Friday 22 December 2017

மஇகா வலுவாக திகழ சுங்கை சிப்புட் தொகுதியை மீட்டெடுக்க வேண்டும்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் தாய்க்கட்சி என்றால் அது மஇகாதான்.  மஇகா வலுவான கட்சியாக திகழ வேண்டுமானால்  கடந்த பொதுத் தேர்தலில் தோல்வி கண்ட தொகுதிகளை வெற்றியை நிலைநாட்டுவது அவசியமானதாகும் என மஇகா உதவித் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

இந்தியர்களை பிரதிநிதித்து பல கட்சிகள் இருக்கலாம். ஆனால் மஇகா மட்டுமே  அனைத்துக்கும் முதன்மை கட்சியாகும். இதை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கும் உணர்ந்துள்ளார்.

ஆதலால் வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் பலத்தை கூட்டுவதற்கு ஏதுவாக தோல்வி கண்ட தொகுதிகளில் வெற்றியை நிலைநாட்டுவது அவசியமாகும். அதில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியும் உள்ளடங்கியுள்ளது.

மஇகாவின் இரு தேசியத் தலைவர்கள் அலங்கரித்த சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி கடந்த இரு தவணைகளாக எதிர்க்கட்சி வசம் வீழ்ந்து கிடக்கிறது.

இத்தொகுதியை எதிர்க்கட்சியிடமிருந்து மீட்டு தேசிய முன்னணியின் பலத்தை நிரூபிக்க வேண்டும். அதற்கு தொகுதி  மஇகாவினர் அங்குள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மக்கள் பணி ஆற்ற வேண்டும் என மேலவை சபாநாயகருமான டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

மஇகா வலிமையான கட்சியாக உருவெடுக்க வேண்டுமானால் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மீட்டெடுப்பது அவசியம் என்பதை உணர்ந்து களப்பணி ஆற்றுங்கள் என நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வருகை புரிந்த சுங்கை சிப்புட் தொகுதி மஇகாவினரை சந்தித்த டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் குறுப்பிட்டார்.

சுங்கை சிப்புட் மஇகா தொகுதி செயலாளர் கி.மணிமாறன் தலைமையில் சென்ற மஇகாவினருக்கு டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் செயலாளர் டத்தோ ஆர்.கணேசன் அனைவருக்கும் விளக்கமளித்தார்.

No comments:

Post a Comment