Sunday 5 August 2018

வெ.1,500 குறைந்தபட்ச சம்பளம்; அடுத்த அமைச்சரவையில் விவாதிக்கப்படலாம்; குலசேகரன்

ஈப்போ-
குறைந்தபட்ச  சம்பளம் அதிகரிப்பது தொடர்பில் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

தீபகற்ப மலேசியாவிலும் சபா, சரவாக்கிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் சம சீரான சம்பள முறையை அமலாக்கம் செய்வது தொடர்பில் தற்போது எவ்வித முடிவும் செய்யப்படவில்லை என அவர் கூறினார்.

'விரைவில் நல்ல செய்தி வரலாம்' என கம்போங் தாவாஸ் பகுதியில் 20 பேருக்கு சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

தற்போது தீபகற்ப மலேசியாவில் 1,000 வெள்ளியாகவும் சபா, சரவாக்கில் வெ.800 முதல் 920 வெள்ளியாகவும் மாதச் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

அடிப்படைச் சம்பளமாக வெ. 1,500  உயர்த்துவது ஐந்தாண்டு கால திட்டமாகவும் முதலாளிமார்களுக்கு சுமை ஏதும் இல்லாத வகையில் அமல்படுத்துவது அவசியமாகும்.

ஒரே நேரத்தில் வெ.1,500ஐ உயர்த்த முடியாது. அவ்வாறு செய்தால் தனியார் துறை நிறுவனங்கள் வருமானம் குறைந்தால் அதன் தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் போகலாம் என்றார் அவர்.

ஐந்தாண்டு காலத்திற்குள் அடிப்படைச் சம்பளமாக 1,500 வெள்ளியை உயர்த்துவது பக்காத்தான் ஹராப்பானின்  தேர்தல் கொள்கை அறிக்கையில் உள்ளடங்கியுள்ளது.

No comments:

Post a Comment