Friday 13 April 2018

வேலை நாளில் வாக்களிப்பு; தொழிலாளி- முதலாளிக்கு பாதகத்தை ஏற்படுத்தலாம் - சிவநேசன்


ரா.தங்கமணி

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் புதன்கிழமை நடத்தப்படுவது தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்குமான உறவில் பாதிப்பை உண்டாக்குகிறது என சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் வரும் மே 9ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில் ஏப்ரல் 28ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடத்தப்படும் என மலேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மே 9ஆம் தேதி புதன்கிழமை நடத்தப்படும் பொதுத் தேர்தல்  வேலை நாட்களில் வருவதால் அது தொழிலாளர்களுக்கும் முதலாளிமார்களுக்கும் பாதகமான சூழலை உருவாக்கி விடலாம்.

வேலை நாளான புதன்கிழமை பொதுத் தேர்தல் வருவதால் அன்று விடுமுறை அளிக்கும்  சூழலில் நாட்டிலுள்ள நிறுவனங்கள் 600 மில்லியன் வெள்ளி நஷ்டத்தை சந்திக்கக்கூடும் என தொழிலாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ சம்சுடின் பஹாடான் அறிவுறுத்தியுள்ளார்.

வாக்களிப்பு நாளில் தொழிலாளர்களுக்கு விடுமுறை/ கால அவகாசம் அளிக்க வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு விடுமுறை/ கால அவகாசம் வழங்க மறுத்தால் அபராதம் விதிக்கப்படும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால் தொழிலாளர் சட்டத்தில் இது வரையறுக்கப்படவில்லை.

அருகிலுள்ளவர்கள் கால அவகாசம் எடுத்துக் கொண்டுகூட வாக்களிக்க செல்லலாம். ஆனால் தொலைவில், வெளி மாநிலங்களில் வேலை செய்பவர்கள் ஒரே நாள் மட்டும் விடுமுறை எடுத்துக் கொண்டு வாக்களிக்க வருவார்களா? என்பதே கேள்விக்குறிதான்.

அவ்வாறு வெளியிலிருந்து வருபவர்களுக்கு ஒருநாள் மட்டும் போதாது; குறைந்தது இரண்டு நாட்கள் விடுமுறை தேவைபடுகிறது. இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்தால் மட்டுமே அவர்களால் இலகுவாக வாக்களிக்க முடியும்.

Advertisement


வேட்புமனுத் தாக்கல் சனிக்கிழமையும் வாக்களிப்பு புதன்கிழமையும் வழங்குவது ஏற்புடையதல்ல. ஏனெனில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேட்பாளரே செல்ல வேண்டியதில்லை. வேட்புமனு பாரத்தை அவர்களது பிரதிநிதியே சமர்பித்தால் போதும்.

ஆனால் வாக்களிப்பு என்பது அனைவரும் கட்டாயம் வாக்களிப்பு மையத்திற்கு செல்ல வேண்டியதாகும். வாக்களிப்பு தினத்தை வேலை நாட்களில் வழங்குவது தொழிலாளர்களுக்கு கட்டாயம் சுமையை ஏற்படுத்துவதாகும்.
இனிவரும் காலங்களில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் பாதகம் ஏற்படுத்தும் வகையில்  மலேசிய தேர்தல் ஆணையம் செயல்படக்கூடாது என சிவநேசன் மேலும் கருத்துரைத்தார்.


No comments:

Post a Comment