Sunday 8 July 2018

எங்களது பிரச்சினைக்கு தீர்வு கண்டவர்களுக்கு நன்றி - பெல்டன் தொழிலாளர்கள்



ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
வேலையை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்ட தங்களில் தொழில் பிரச்சினையில் தலையிட்டு உடனடி தீர்வு கண்ட பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன், சுங்கை சிப்புட் பிஎஸ்எம் கட்சி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாதிக்கப்பட்ட  தொழிலாளர்கள் கூறினர்.

எங்களை பணியிலிருந்து நிறுத்தி விட்டதாக கூறி கடிதம் வழங்கிய தொழிற்சாலை நிர்வாகத்தின் நடவடிக்கை அதிருப்தி கொண்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக இவ்விவகாரம் பெரும் விஷயமாக உருவெடுத்தது.

கேசவன், பிஎஸ்எம் கட்சியினர் ஆகியோரின் அதிரடி நடவடிக்கையினாலும் சிவநேசனின் நேரடி வருகையாலும் எங்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பணி புரிந்து வரும் 29 தொழிலாளர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்க நிறுவன நிர்வாக முயன்ற போதிலும் அவ்விவகாரத்தில் தலையிட்டு சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சிவநேசன் நிறுவன நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார் என பாதிக்கப்பட்ட தொழிலாளர்களான தங்கராஜ் ராஜமாணிக்கம், ரவிசந்திரன் முனுசாமி, டி. அண்னாதுரை ஆகியோர் கூறினார்.

சிவநேசனின் அதிரடி நடவடிக்கையினால் வேலையிலிருந்து நீக்கப்பட்டால் நஷ்ட ஈடும் இல்லையேல் 30 ஆண்டுகால சேவை அடிப்படையிலான புதிய வேலை வாய்ப்பு என்ற சூழலை தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ளோம்.
நாளை திங்கட்கிழமை எங்களது பிரச்சினைக்கான இறுதி முடிவு காணப்படவுள்ளது. அதனை தொடர்ந்தே அடுத்தக்கட்ட முடிவுகள் தீர்மானிக்கப்படும்.

எங்களின் பிரச்சினையில் உடனடியாக களமிறங்கிய சிவநேசனுக்கும் கேசவனுக்கும்  உரிய நேரத்தில் ஆலோசனை வழங்கிய பிஎஸ்எம் கட்சியின் டாக்டர் ஜெயகுமார்,  சுகுமாறன், நாகேந்திரன், கார்த்தி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என தொழிலாளர்கள் கூறினர்.

No comments:

Post a Comment