Thursday 24 May 2018

சிவநேசன் தலையீடு; சுங்கை வாங்கி ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயம் உடைபடுவது ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு


ரா.தங்கமணி

ஈப்போ-
தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த ஶ்ரீ மதுரை வீரன் ஆலயம் உடைக்கப்படுவது பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தலையீட்டால்  ஒருவார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

சுங்கை வாங்கி தோட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த ஆலயத்தை அகற்றுவதற்கு மேம்பாட்டு நிறுவனம் ஒன்று நீதிமன்ற உத்தரவை பெற்ற நிலையில் இன்று காலை உடைக்கப்படுவதாக இருந்தது.

ஆனால் ஆலய நிர்வாகம் சிவநேசனின் உதவியை நாடிய சூழலில் இன்று சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனத்தின் வழக்கறிஞருடன் பேச்சுவாத்தை நடத்தியதன் பயனாக உடைக்கப்படும் நடவடிக்கையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய சிவநேசன், மேம்பாட்டு நிறுவனத்தின் நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினர் எத்தகைய ஆட்சேப நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் அந்நிறுவனம் நீதிமன்றத்தின் ஆணையை பெற்றுள்ளது.

அந்த மேம்பாட்டு நிறுவனமே நிலத்திற்கு உரிமையாளர் எனும் நிலையில்  ஆலயத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஆலய தரப்பினர் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு ஆலயத்தை மாற்றுவதற்கு வேறு புதிய நிலம் அடையாளம் காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஆலயத்தை இட மாற்றம் செய்வதற்கான செலவுகளுக்கு மாநில அரசின் சார்பில் மானியம் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறிய சிவநேசன்,  மேம்பாட்டு நிறுவனம் ஆலயத்தையும் தெய்வச் சிலைகளையும் உடைப்பதை தாம் விரும்பவில்லை என்பதால் ஆக்ககரமான முடிவை ஆலய நிர்வாகம் சீக்கிரமே எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இன்றுக் காலை மாநில அரசு செயலகத்தில் ஆலயத்தின் தலைவர்  பழனிசாமி முனியாண்டி, செயலாளர் லெட்சுமணன், ஆலோசகர் மணிராஜா ஆகியோர் சிவநேசனை சந்தித்து ஆலோசனைகளை பெற்றனர்.

No comments:

Post a Comment