Wednesday 23 May 2018

பயன்படுத்த முடியாத 400 ஏக்கர் நிலத்திற்கு மாற்று நிலம் அடையாளம் காணப்படும்- சிவநேசன்


ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட 2,000 ஏக்கர் நிலத்தில் பயன்படுத்த முடியாத 400 ஏக்கர் நிலம் வேறு இடத்தில் அடையாளம் காணப்படும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.

கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய தேசிய முன்னணி அரசாங்கம் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காக 2,000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்தது. தற்போது இந்நிலம் மேம்படுத்தப்பட்டு செம்பனை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது.

ஆனால், ஒதுக்கப்பட்ட 2,000 ஏக்கர் நிலத்தில் 1,600 ஏக்கர் நிலம் மட்டுமே பயன்படுத்தும் வகையில் உள்ளது. எஞ்சிய 400 ஏக்கர் நிலம் மலை, பாறைகள் சூழ்ந்து இருப்பதால் அதில் எவ்வித மேம்பாட்டையும் மேற்கொள்ள முடியவில்லை.

பயன்படுத்த முடியாத 400 ஏக்கர் நிலத்திற்கு மாற்று நிலம்  அடையாளம் காணப்பட்டு பேரா இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் என கூறிய சிவநேசன், செம்பனை பழங்கள் விற்பனையின் மூலம் கிடைக்கப்படும் நிதி மாநிலத்திலுள்ள அனைத்து இந்திய மாணவர்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும்.

அதோடு, இந்த அறவாரியத்தின் முழு விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்றவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடரும் எனவும் இறுதிக்கட்ட நிலவரங்கள் குறித்து நில மேம்பாட்டாளரிடம் கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் தனது முதல் நாள் பணியை தொடங்கியபோது செய்தியாளர்களைச் சந்தித்த சிவநேசன்  மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment