Thursday 2 November 2017

பாலியல் தொல்லை: குற்றம் உறுதியானால் பணிநீக்கம்



ஜோகூர் பாரு-
பள்ளி ஆசிரியர் ஒருவர் இளம் பெண்ணை பாலியல் உறவுக்கு அழைக்கும் குரல் பதிவு சமூக ஊடகங்களில் பரவலாகி வருவதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் உடனடி பணிநீக்கம் செய்ய கல்வி அமைச்சு தயங்காது என்று கல்வி துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் தெரிவித்தார்.

பள்ளியில் பயிலும் மாணவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கும் உண்டு. இந்நிலையில், இந்த ஆசிரியரின் செயல் முற்றிலும் நம்பமுடியாதவையாகும்.

ஆசிரியர்களை நம்பியே பெற்றோர் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அந்த ஆசிரியர் மீது வைத்திருந்த நம்பிக்கையை உடைத்துவிட்டார். இது ஒரு நம்பிக்கை துரோகமாகும்.

இந்த குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் அவர்தம் பள்ளியில் பாடம் கற்பிக்க அனுமதிக்கப்படமாட்டார். மிக அபாயகரமானவர் என கருதப்படுவதால் பணிநீக்கம் செய்யப்படலாம். 

இவ்விவகாரம் தொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலகம், மாநில கல்வி இலாகா, போலீஸ் ஆகிய முன்று தரப்பும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது என்று ஜோகூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் டத்தோ கமலநாதன் செய்தியாளர்களிடம் பேசினார்.

No comments:

Post a Comment