Tuesday 29 May 2018

ஒதுக்கப்பட்ட 'செடிக்' மானியம் கிடைக்கப்பெறுமா? ஏக்கத்தில் 438 ஆசிரியர்கள்


பெட்டாலிங் ஜெயா-
மலேசிய பாலர்பள்ளி இயக்கத்திற்கு வழங்கி வந்த 'செடிக்' நிறுத்தப்பட்டுள்ளதால் கடந்த இரு மாதங்களாக எவ்வித அலவன்ஸும் இல்லாமல்  438 ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் 6,350 மாணவர்களின் கல்வியும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அதன் தலைவர் டத்தோ பத்துமலை ராமசாமி குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு 2016, 2017இல் மானியம் வழங்கி வந்த 'செடிக்' இவ்வாண்டு பாலர்பள்ளி ஆசிரியர்களுக்கும் துணை ஆசிரியர்களுக்கும் நேரடியாக நாங்களே அலவன்ஸ் வழங்குகிறோம் என கூறினர்.

ஆனால் ஜனவரி மாத அலவன்ஸ் கடந்த மார்ச் மாதமும் பிப்ரவரி,மார்ச்  மாத அலவன்ஸ் முறையே ஏப்ரல், மே மாதங்களில் செலுத்தப்ப்பட்டன. ஆனால் ஏப்ரம், மே மாதத்திற்கான அலவன்ஸ் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ள சூழலில் வழங்கப்பட வேண்டிய அலவன்ஸ் தொகை கிடைக்காததால் ஆசிரியர்கள் பெரும் இன்னலை எதிர்நோக்கி வருகின்றனர் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

Persatuan Guru Tadika Zon Utara Semanjung Malaysia, Child Information, Learning And Development Centre, Pertubuhan Pusat Pembangunan, Malaysia Hindu Sangam Yayasan Atmah, The Divine Life Society Senawang ஆகிய ஐந்து இயக்கங்களின் கூட்டமைப்பில் செயல்படும் மலேசிய பாலர்பள்ளி இயக்கத்தின் கீழ் 205 சமூக பாலர்பள்ளிகள் செயல்படுவதோடு 438 ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள் 7,000 மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் போதனையை பயிற்றுவித்து வருகின்றனர்.



இவ்வியக்கத்திற்கு 2016ஆம் ஆண்டு வெ.9,694,200.00, 2017ஆம் ஆண்டு 5,149,000.00 வழங்கப்பட்ட நிலையில் 2018ஆம் ஆண்டு வெ.7,031,316.00 ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்த தொகை எங்களுக்கு நேரடியாக கிடைக்கவில்லை.

காலதாமதமாக கிடைக்கப்பெற்ற அலவன்ஸ் தொகையினால் ஆசிரியர்களும் குடும்ப, அத்தியாவசிய தேவைகளுக்கான பணத்தட்டுபாடு நிலவியதோடு இபிஎஃப், சொக்சோ தொகையும் செலுத்தப்படவில்லை. அதோடு, மாணவர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய காப்புறுதி பணமும் செலுத்தப்படாததால் தினந்தோறும் பாதுகாப்பு சார்ந்த சவால்களை ஆசியர்களும் மாணவர்களும் எதிர் கொண்டுள்ளனர்.

மே 9ஆம் தேதிக்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியுள்ள நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் 6,350 மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் 'செடிக்' அமைப்பு ஒதுக்கிய மானியத்தை வழங்க வேண்டும் எனவும் இல்லையேல் ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் மாணவர்களின் கல்வி போதனா முறையும் பாதிக்கப்படும் என டத்தோ பத்துமலை தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் இயக்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.ரூபா சாமிநாதன், செயலாளர் சுதா, செயலவை உறுப்பினர் பிரான்சிஸ் உட்பட சில பாலர்பள்ளி ஆசியர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment