Sunday 1 July 2018

பிரதமர்களை மட்டும் முன்னிலைபடுத்தாமல் சுதந்திர பிரகனடத்தில் கையெழுத்திட்ட தலைவர்களை நினைவு கூறுங்கள்- மணிமாறன்


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
நாட்டின் சுதந்திர தினத்தின் போது பிரதமர்களின் படங்களை மட்டும் பிரசுரிக்காமல் நாட்டின் சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்ட தலைவர்களின் படங்களை இடம்பெறச் செய்வதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என துன் சம்பந்தன் பிறந்தநாள் விழாக்குழு ஏற்பாட்டாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

நாட்டின் சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்களில் துன் வீ.தி.சம்பந்தனும் ஒருவராவார். துவாங்கு அப்துல் ரஹ்மான், துன் டான் செங் லோக் ஆகியோருடன் சுதந்திர பிரகடனத்தில் துன் சம்பந்தன் கையெழுத்திட்டவர் ஆவார்.

அத்தகைய தலைவரின் புகழ் என்றும் மறைந்திடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டின் சுதந்திர தினத்தின்போது பிர்தமர்களின் படங்களை மட்டுமே தாங்கிய சுவரொட்டிகளை காண முடியும்.

இதனை களையும் வகையில் சுதந்திர தினத்தின்போது வைக்கப்படும் சுவரொட்டிகளும் விளம்பரங்களிலும் சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்ட தலைவர்களின் படங்கள் இடம்பெறச் செய்வது அவசியமாகும்.


இதன்வழி சுதந்திரத்தை அடைவதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களையும் தியாகங்களையும் இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்வதற்கு வழிவகுக்கப்படும் என அண்மையில் இங்கு நடைபெற்ற துன் சம்பந்தனின் 99ஆவது பிறந்தநாள் விழாவி உரையாற்றியபோது மணிமாறன் கூறினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் உரையாற்றுகையில், துன் சம்பந்தனின்  நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை அரசாங்கமே ஏற்று நடத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கூறினார்.

சுங்கை சிப்புட்டின் வரலாற்று நாயகனான அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் வகையில் அவரின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

இதனிடையே, இந்நிகழ்வுக்கு ஆதரவு வழங்கிய நேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம், சத்திய சாய் பாபா மையம் உட்பட பல நல்லுள்ளங்களுக்கும் நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் மஇகா துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், அமுசு.ஏகாம்பரம், சுங்கை சிப்புட் சத்திய சாய் பாபா மையத்தின் தலைவர் திருமதி கமலம் உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment