Friday 10 November 2017

'தேவை ஆக்ககரமான திட்டம்'- இது எச்சரிக்கை அல்ல; ஆலோசனைதான்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
(இந்த செய்தியை படித்து விட்டு மீண்டும் தலைப்பை படியுங்கள்)
வாரந்தோறும் அறிவிக்கப்பட்டு வரும் பெட்ரோல் விலையேற்றம் மக்கள் மத்தியில் சிறு சலனத்தையே ஏற்படுத்தி வந்த நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட பெட்ரோல் விலை மலேசியர்களுக்கு அதிர்ச்சி 'வைத்தியம்' கொடுத்துள்ளது.

வாரந்தோறும் 1 காசு, 3 காசு என ஏற்றம் கண்டு வரும் பெட்ரோல் விலை இவ்வாரம் 7 காசு வரை உயர்வு கண்டுள்ளது உண்மையிலேயே மலேசியர்களுக்கு அதிர்ச்சி தான்.

கடந்த வாரம் வரை வெ.2.24ஆக இருந்த ரோன் 95 வெ.2.31க்கும் (7 காசு உயர்வு),  வெ.2.54ஆக இருந்த ரோன் 97 வெ.2.60க்கும் (6 காசு உயர்வு), வெ.2.17ஆக இருந்த டீசல் வெ.2.20க்கும் (3 காசு உயர்வு)  இன்று முதல் உயர்வு கண்டுள்ளது.

பெட்ரோல் வளம் கொண்ட நாடாக மலேசியா திகழ்ந்த போதிலும் உலக நிலையிலான கச்சா எண்ணெய் விலை நிர்ணயம் தொடர்ந்தே மலேசியாவிலும் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

ஆயினும் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலை மலேசியர்களுக்கு ஒரு சுமையாகவே இருந்து வருகிறது. பெரும்பாலானோர் வேலைக்கும் சொந்த தேவைகளுக்கும் பொது போக்குவரத்துச் சேவையை விட சொந்த வாகனத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

'வருமானம் குறைவு; சுமை அதிகம்' என்ற நிலைப்பாடே இன்றைய மலேசியர்களின் வாழ்க்கையாகி விட்ட சூழலில் பெட்ரோல் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பது 'சுமைக்கு மேல் சுமையை' ஏற்படுத்தியுள்ளது.

இதே நிலை நீடித்தால் சேமித்து வைக்கக்கூடாத பணம் இல்லாத சூழலுக்கு  மலேசியர்கள் தள்ளப்பட்டு விடுவர். ஆதலால் தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரிக்குமானால் மக்களின் சுமையை குறைக்கக்கூடிய  ஆக்ககரமான திட்டங்களை அரசாங்கம் ஆராய வேண்டும்.

இல்லையேல் "மக்களே புறக்கணிக்கும் சூழலுக்கு  ஆளும் அரசாங்கம் தள்ளப்பட்டு விடும்". இப்போது மீண்டும் தலைப்பை படியுங்கள்.

No comments:

Post a Comment