Wednesday 6 June 2018

நாட்டுப்பற்றோடு மனிதாபிமானத்தை நிலைநாட்டிய மாணவி ஹரிணி

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, நாட்டின் கடன் தொகை 1 டிரில்லியன் வெள்ளியாக (வெ. 1 லட்சம் கோடி) உள்ளது என அறிவித்தது.

நாட்டின் கடனை அடைக்க சிலர் தாமாகவே முன்வந்த நிலையில், 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்தை பிரதமர் துன் மகாதீர் அண்மையில் அறிவித்தார். இத்திட்டத்தின் வழி நாட்டின் கடனை அடைக்க விருப்பம் கொண்டுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து நிதியுதவி அளிக்கலாம் என அவர் கூறினார்.

இதன்வழி பல்வேறு தனிநபர்களும் பெரு நிறுவனங்களும் நாட்டின் கடனை அடைக்க தங்களது நிதியுதவியை வழங்கி வந்தனர்.

இந்நிலையில் நாட்டின் கடனை அடைக்க தாம் சேமித்து வைத்திருந்த நிதியில் பாதி தொகையை 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்திற்கு வழங்கியுள்ளார் மாணவி ஹரிணி.

பூச்சோங் உத்தாமா 1 இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஹரிணி ரகு டைமண்ட் , பள்ளி செலவுக்கு பெற்றோர்  வழங்கும் நிதியை (வெ.79.90) சேமித்து வைத்துள்ளார்.

இந்த நிதியில் 39.95 வெள்ளியை நாட்டின் கடனை அடைக்க தாபோங் ஹராப்பான் மலேசியா திட்டத்திற்கும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் முத்துக்குமாரின் சிகிச்சைக்காக 39.95 வெள்ளியை வழங்கியுள்ளார்.  அதோடு சிறுவன் முத்துக்குமாரின் சிகிச்சைக்காக உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பில் மாணவி வெளியிட்டுள்ள காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகும் அதே வேளை அம்மாணவிக்கு வாழ்த்துகளும் குவிகின்றன.

நாட்டுப்பற்றோடு மனிதாபிமானத்தையும் நிலைபெறச் செய்த மாணவி ஹரிணியை 'பாதரம்' மின்னியல் ஏடு வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment