Sunday 31 December 2017

'மக்களின் பார்வையில் இன்றைய ஊடகமும் நிருபர்களும்'



புனிதா சுகுமாறன்

ஈப்போ-
'கத்தியை விட கூர்மையானது பேனா முனை' என்ற பழமொழி நம்மிடையே வழக்கத்தில் உள்ளது. ஊகடகத்தின் வலிமையை இதை விட சிறப்பாக யாருமே சொல்ல முடியாது.

ஒரு ஜனநாயக நாட்டில் மக்களாட்சி மாண்புடன் விளங்குவதற்கும் மக்களின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்த வேண்டிய அரசு அதனை செய்யத் தவறினால் தட்டிக் கேட்கும் முதல் ஆளுமையும் ஊடகத்திடமே உள்ளது.

ஒரு நாடு சுதந்திரத்தோடும் வெளிப்படைத் தன்மையுடனும் செயலாற்றுகிறது என்பதற்கு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திர தன்மையை வைத்தே புரிந்து கொள்ளலாம். ஜனநாயக நாட்டில் ஊடகங்களின் கருத்து சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு இல்லாமலும் (சில விதிமுறைகள் உட்பட்டு) சர்வாதிகார நாட்டில் ஊடகங்கள் மீது அடக்குமுறை கையாளப்படுவதும் இயல்பானதே.

ஊடகங்களால் ஒரு புரட்சியை உருவாக்கவும் முடியும்; போரை நிகழ்த்தி காட்டவும் முடியும். இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அத்தகைய பொறுப்புணர்வுமிக்க  ஊடகத்துறை  இன்று எந்தளவு நம்பிக்கை பாத்திரமாக உள்ளது  என்பதே கேள்விக்குறியாகும்.

நமது நாட்டில் (மலேசியாவில்) அச்சு ஊடகங்களே மக்களிடம் பிரசித்தி பெற்றவையாக தற்போது திகழ்கின்றன. மின்னியல் ஊடகங்கள் அண்மைய காலமாகதான் இங்கு தலைதூக்குகின்ற என்ற நிலையில் இத்தனை ஆண்டுகளாக மக்களை கட்டிப் போட்ட அச்சு ஊடகங்கள் இன்று மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனவா?.

ஊடகங்களை பொறுத்தவரை பேனாவை கையில் ஏந்தி களமிறங்கும் நிருபர்களே மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்கின்றனர். மக்களை அணுகி அவர்களின் பிரச்சினைகளையும் நிகழ்வுகளையும் நாளிதழில் இடம்பெறச் செய்யும் நிருபர்கள்  மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்றனரா?, ஊடகங்கள் மீது மக்கள் கொண்டுள்ள அபிப்ராயங்கள் என்ன? 'பேனாக்காரன்' எனும் நிருபர்கள் புரட்சியாளர்களா- சந்தர்ப்பவாதிகளா?, நிருபர்கள்  எப்படி இருக்க வேண்டும்?, ஊடகங்கள் நடுநிலைபோக்கை கடைபிடிக்கின்றனவா?,  நிருபர்கள் மீது மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

இத்தனை கேள்விகளையும் உள்ளடக்கிய 'மக்களின் மனவோட்டங்கள்'  விரைவில் 'பாரதம்' மின்னியல் ஊடகத்தில் இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment