Monday 28 May 2018

பத்துமலை நிர்வாகத்தை மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்- அமைச்சர் குலசேகரன்


ரா.தங்கமணி 
படங்கள்: வி.மோகன்ராஜ்

பெட்டாலிங் ஜெயா-
'பத்துமலையை உருமாற்றுவோம்' எனும்  இயக்கத்தின் கோரிக்கைக்கு ஏற்ப பத்துமலை நிர்வாகம் மாற்றியமைக்கப்பட வேண்டியது காலத்தின்  கட்டாயமாகும். அதற்கேற்ப பக்காத்தான் ஹராப்பானின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்து அறப்பணி வாரியம் தோற்றுவிக்கப்பட்டு அதன் கீழ் ஆலயங்கள் ஒருங்கிணைப்படும் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்.

பினாங்கு மாநிலத்தில் உள்ளது போன்ற இந்து அறப்பணி வாரியத்தின் சட்டத்திட்டங்களை பின்பற்றி சில மாறுதல்களையும் மேம்பாடுகளையும் செய்து ஒவ்வொரு மாநிலத்திலும் இந்து அறப்பணி வாரியம் தோற்றுவிக்கப்படுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

பத்துமலைத் திருத்தல நிர்வாகத்தின் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதே 'பத்துமலை உருமாற்றம்' இயக்கம் உருவாவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்து அறப்பணி வாரியம் தோற்றுவிக்கப்பட்டு நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களும் முறையாக நிர்வகிக்கப்படுவது உறுதி செய்யப்படும் நிலையில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சில பொது இயக்கங்களும் இணைக்கப்பட்டு 'சிறப்பு கூட்டம்' நடத்தப்பட்டு அதன் சட்டத்திட்டங்கள் முறையாக வரையறுக்கப்படும் என இன்றுஆகமம் அணி ஏற்பாட்டில் பெட்டாலிங் ஜெயா, சிவிக் சென்டரில் நடைபெற்ற 'பத்துமலை உருமாற்றத்திற்காக மக்கள் மாநாடு' கலந்துரையாடலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குலசேகரன் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment