Monday 13 November 2017

எண்ணிக்கையில் குறைவுதான்; நாட்டின் மேம்பாட்டில் பங்கு அளப்பரியது- டத்தோஶ்ரீ சைட் இப்ராஹிம்

ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
இந்நாட்டில் இந்திய முஸ்லீகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் நாட்டின் மேம்பாட்டில் நம்முடைய பங்கு அளப்பரியதாகும். பல்வேறு வர்த்தகத் துறைகளில் நாம் ஈடுபட்டு இன்று வெற்றி கண்ட சமூகமாக முன்னேற்றம் கண்டு நிற்கின்றோம் என கிம்மா கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ சைட் இப்ராஹிம் காடீர் வலியுறுத்தினார்.
தேசிய ரீதியிலான வளர்ச்சியை நாம் பதிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். நமக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.
இந்நாட்டிலுள்ள இந்திய முஸ்லீம் சமூகத்தினரிடையே ஒற்றுமை மேலோங்கப்பட வேண்டும்.  அதுதான் நமக்கான வாய்ப்புகளையும் சலுகைகளையும் நிலைபெறச் செய்யும்.
அவ்வகையில் சுங்கை சிப்புட் இந்திய முஸ்லீம் பள்ளிவாசல் மண்டபம் கட்டும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாகும் என நேற்று இங்கு மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 'இஸ்லாமிய மார்க்க தமிழ் விழா' நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
இந்த மண்படம் கட்டுவதற்கு ஏதுவாக 10 ஆயிரம் வெள்ளி வழங்குவதாக கூறிய டத்தோஶ்ரீ சைட் இப்ராஹிம், பிரதமரிம் கலந்தாலோசித்து கூடுதல் மானியம் ஒதுக்குவதற்கு கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
இந்த மண்டபத்தின் கட்டட வரைப்படத்தை டத்தோஶ்ரீ சைட் இப்ராஹிம் காடீர் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் 10 பேர் தக்கார் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளராக மதிலன் நிறுவன இயக்குனரும் தொழிலதிபருமான யோகேந்திரபாலன்,  சுங்கை சிப்புட் இந்திய முஸ்லீம் பள்ளிவாசலின்  தலைவர் ஹாஜி அப்துல் நஹீம் பின் குலாம் காடிர் , பேராக்  மாநில கிம்மா தலைவர் நஸ்ருல் கான், பிரிம் இயக்கத் தலைவர் முகமட் அரிப் பின் அலியா, சுங்கை சிபபுட் மஇகா தொகுதி துணைத் தலைவர் அஜாட் கமாலுடின் உட்பட இந்திய முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்களும் பள்ளிவாசல் செயல்குழுவினரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment