Sunday 1 April 2018

கல்லுமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலய நிலம் இன்னமும் பதிவு செய்யப்படாதது ஏன்? - சிவசுப்பிரமணியம் கேள்வி (வீடியோ இணைப்பு)

ரா.தங்கமணி

ஈப்போ-
ஈப்போ வட்டாரத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் கல்லுமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு இன்னமும் நிலப்பட்டா ஒதுக்கீடு செய்யப்படாதது ஏன்? என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.

தைப்பூச விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரளக்கூடிய இந்த ஆலயத்தின் நிலம் இன்னமும் ஆலயத்திற்கு பதிவு செய்யப்படாமல் இருக்கிறது.

130 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இவ்வாலயத்திற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் இன்னமும் நிலத்தை ஆலயத்தின் பெயரின் பதிவு செய்யாதது  ஏன்?

ஆலயத்தின் பெயரில் இந்நிலம் பதிவு செய்யப்படாததால் பிற்காலத்தில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்நிலத்தை தனியார் நிறுவனங்களும் அரசு சார்பற்ற பொது இயக்கங்களும் கையகப்படுத்திக் கொள்ளும் அபாயம் சூழல் உருவாகலாம்.

60 ஆண்டுகள் பழமை வாய்ந்த லுமூட் சாலையில் அமைந்துள்ள ஶ்ரீ கார்த்திகேயன் முருகம் ஆலயத்திற்கு நிலம் கொடுப்பதாக பேராக் மாநில அரசு வாக்குறுதி கொடுத்தது. ஆனால் அந்த நிலத்தை தனியார் நிர்வாகத்திற்கு விற்கப்பட்டு விட்டது.

இதுபோன்றதொரு அபாய சூழல் கல்லுமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதோடு  மாநில அரசு அந்நிலத்தை ஆலயத்தின் பெயரில் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்வதாக சிவசுப்பிரமணியம் கோரிக்கை விடுத்தார்.

வீடியோ இணைப்புக்கு இந்த லிங்க்-ஐ சொடுக்கவும்:
https://web.facebook.com/BhaarathamOnlineNews/videos/293311844535992/?t=6

மேலும், இஸ்லாம் அல்லாத சமய விவகார பிரிவுக்கு 2013 முதல் இவ்வாண்டு வரையில் தலா ஒவ்வோர் ஆண்டும் 3.5 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஒதுக்கப்பட்ட இந்நிதி முறையாக கையாளப்பட்டதா?, இஸ்லாம் அல்லாத சமய விவகாரங்களின்  பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதா? கல்லுமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலய நில விவகாரத்திற்கு ஏன் தீர்வு காணப்படவில்லை? என அவர் சராமாரியான கேள்விகளை தொடுத்தார்.

No comments:

Post a Comment