Monday 18 December 2017

புந்தோங்கில் மஇகா போட்டியிடும்; காழ்ப்புணர்ச்சியால் வெற்றியை சீர்குலைத்து விடாதீர்- டத்தோஶ்ரீ சுப்ரா


புனிதா சுகுமாறன்
ஈப்போ-
புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டுமே தவிர காழ்ப்புணர்ச்சியில் வெற்றியை சீர்குலைக்கக்கூடாது என மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் வலியுறுத்தினார்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் மஇகா போட்டியிடும். இங்கு போட்டியிடக்கூடிய வேட்பாளரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இத்தொகுதியில் வெற்றி பெறுவது மஇகா சுய கெளரவம் சார்ந்ததாகும். 51 விழுக்காட்டுக்கும் அதிகமான இந்திய வாக்காளர்கள் இத்தொகுதியில் மஇகா வேட்பாளர் வெற்றி பெற முடியாவிட்டால் பிற தொகுதிகளில் நாம் இந்தியர்கள் ஆதரவை பெருமளவு பெற்றுள்ளோம் என சொல்லிக் கொள்வதில் பெருமை எதுவும் கிடையாது.

இங்கு நாம் வெற்றியை நிலைநாட்டிக் கொண்டால் மட்டும்தான் பிற தொகுதிகளில் நாம் தலை நிமிர்ந்து நடமாட முடியும். இந்நாட்டிலுள்ள இந்தியர்களை பிரதிநிதிக்கின்ற மஇகா, 51 விழுக்காட்டுக்கும் அதிகமான இந்திய வாக்காளர்கள் உள்ள தொகுதிகளில் ஆதரவை பெறுவது ம இகாவின் கெளரவப் பிரச்சினையாகும்.

ஆதலால் வரும் பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் வெற்றி பெற அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாடுபட வேண்டும். காழ்ப்புணர்ச்சி கொண்டு வேட்பாளரை தோற்கடிப்பது மஇகாவுக்கே அவமானமாகும். அதனை உணர்ந்து ஒன்றிணைந்து செயலாற்றி வெற்றி பெறுங்கள் என  இங்கு புந்தோங்கிலுள்ள ஆலயங்கள், பொது இயக்கங்களுடனான சந்திப்பின்போது டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment