Wednesday 30 May 2018

தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறதா?; தேமுவின் தவறுகள் இனி தொடராது- சிவநேசன்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
தகுதி வாய்ந்தவர்களுக்கு  உரிய வேலை வாய்ப்புகள் வழங்கப்படாத அவலம் தொடர்கதையாகின்ற சூழலில் அதனால் வேலை வாய்ப்பில்லாமல் பாதிக்கப்படும் இளைஞர்களின் வாழ்வாதாரம் சீர்தூக்கி பார்க்கப்பட வேண்டும் என பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் வலியுறுத்தினார்.

தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவதை போல் பொதுச் சேவை துறைகளில் சில நேரங்களில் தகுதி வாய்ந்தவர்கள் புறக்கணிக்கப்படும் அவலம் நீண்டு கொண்டிருக்கிறது.

25 வயதான எம்.தேவேந்திரா  பெட்ரோனாஸ் உபகாரச் சம்பளத்தில் உயர்கல்வியை சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சிறந்த மாணவராக இருந்தாலும் அரசு துறைகளில் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதில் இனம், மத வேறுபாடு காட்டப்படக்கூடாது. அனைவரும் மலேசியர் என்ற கோட்பாட்டின் கீழ் தகுதியுடைவர்கள் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவது மிக அவசியமானதாகும்.

தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுவதை மனிதவள அமைச்சும் மாநில அளவிலான மனிதவளப் பிரிவும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த தேமு ஆட்சியின் போது நிகழ்ந்த இந்த தவறுகளை சரி செய்ய தற்போதைய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆக்ககரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என கூறியசிவநேசன், பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றது முதல் இதுபோன்ற  5 புகார்களை பெற்றுள்ளதாக  கூறினார்.

தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கபடுவது பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் நீடிக்காது எனவும் மாநில பொதுச் சேவை இலாகாவின் வாயிலாக தேவேந்திராவுக்கு வேலை உறுதி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சொன்னார்.

No comments:

Post a Comment