Sunday 18 November 2018

எனது மகளை எப்போது ஒப்படைப்பீர்கள்? தாயார் இந்திரா காந்தி ஆதங்கம்


கோலாலம்பூர்-
முன்னாள் கணவரின் பரமாரிப்பில் இருந்து வரும் தனது மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியை திருமதி எம்.இந்திரா காந்தி பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்யப்பட்ட  தனது மூன்றாவது மகள் பிரசன்னா டிக்சாவை தன்னிடம் ஒப்படைக்கும்படி புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதிலும் போலீஸ் படை இன்னமும் அவளை கண்டுபிடிக்கவில்லை. இது  தனக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கும் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் புஸி ஹருணுக்கும் திருமதி இந்திரா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், முகமட் ரிடுவானும் மகளும் எங்கே?, பிரசன்னா உயிருடன் உள்ளாரா?, நலமுடன் இருக்கிறாளா?, ஓர் அம்மாவாக இது எதுவுமே ஏனக்கு தெரியவில்லையே. ஏன்?, கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவானது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத மாற்ற விவகாரத்தில் நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் என்று பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் உறுதி அளித்திருந்த நிலையில் தனது மகள் தனக்கு கிடைப்பாள் என்ற நம்பிக்கையில் இருந்த எனக்கு போலீசார் இன்னமும் தனது மகளை தன்னிடம் ஒப்படைக்காதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

2009ஆம் ஆண்டில் 11 மாத குழந்தையாக இருந்த பிரசன்னாவை தூக்கிச் சென்று  தலைமறைவான முகமட் ரிடுவானை கைது செய்து தனது மகளை தன்னிடம் ஒப்படைக்க இன்னும் எவ்வளவு கால அவகாசம் வேண்டும்? என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.

பிரசன்னாவுக்காக பத்தாண்டுகள் காத்துக் கொண்டிருப்பதாக கூறிய இந்திரா காந்தி, 'பிரசன்னா உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள்?, தயவு செய்து அவளை தேடி கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படையுங்கள்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment