Monday 29 January 2018

ஆலய கும்பாபிஷேகம்- 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


ரா.தங்கமணி

தைப்பிங்-
கமுண்டிங், கம்போங் பாரு ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக  இன்றுக் காலை நடைபெற்றது.

சக்தி அறவாரியம், ஆலய நிர்வாகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் திருப்பணி செய்யப்பட்ட இவ்வாலயம் 3ஆவது முறையாக மகா கும்பாபிஷேகம் கண்டது.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தலைமையில் திருமுருகன்  திருவாக்கு திருபீடம் ஸ்தாபகர் பாலயோகி சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதினம் ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் இந்த மகா கும்பாபிஷேகன் நடைபெற்றது.

1964ஆம் ஆண்டு முதலாவதாக கும்பாபிஷேகம் கண்ட இவ்வாலயம் 35 ஆண்டுகளுக்கு பின்னர் 1999ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கும்பாபிஷேகம் கண்டது.

மூன்று ஆண்டுகால தாமதத்திற்குப் பின்னர் டத்தோஶ்ரீ தனேந்திரன் முயற்சியில் திருப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு இன்று கும்பாபிஷேகம் காண்பதாக ஆலயத் தலைவர் பொன்.முத்துசாமி தெரிவித்தார்.

இதனிடையே, 1 மில்லியன் வெள்ளி செலவில் திருப்பணி நடைபெற்றுள்ள இவ்வாலயம் ஆறு மாதத்திற்குள் நிறைவு பெற்றது என டத்தோஶ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.

சமயப் பணியை மட்டுமல்லாது, பல்வேறு சமூக நடவடிக்கைகளையும் இவ்வாலயம் மேற்கொள்ளும் என்பதன் அடிப்படையில் ஆலய நிர்வாகம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது என அவர் மேலும் சொன்னார்.

இந்த கும்பாபிஷேக விழா உபயத்தை முவாலிம் தொகுதி மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் தேசிய உதவித் தலைவருமான் ஏஸ்.ஏ.கிருஷ்ணராவ் தம்பதியர் ஏற்று நடத்தினர்.

இவ்விழாவில் டத்தின்ஶ்ரீ வாணி, மலேசிய மக்கள் சக்தி கட்சியின் கெளரவச் செயலாளர் சுதாகரன், சென்னை., தமிழ்நாடு  இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் முனைவர் ஜெ.சசிகுமார் உட்பட சுற்று வட்டாரங்களிலிருந்து மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment