்.

·         இதன் தொடர்பாக, ஆஸ்ட்ரோ மற்றும் SmartStudy Co., Ltd, இணைந்து Hello Pinkfong’ எனும் உலகின் முதல் Pinkfong மற்றும் Baby Shark- இன் நேரலை-நடவடிக்கை (live-action) நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோவில் தயாரித்துள்ளனர். பாடல் மற்றும் நடனம், கலை மற்றும் கைவினைப்பொருட்கள் மற்றும் ஆஸ்ட்ரோ செரியா (Astro Ceria), ஆஸ்ட்ரோ சியாவோ டாய் யாங் (Astro Xiao Tai Yang), ஆஸ்ட்ரோ வானவில் (Astro Vaanavil), ஆஸ்ட்ரோ விண்மீன் (Astro Vinmeen) , ஆஸ்ட்ரோ டி.வி.ஐ.கியூ (Astro TVIQ) மற்றும் ஹலோ (Hello) போன்றவற்றின் கற்றல் பாணிகள் உள்ளிட்ட வேடிக்கையான நாடகத்தின் மூலம் குழந்தைகள் எளிமையான முறையில் ஆங்கிலம் கற்க பெரிதும் உதவுகிறது. பாடல்கள், கண்டுபிடிப்பு, மற்றும், கலை மற்றும் கைவினைப்பொருட்கள் போன்றவை உள்ளிட்ட 100 குறுகிய வடிவ காணொளிகளை பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழலாம்.




 சிங்கலாங்கின் சுருக்கம்
Pinkfong மற்றும் Baby Shark தங்களது அமைதியான விண்வெளி பயணத்தை அனுபவித்து மகிழ்கின்றனர். ஆனால், அவர்களின் விண்கலம் தற்செயலாக ஒரு விண்கல்லுடன் மோதிய பிறகு, அவற்றின் சிறப்பு நட்சத்திரம் - வீட்டிற்கு திரும்பிச் செல்லக்கூடிய ஒரே பொருள் - ஐந்து துண்டுகளாக உடைகிறது. இருவரும் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கு பல்வேறு கிரகங்களுக்கு தங்களது பயணத்தை மேற்கொண்டு காணாமல் போன துண்டுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.


Thursday 19 December 2019

பல்வேறு பிரிவுகளில் சாதித்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
அனைத்துலக ரீதியில் பல்வேறு  அறிவியல், விளையாட்டு, கலாச்சாரம், புத்தாக்கப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை அள்ளி குவித்த தமிழ்ப்பள்ளி மாணவர்களை சிறப்பிக்கும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு மானிய ஊக்கத்தொகையை வழங்கியது.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 8 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 59 மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் ஊக்கத்தொகையை எடுத்து வழங்கினார்.

மாணவர்களிடையே புதைந்து கிடக்கும் திறமைகளை ஆசிரியர்களும் பெற்றோரும் கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து அனைத்துலக ரீதியில் வெற்றியாளராக உயர்த்தியுள்ளனர்.
மாணவர்களை திறமைகளை உணர்ந்து அவர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்களின் திறமை இன்னும் பல மடங்கு உயர்வதோடு அது அடுத்து வரும் தலைமுறைக்கு உந்துசக்தியாகவும் அமையும்.

அதன் அடிப்படையிலேயே அறிவியல், விளையாட்டு, கலாச்சாரம், புத்தாக்கப் போட்டிகளில் பங்கேற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஊக்குவிப்பு நிதி வழங்கப்படுகிறது.
இந்திய சமுதாயத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியத்தை பொங்கல், தீபாவளி கலை இரவு என நிகழ்ச்சிகளை நடத்தி அந்த பணத்தை வீணாக செலவழிப்பதை விட மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக செலவிடப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவர்களின் பேருந்து கட்டணம், உயர்கல்வி மாணவர்களுக்கான கல்வி நிதி, யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கான பாராட்டு விழா அந்நிதியின் மூலம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று தற்போது சாதனையார் ஊக்குவிப்பு நிதியும் வழங்கப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.

மிட்லண்ட்ஸ், ஜெஞ்ஜாரோம்,சிம்பாங் லீமா, காஜாங், சுங்கை சோ, சுங்கை ரெங்கம், தெலுக் டத்தோ ஆகிய 8 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 59 மாணவர்களுக்கு 33,500 வெள்ளி மதிப்புடைய ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இந்திய சமூகத் தலைவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Tuesday 17 December 2019

BollyOne HD-இல் டிசம்பர் மாதத் திரைப்படங்கள்

கோலாலம்பூர்-
டிசம்பர் மாத  விடுமுறையை முன்னிட்டு ஆஸ்ட்ரோ பாலிவூன் எச்டி அண்மையில் வெளியீடு கண்ட சிறந்த திரைப்படங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கவிருக்கிறது.

வியாழன், 19 டிசம்பர்
மலால்
BollyOne HD (அலைவரிசை 251), 09:00pm | 
இத்திரைப்படத்தில்  எங்கும் எப்போதும் ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: ஷர்மின் சைகல் (கதாநாயகி) மற்றும் மீசான் ஜாஃப்ரி (கதாநாயகன்)
திரைக்கு வந்து சில மாதங்களேயான, ஆஸ்தா திரிபாதிக்கும் (ஆஸ்தா) சிவா மோர்க்கும் (சிவா)
இடையிலான ஆத்மாத்தமான காதல் மிக அழகாக வெளிக்கொணரும் மலால்
திரைப்படமானது பல விருதுகளை வென்று குவித்த 7ஜி ரெயின்போ காலனி எனும் தமிழ்
திரைப்படத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இரு துருவங்களான ஆஸ்தாவும் சிவாவும்
எலியும் பூனையும் போல எபபொழுதும் முட்டி மோதிக்கொண்டிருந்த வேளையில் ஓர் இரவு
ஆஸ்தா முன்வந்து சிவாவிடம் தனது தகுதியை நிருபிக்க அறிவுறுத்த அவர்களிடையே நட்பு
மலர்கின்றது. பின் காதலாக மாறுகின்றது. ஒரு நாள், ஆஸ்தாவின் நண்பரின் வீட்டிலிருந்து வீடு
திரும்பும் வழியில் தனது சாவி கொத்தினை அங்கேயே மறந்து விட்டு வர அதனை எடுக்க
சிவாவை காத்திருக்குமாறு கூறிவிட்டு நடக்கும் வழியில் தன் காதலன் கண் முன்னே
விபத்துக்குள்ளாகிறாள். ஆஸ்தா பிழைப்பாளா? காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தனவா? என்பதை
இத்திரைப்படத்தின் சுவாைஸ்யமான கதை.


வியாழன், 26 டிசம்பர்
ஹம் சார்
BollyOne HD (அலைவரிசை 251), 09:00pm
நடிகர்கள்: ப்ரீத் ஹரன் கமனி (நமீத்), சிம்ரன் சர்மா (மஞ்சரி), அன்ஷுமான் மல்ஹோத்ரா
(அபர்), மற்றும் துஷர் பாண்டே (சுர்பஜா)
1947-லிருந்து பல பிளாக்பஸ்டர்ஸ் வெற்றி திரைப்படங்களை வழங்கிய ராஜ்ஸ்ரி
புரொடக்ஷன்ஸ் தயாரித்த ஹம் சார் திரைப்படம் நான்கு நண்பர்களிடையே உணர்வுப்பூர்வமான
பிணப்பை மிக சுவாரசியமாக சித்தரிக்கின்றது. 1989-இல் திரைக்கு வந்து எண்ணிலடங்கா
விருதுகளை வென்று குவித்த மைனே பியார் கியா எனும் திரைப்படத்தை மையமாக கொண்டு
இயக்கப்பட்ட இத்திரைப்படம் நண்பர்களும் குடும்பம் எனும் நவீன கால கொள்கையை அலசி
ஆராய்வதோடு ஒரு புதிய திருப்பத்தையும் உள்ளடக்கியுள்ளது. இத்திரைபடத்தை கிறிஸ்துமஸ்
பரிசாக காண மறவாதீர்கள்!

Sunday 15 December 2019

‘மைசெல்’ முயற்சியில் மூவருக்கு அடையாள அட்டை பெற்று தரப்பட்டது

ஷா ஆலம்-
மைசெல் மூலமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு அடையாள அட்டை பெற்று தரப்பட்டது.
25 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு பிறகு தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் அடையாள அட்டை கிடைக்க உதவியதற்காக சிலாங்கூர் மாநில அரசுக்கும் ,சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ,கணபதி ராவுக்கும் இவ்வேளையில் மனபூர்வமான நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக அப்பிள்ளைகளின் தந்தை சேகரன் தெரிவித்தார்.

தனராஜ் சேகரன் 24 வயது ,கீதா சேகரன் 16 வயது  ஆகிய இருவருக்கும் இம்முறை குடியுரிமை கொடுத்திருப்பதுடன் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் உத்தரவாத கடிதத்தையும் உள்துறை அமைச்சிடம் இருந்து பெற்றுக்கொண்ட பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெளி நாட்டவரை மணந்துக்கொண்ட பிறகு மூன்று பிள்ளைகள் பிறந்ததாகவும்,முறையான திருமண பதிவு இல்லாத காரணத்தால் மூன்று பிள்ளைகளும் குடியுரிமை அற்றவர்களாக இத்தனை ஆண்டுகள் தவித்ததாகவும் பல முயற்சிகள் மேற்கொண்டும் தங்களின் விண்ணப்பங்கள் பல முறை நிராகரிக்கப்பட்டதும் மன வேதனையுடன் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி கவலையுடன் இருந்ததாகவும் அவர் கூறினார்.
இறுதியாக மைசெலின் உதவியை நாடியதாகவும் ஒரு முறை அவர்கள் எங்களை உள்துறை அமைச்சின் அதிகாரிகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்ததுடன் எங்களின் ஆதங்களை அவர்களி இடத்தில் தெரிவிக்கும் வாய்ப்பு கிட்டியதாகவும் எங்களின் கவலைகளை புரிந்துக்கொண்ட அவர்கள் எங்களின் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையே மைசெல் அதிகாரிகள் சில கலந்துரையாடல்களை உள் துறை அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்தியதுடன் இறுதியாக இரண்டு பிள்ளைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதுடன் மற்றொரு பிள்ளைக்கு அடுத்த ஆண்டு குடியுரிமை வழங்கப்படும் என்றும் அவர் மகிழ்ச்சியிடன் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசின் சிறப்பு பிரிவாக இயங்கும் மைசெல் என்னும் பிரிவு வீ.கணபதிராவின் நேரடி பார்வையின் கீழ் செயல்ப்படுகின்றது அப்பிரிவு அடையாள அட்டை பிரச்சினை,பிறப்பு பத்திரம்,குடியுரிமை போன்ற பிரச்சினைகளை உள்துறை அமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான முறையிலும் தீர்வுகளை கண்டு வருவதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வையும் அது வழங்கி வந்துள்ளது.

Saturday 7 December 2019

பிகேஆர் இளைஞரணி மாநாட்டில் கைகலப்பு



இன்று மலாக்காவில் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் இளைஞரணி கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்  கைகலப்பில் முடிந்தது.

கருப்பு சட்டை அணிந்து நுழைவு அட்டை இல்லாமல் வந்திருந்த பேராளர்கள் மாநாட்டு அறைக்குள் அனுமதிக்கப்படாததால் காலை 8.00 மணி அளவி சம்பந்தப்பட்ட ஆடவர்களுக்கும் பாதுகாவலர்களுக்கு இடையே வாக்குவாதம் மூண்டது.

சில தீர்மானங்களின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதால் மாநாட்டுக்கு வரும் பேராளர்கள் நிச்சயம் நுழைவு அட்டையை எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அதன் பின்னர் மண்டபத்திற்கு வெளியே சில பேராளர்களிடையே கைகலப்பு மூண்டது. கைகலப்பின்போது முகத்தில் குத்துப்பட்ட ஒருவருக்கு  மூக்கில் ரத்தம் வழிந்தது. அதோடு சிலர் கற்களை வீசியெறிந்தனர் என்று சிலர் கூறினர்.


கால்நடை மருத்துர் பாலியல் வல்லுறவு; குற்றவாளிகளை சுட்டுக் கொன்றது போலீஸ்

ஹைதராபாத்-
கூட்டு பாலியல் வல்லுறவுக்கு பின்னர் எரித்து படுகொலை செய்யப்பட்ட கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

போலீசாரை தாக்கி தப்பியோட முயற்சித்தபோது போலீசார் மேற்கொண்ட  அதிரடி நடவடிக்கையில் இந்நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தெலுங்கானாவின் கூடுதல் போலீஸ் ஜெனரல் ஜித்தேந்திரா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தனது பணியை முடித்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த 27 வயதான பிரியங்கா கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி எரித்து கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரையும்சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று நடந்தவற்றை கூறும்படி போலீசார் கேட்டபோது போலீசார் அவர்கள் தாக்க முற்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மெஹபூப்  நகர் மாவட்டத்தில் சத்தன்பல்லி எனும் கிராமத்தில் நிகழ்ந்தது. இது மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

Friday 6 December 2019

தீ விபத்தில் 3 பேர் பலி

கிள்ளான் –

அதிகாலை வேளையில் நிகழ்ந்த தீ விபத்தொன்றில் ஒரே குடும்பத்தைச்  சேர்ந்த மூவர் பலியாகினர்.

இத்தீவிபத்தில் 70 வயதான புவா யோக் கியாட், சூன் சீ எங் (55), மாற்றுத் திறனாளியான அங் கார் ஹியான் (22) ஆகியோர் பலியானதோடு 55 வயது மதிக்கத்தக்க அங் சேங் கியாட் (55) 50 விழுக்காடு தீப்புண் காயங்களுடன் உயிர் தப்பினார். அதோடு அங் கார் சின் (27), அங் காம் சியூ (30) ஆகியோர் தப்பித்துக் கொண்டனர்.

அதிகாலை 3.00 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் அடுத்த 1 மணி நேரத்திற்குள் தீயை முழுமையாக அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீடு முழுமையாக சேதமடைந்ததோடு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்களும் சேதமடைந்தது என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப் படை இலாகாவின் துணை இயக்குனர் ஹஃபிஸாம் முகமட் நோர் தெரிவித்தார்.

மரணமடைந்த மூவரின் உடல்களும் சவப்பரிசோதனைக்காக  போலீசாரிடம் ஒப்படைக்கப்ட்டதோடு தீப்புண் காயங்களுக்கு ஆளான நபர் மருத்துவ சிகிச்சைக்காக கிள்ளான் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தஞ்சோங் சிப்பாட், பெட்ஃபோர்ட் தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ அஷ்ட மாரி மூல மந்திர ஹோமம்

தஞ்சோங் சிப்பாட்-

150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பெட்ஃபோர்ட் தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய திருப்பணி தடையின்றி நடக்க வேண்டி வரும் 08/12/2019 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 7.30 முதல் 12.00 வரை ஸ்ரீ அஷ்ட மாரி மூல மந்திர ஹோமம் நடைபெறவுள்ளது.

அவ்வண்ணம் பக்தர்கள் திரளாக வருகையளித்து அம்பாளின் ஆசியை பெருவதோடு திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு ஆலய நிர்வாகம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது.

தொடர்புக்கு :
012-2735851
திரு.வாசுதேவன் (ஆலயத் தலைவர்)

018-2196774
சிவ ஸ்ரீ குமரன் சிவாச்சாரியார் (ஆலய குருக்கள்)