Saturday 30 December 2017

மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் உள்ளூர் கலைஞர் 'புன்னகைப் பூ' கீதா


கோலாலம்பூர்-
பிரபல மலேசிய நடிகையும், டி.எச்.ஆர். ராகா வானொலியின் அறிவிப்பாளருமான புன்னகைப் பூ கீதா இயக்குனர் நாகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த “காவல்” திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இவருக்கு ‘இந்தியாவில் முன்னணி கதாநாயகியாக நடித்த மலேசியாவின் முதல் நடிகை” எனும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஓர் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு வெளியான 'காவல்' திரைப்படத்தில் தமிழ்த்திரைப்படவுலகில் நன்கு அறிமுகமான நடிகர் விமல், சமுத்திரகனி ஆகியோர்  நடித்திருந்தார்கள். இவர்களுடன் நம் உள்ளூர் கலைஞர் கீதா கதாநாயகி வலம் வந்த இத்திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திரையரங்களில் வெளியீடு கண்டது.

“மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இன்று எனக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் பெருமைக்குரிய ஒன்றாகும். இந்த அங்கீகாரம் வெறும் பதிவு மட்டுமல்ல. என் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் சமர்ப்பணமாகும். காவல் திரைப்படத்தில் கதாநாயகியாக என்னை அறிமுகப்படுத்தி வாய்ப்பு வழங்கிய இயக்குனர் நாகேந்திரனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத ஓர் அனுபவமாகும். மேலும், இந்தக் கலையுலகில் பல சாதனைகளைப் படைத்து நடிப்புத் துறையில் ரசிகர்களைத் தொடர்ந்து மகிழ்ச்சிப்படுத்துவதோடு தமிழ்த்திரைப்படங்களில் என்னுடைய பயணத்தைத் தொடர்வேன்”, என்றார் கீதா.

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ‘அறிந்தும் அறியாமலும்’ திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஆகுவதற்கு முன்பு, புன்னகைப் பூ கீதா 2000-ஆம் ஆண்டுகளில் தன்னுடைய கலைப் பயணத்தை உள்ளூர் வானொலி, தொலைக்காட்சிகளில் அறிவிப்பாளராக அறிமுகமானார். இவரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் அதிகமான வசூலை ஈட்டி 175 நாட்களுக்கு திரையரங்களில் வெற்றி நடைபோட்டது. மேலும், மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் ‘இந்தியாவில் தமிழ் திரைப்படத்தை தயாரித்த மலேசியாவின் முதல் தயாரிப்பாளர்” எனும் அங்கீகாரமும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, ‘குண்டக்க மண்டக்க’, ‘பட்டியல்’, ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’, ‘நர்த்தகி’  போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார். 2014-ஆம் ஆண்டில் கீதா மலேசியாவில் அதிக வசூலை ஈட்டிய உள்ளூர் தமிழ்திரைப்படங்களான ‘மைந்தன்’ மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

இவருடைய நடிப்புத் திறனை அங்கீகரிக்கும் வகையில் 2015-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 8ஆவது எடிசன் விருது விழாவில் புன்னகைப்பூ கீதாவிற்கு ‘சிறந்த வெளிநாட்டு கலைஞர்’ விருது வழங்கப்பட்டது.

கீதா தற்போது புதியதொரு கதாப்பாத்திரத்துடன் குழந்தைகளை மையப்படுத்தி வெளிவரவுள்ள ‘சங்கு சக்கரம்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். மாரிசன் இயக்கத்தில் குழந்தைகளே பேயை மிரட்டும் புதுமையான கதையுடன் அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி ‘சங்கு சக்கரம்’ மலேசிய திரையரங்களில் வெளியீடு காணவுள்ளது.

No comments:

Post a Comment