Thursday 12 July 2018

'ஏஜெண்டுகளை நாடுங்கள்' என சொல்லி சட்டவிரோதத் தொழிலாளர்களை அலைகழிப்பதா? - செபஸ்தியர் கேள்வி



ரா.தங்கமணி

ஈப்போ-
புதிய அரசாங்கத்தை அமைத்துள்ள பக்காத்தான் ஹராப்பான் அர்சாங்கம் அந்நிய தொழிலாளர் விவகாரத்தில் ஏஜெண்டுகளும் முகவர்களும் தேவையில்லை என கூறிய நிலையில், சட்டவிரோத தொழிலாளர் தனது தாய்நாட்டுக்கு திரும்ப முனையும் வேளையில் 'ஏஜெண்டுகளை நாடுங்கள்' என குடிநுழைவு துறை இலாகா கூறுவது எவ்வகையில் நியாயமாகும் என பேரா மைபிபிபி கட்சியின் தலைவர் இருதயம் செபஸ்தியர் அந்தோணிசாமி கேள்வி எழுப்பினார்.

இங்கு சிம்மோர் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வரும் வங்காளதேசத்தைச் சேர்ந்த முகமட் ஃபொய்ஸுர் ரஹ்மான், தனது வேலை பெட்மிட் புதுபிக்கப்படாததால் தாய்நாட்டுக்கு திரும்ப முடிவெடுத்தார்.

தொழிற்சாலை நிர்வாகம் தனது கடப்பிதழை கொடுக்காததால் வங்காளதேச தூதரகத்தின் ஒப்புதல் கடிதத்துடன் இங்கிருந்து வெளியேற முயற்சித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதமே வங்காளதேசம் செல்ல விமான டிக்கெட்டை பதிவு செய்த நிலையில் இங்குள்ள குடிநுழைவு துறை அனுமதிக்காததால் தாயகம் திரும்ப முடியாமல் தவித்தார்.

தற்போது வரும் 16ஆம் தேதி தாயகம் செல்ல விமான டிக்கெட்டை எடுத்துள்ள நிலையில் மீண்டும் குடிவுநுழைவு இலாகாவுக்குச் சென்றபோது 'ஏஜெண்டை பாருங்கள்' என பதிலளித்துள்ளனர்.

சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்கு 400 வெள்ளி அபராதம் செலுத்தி தாய்நாட்டு செல்லும் போது இப்போது ஏஜெண்டை நாடுவதால் அதற்கு 550 வெள்ளி செலுத்த வேண்டியுள்ளது.

சொந்தமாகவே தாய்நாட்டு திரும்ப முனையும் சட்டவிரோதத் தொழிலாளர்கள் எதற்கு ஏஜெண்டை நாடி அவர்களுக்கு பணம் செலுத்த வேண்டும்?

இவ்விவகாரம் தொடர்பில் இப்போ குடிநுழைவு துறை, மனிதவள அமைச்சு, புத்ராஜெயாவிலுள்ள குடிவுநுழைவு துறை இலாகா ஆகியவற்றை தொடர்பு கொண்டு கேட்டபோது தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செபஸ்தியர் குறிப்பிட்டார்.

ஏஜெண்டுகளுக்கு செலுத்தப்படும் பணம் யாருக்கு சென்றடைகிறது?  என கேள்வி எழுப்பிய அவர், சட்டவிரோத தொழிலாளர்களை பிடித்து அவர்களை தடுத்து வைத்து தாயகம் அனுப்பினால் அது நமது நாட்டுக்கு தானே வீண் செலவு.

சொந்த நாட்டுக்கு திரும்பவிருக்கும் அந்நிய தொழிலாளர்களை அபராதம் செலுத்த சொல்லலாமே தவிர ஏஜெண்டுகளை பாருங்கள் என சொல்லி அலைகழிப்பதை உள்துறை அமைச்சு, மனிதவள அமைச்சு ஆகியவை கடுமையாக கருத வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தற்போது சக தொழிலாளர்களின் உதவியுடன் தாயகம் திரும்புவதற்கு விமான டிக்கெட்டை எடுத்துள்ள வங்காளதேச தொழிலாளி சம்பந்தப்பட்ட நாளில் தாயகம் திரும்புவதற்கு வழிகாண வேண்டும் என அவருடன் பணியாற்றும் ரகு  கூறினார்

No comments:

Post a Comment