Thursday 23 November 2017

வெ.230 மில்லியன்: இந்தியர்களை ஏமாற்றுகிறாரா பிரதமர்?- சிவகுமார் கேள்வி

கோலாலம்பூர்-
பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்ட 'செடிக்' பிரிவுக்கு வழங்கப்பட்ட 230 மில்லியன் வெள்ளி உண்மையிலேயே உதவி தேவைப்படும் இந்திய சமூகத்தை சென்றடைந்ததா? என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் கேள்வி எழுப்பினார்.

இந்திய சமூகத்திற்காக செடிக் பிரிவின் மூலம் 230 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அறிவிப்பு ஓர் ஏமாற்று வேலையாகும்.

செடிக் மூலம் வழங்கப்பட்ட நிதி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆதாரப்பூர்வமான தகவலை வழங்குவதில் பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி தோல்வி கண்டுள்ளதே பெரும் கேள்விகளை எழுப்புகிறது.

இந்திய சமுதாயத்திற்காக முன்பு மஇகாவின் மூலமாகவே நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வந்தன. ஆனாலும், அந்த நிதி ஒதுக்கீடுகள் இந்திய சமுதாயத்தை சென்றடையாததன் விளைவாக இந்தியர்கள் கோபம் கொண்டனர். அந்த கோபத்தின் வெளிப்பாடகவே தேசிய முன்னணி இந்தியர்களின் ஆதரவை பெருமளவு இழந்தது.

அதனை தொடர்ந்து, செடிக் அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வந்தன. ஆயினும், செடிக் அமைப்பும் மஇகாவின் கைப்பாவையாகவே மாறிவிட்டது.

2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது 2014 முதல் தற்போது வரை 230 மில்லியன் வெள்ளி செடிக் அமைப்பின் மூலம் இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் வழி, 5 லட்சம் இந்தியர்கள் பயனடைந்துள்ளனர் என டத்தோஶ்ரீ நஜிப் தெரிவித்தார். இது உண்மையானதா?

அந்த 230 மில்லியன் வெள்ளி இந்திய சமுதாயத்தை சென்றடையாத நிலையில் பிரதமர் இந்திய சமுதாயத்தை ஏமாற்றுகொண்டிருக்கிறார். உண்மையிலேயே செடிக் அமைப்பின் நிதி பெரிய திட்டங்களின் மூலம்   பெரும்புள்ளிகளுக்கு சென்றடைந்துள்ளது.

இன்னமும் மஇகா தலைவர்கள் இந்திய சமுதாயத்தை ஏமாற்றி கொண்டிருப்பது தொடர்கதையாக வேண்டுமா? என ஓர் அறிக்கையின் வாயிலாக சிவகுமார் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment