Wednesday 13 December 2017

பள்ளி உபகரணப் பொருட்கள் அன்பளிப்பு - கூ.பிரதேச மைபிபிபி கட்சியின் சமூக கடப்பாடு


கோலாலம்பூர்-
கூட்டரசுப் பிரதேச அறவாரியத்தின் 'செரியா கெ செகோலா' (Ceria ke Sekolah) எனும் திட்டத்தின் வழி, கூட்டரசுப் பிரதேச மைபிபிபி அம்மாநிலத்தைச் சேர்ந்த 400 மாணவர்களுக்குப் பள்ளி உபகரணப் பொருட்களை வழங்கியது.

கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள வசதி குறைந்த மாணவர்களை அடையாளம் கண்டு புத்தகப் பை உள்ளிட்ட 100 வெள்ளி பெருமானமுள்ள பற்றுச் சீட்டையும் வழங்கியது. இந்தப் பற்றுச் சீட்டைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய பள்ளி உபகரணப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

கூட்டரசுப் பிரதேச மக்களின் நலனில் அக்கறை கொண்ட தேசிய முன்னணி அரசாங்கம் தனது கடமையிலிருந்து ஒருபோதும் தவறியதில்லை. அந்த வகையில், பள்ளி தவணை தொடங்கும் முன்னதாகவே கோலாலம்பூர் வாசிகளுக்கு இதுபோன்ற உதவிகள் கை கொடுக்கும். இதனைக் கருத்தில் கொண்டுதான் 'செரியா கே செகோலா' எனும் திட்டம் தொடங்கப்பட்டது.

கோலாலம்பூர் மாநகர் மன்ற மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மைபிபிபி உதவித் தலைவர் டத்தோ ஸக்காரியா, இளைஞர் பிரிவுத் தலைவர் சத்தியா சுதாகரன், தேசிய தகவல் பிரிவுத் தலைவர் சைமேன் சுரேஸ் ஆகியோருடன், கூட்டரசுப் பிரதேச பள்ளிகளின் கல்வி பிரிவு பொறுப்பாளர் ஸரூல் மஸ்லான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதனிடையே, கல்வியின் வழி சிறந்த மாணவர் என்ற நிலையை அடைந்து குடும்பத்தின் தலையெழுத்தை மாற்றுவதற்கு மாணவர்கள் முயற்சிக்க வேண்டும் என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் ஆலோசனை கூறினார்.

ஏழ்மையாக வாழும் குடும்பத்தின் நிலையை மாற்றுவது மாணவர்களின் கையில் இருக்கிறது. அதே மாணவர்கள் எதிர்நோக்கும் ஏழ்மை நிலைக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேவேளையில், கிடைக்கும் உதவிகளை நன்றாகப் பயன்படுத்தி மாணவர்களுக்குத் தேவையானவற்றை வழங்க பெற்றோர்கள் முயற்சிக்க வேண்டும் என்றார் அவர்.

அண்மையில்  இங்குள்ள கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் நடைபெற்ற 'செரியா கே செகோலா' எனும் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய டான்ஶ்ரீ கேவியஸ் இவ்வாறு சொன்னார்.

மொத்தமாக 60,000.00 வெள்ளி மதிப்பிலான புத்தகப் பைகளும் 100.00 வெள்ளிக்கான பற்றுச் சீட்டுகளும் சுமார் 400 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விலாயா மாநில அமைச்சர் டத்தோஶ்ரீ பங்ளிமா தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் அவர்களுக்கு இவ்வேளையில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இதுபோன்ற உதவிகள் நிச்சயம் அவர்களின் சுமையைக் குறைக்கும் என்பது திண்ணம். விலாயா மாநிலத்திலுள்ள குடும்பங்களின் மீது தேசிய முன்னணி அரசாங்கம் கவனம் கொள்கிறது என்பதும் இதன்வழி புலப்படுகிறது எனவும் டான்ஶ்ரீ கேவியஸ் கூறினார்.

No comments:

Post a Comment