Sunday 28 January 2018

இழந்த தொகுதிகளை மீட்டெடுக்க வேண்டும்- டத்தோஶ்ரீ ஸம்ரி

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
கடந்த இரு பொதுத் தேர்தல்களில் இழந்து நிற்கும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியையும் ஜாலோங் சட்டமன்றத் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் தேமு கட்சிகளிடம் வலியுறுத்தினார்.

இத்தொகுதிகளை இழந்து நிற்பதால் நாம் பலவீனமானவர்களாக அடையாளப்படுத்தப்படுகிறோம். நாம் பலமானவர்கள் என்பதை நிரூபிக்க இவ்விரு தொகுதிகளை மீண்டும் நாம் கைப்பற்ற வேண்டியது அவசியமாகும்.
இங்கு நம்முடைய மக்கள் பிரதிநிதி இல்லாதது மக்களுக்குதான் பாதிப்பு என்பதை உணர வையுங்கள்.

நம்முடைய (தேமு) மக்கள் பிரதிநிதி இருந்ததால்தான் இங்கு இவ்வளவு பெரிய அழகான மண்டபம் அமைந்துள்ளது. இது நம்முடைய சாதனை  என மாநாட்டு மையத்தை சுட்டிக் காட்டி பேசிய டத்தோஶ்ரீ ஸம்ரி, அந்த சாதனையை மக்களிடம் கொண்டு சேருங்கள். நாம் செய்தவற்றை மக்கள் உணரும் வகையில் களப்பணி ஆற்றுங்கள் என சுங்கை சிப்புட் வட்டாரத்திலுள்ள தேசிய முன்னணி நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இந்த தேர்தல் கடுமையான ஒன்றாக கருதப்படுகிறது. நமது வெற்றியை நிலைநாட்டிக் கொள்ள தேமு கட்சிகளிடையே ஒற்றுமை மிக அவசியம். நாம் ஒற்றுமையாக இருந்து மக்கள் பணிகளில் களமிறங்கினால்தான் வெற்றியை தற்காத்துக் கொள்ள முடியும் என்றார் அவர்.

இந்நிகழ்வில் லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சூல்கிப்ளி, சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, உதவித் தலைவர் முனைவர் சண்முகவேலு, செயலாளர் கி.மணிமாறன், ஜாலோங் தொகுதி கெராக்கான் ஒருங்கிணைப்பாளர் டத்தோ டான் லியான் ஹோ, உட்பட அம்னோ, மஇகா, மசீச, கெராக்கான் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment