Monday 2 April 2018

தமிழ் அறிஞர்களின் பெருமைகளை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லுங்கள்; டத்தோ தங்கேஸ்வரி அறிவுறுத்து



புனிதா சுகுமாறன்

ஈப்போ,
தமிழ் அறிஞர்களின் அருமை பெருமைகளை இன்றைய இளம் தலைமுறைகளுக்கு கொண்டு செல்வதில் நாட்டிலுள்ள பொது இயக்கங்களின் பங்கு மிக அளப்பரியது. தொண்டு தொட்டு வரும் அறிஞர்களின் அருமைகள் மறைந்து விடக்கூடாது என்பதை பொது இயக்கங்கள் அறிந்து செயல்பட வேண்டும் என்று பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ எஸ்.தங்கேஸ்வரி சுப்பையா வலியுறுத்தினார்.

மலேசிய இந்தியர் மகளிர் இயக்கம், மலேசிய தமிழ் மணி மன்றம் தாமான் ரிஷா கிளை,ஈப்போ இணை ஏற்பாட்டில் மஇகா புசாட் கெராதாப்பி பண்டார் ராயா கிளை ஆதரவோடு பொங்கும் தமிழ் ஔவை பெண்பாற் புலவருக்குப் பெருமை சேர்க்கும் ஔவை பெரு விழாவும் பாராட்டும் இங்குள்ள ஏகேஎஸ் மண்டபத்தில் நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஔவையின் சிறப்புகளை வெளிகொணரும் வகையில் இரண்டாம் முறையாக மலேசிய இந்திய மகளிர் இயக்கம் இந்த விழாவை ஏற்பாடு செய்ததற்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்ட டத்தோ தங்கேஸ்வரி, இளம் தலைமுறைகளுக்கு நன்மை பயக்கும் வகையில் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை பொது இயக்கங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தமிழ் அறிஞர்களின் அருமை பெருமைகளை இளம் தலைமுறைகளுக்கு புகுத்தத் தவறினால், அவர்களின் சிறப்புகள் மறைந்து விடக்கூடும். பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வரும் பொது இயக்கங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளையும் மேற்கொள்வது சாலசிறந்ததாகும் என்று அவர் அறிவுறுத்தினார்.

பெண்கள் நாட்டின் கண்கள். பெண்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை என்பார்கள். அந்த வகையில், பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி இந்த விழாவை கடந்த 2015ஆம் ஆண்டில் முதன் முறையாகவும் இவ்வாண்டு இரண்டாம் முறையாகவும் இந்த விழாவை ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறிய மலேசிய இந்திய மகளிர் இயக்கத்தின் (மிம்மி) தலைவி முனைவர் இராமநாயகம் திரவியம், இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி கூறிக் கொண்டார்.

தமிழ் நாட்டைச் சேர்ந்த கவிஞர் நல்ல அறிவழகன், முனைவர் கோ.இரா.கமலாமுருகன் ஆகிய இரு பேச்சாளர்களும் ஔவைகளின் பெருமைகளை எடுத்துரைத்தது மேலும் இவ்விழாவை மெருகூட்டினர்.
இவ்விழாவில் அறுவருக்கு ஔவை செல்வி விருது வழங்கி சிறப்பு செய்தனர்.


No comments:

Post a Comment