Saturday 17 March 2018

மாணவர்களின் வெற்றிக்கு பெற்றோர்களின் ஊக்குவிப்பு அவசியம்





கோ.பத்மஜோதி

கோலாலம்பூர்-
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு பெற்றோர்களின் பங்கு மிக அவசியமாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பில்லாமல் அந்த மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறப்படைவதற்கு மிகக் கடினமே. 
ஒவ்வொரு மாணவர்களின் வெற்றிக்குப் பின்னால் அவரவர் பெற்றோர்களின் ஊக்குவிப்பு அவசியம் என்பதை உணர்ந்து இராஜயோக சக்தி மிகுந்த ஆழ்நிலை தியான இயக்கம் (ஆர்பிடி) கல்வி கருத்தரங்கை அண்மையில் மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் பெற்றோர்களுக்கும் ஏற்பாடு செய்திருந்தது.

மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கல்விக் கருத்தரங்கில் பெற்றோர்களுக்கும் ஓர் அங்கத்தை மிகச் சிறப்பாக வழிநடத்தியது ஆர்பிடி இயக்கம். 

யோக சக்தியை துணைக்கொண்டு மாணவர்களின் லட்சியத்தை அடைய வைத்தல், மாணவர்களை ஊக்குவித்தல், அவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுதல் என பல்வேறு கருத்துகளைப் பெற்றோர்களுக்கு  மிகத் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டன . நாடு தழுவிய நிலையிலிருந்து மாணவர்களும் பெற்றோர்களும் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதில் கலந்து கொண்ட ஒரு சில பெற்றோர்கள் 'மை பாரதம்' மின்னியல் ஊடகத்துடன் அவர்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். 
 


ஈப்போவைச் சேர்ந்த கோகிலா கிருஷ்ணன் கூறுகையில், என் மகன் விமானி ஆக வேண்டும் என்பதே லட்சியமாகக் கொண்டிருந்தான். இதில் எனக்கு அவ்வளவும் விரும்பமில்லை. இருப்பினும், ஒவ்வொரு நாளும் டத்தோஶ்ரீ குருஜியிடம் பிரார்த்தனை செய்வேன். இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர், தன் மகனை அவன் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் விமானத் துறையில் உயர்ர்கல்வியைத் தொடர்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். இந்தக் கருத்தரங்கில் விமானி அரவிந், விமானத் துறையைப் பற்றிய அவரின்  அனுபவத்தை பகிர்ந்துகொண்டது எனக்கு நம்பிக்கையை பிறப்பித்துள்ளது. முதல் அங்கமாகவே பைலட் துறையைப் பற்றி அவர் விளக்கமளித்தது நம்பிக்கையை மட்டுமில்லாமல் என் பிரார்த்தனையின் பிரதிபலிப்பாகவும் கருதுகிறேன்.

மாணவர்களுக்கு ஆன்மிக வழியும் சொல்லி தர வேண்டும். ஆன்மீக ஞானமும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தேவை. வாழ்க்கையில் போராட்டம் வந்தாலும் ஆன்மீக வழி ஏதுவாக இருக்கும் என்பது இந்தக் கருத்தரங்கில் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது என்று பகாங்கைச் சேர்ந்த செல்லம்மாள் தியாகராஜ் கூறினார்.

பருவ வயதில் என்றாலே பிள்ளைகளுக்கு உடல் ரீதியாகவும் மனம் ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படும். இந்த வயதில் அதிகமானவர்களை அவர்கள் சந்திப்பார்கள்; நண்பர்களுடம் பழுகுவார்கள். இந்தக் காலக்கட்டத்தில் பெற்றோர்களும் தன் பிள்ளைகளிடம் நண்பர் போல் பழக வேண்டும். பிள்ளைகளின் பிரச்சினைகளை எப்படி கையாள்வது, தீர்வு காணும் முறைகள் என இங்கு விளக்கமளிக்கப்பட்டது என்றார் கோலாலம்பூரைச் சேர்ந்த சின்னகாளை.

கெடாவைச் சேர்ந்த லோகநாதன் முத்தையா கூறுகையில், பிள்ளைகளுக்கு படிக்கும் வழிமுறைகளை கற்றுகொடுத்தல், அவர்களுக்கு கல்வியில் ஊக்குவிப்பு வழங்குதல், தன் பிள்ளைகளுக்கு மன உளைச்சலை கொடுக்காமல் அன்பாக கையாளும் முறைகள், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், என்பதை இங்கு தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது. அன்பான முறையில் கையாண்டால் நிச்சயம் பிள்ளைகளிடம் மாற்றம் ஏற்படும் என்று உணர்கிறேன்.

பிள்ளைகளின் எண்ணங்கள், உணர்வுகளைப் புரிந்து செயல்படுவதோடு அவர்களின் லட்சியத்துக்கு பெற்றோர் தான் கைக்கொடுக்க வேண்டும். தன் பிள்ளைகள் கல்வியில் சிறப்படைவதற்கு முதலில் ஆரோக்கியம் மிக முக்கியம். அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்கினால் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பதை டாக்டர் விளக்கமளித்தது மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டேன் என்றார் சிரம்பானைச் சேர்ந்த மீனா சம்பந்தம்.

தியானம் தொடர்ச்சியாக செய்வதால் ஏற்படும் மாற்றங்களையும் பிள்ளைகள் கல்வியில் சிறப்படைவதற்கு தியானம் எவ்வாறு உதவுகிறது என்பதையும் அறிந்து கொண்டேன் என்று கெடாவைச் சேர்ந்த முனியம்மாள் காளி சொன்னார்.

பிள்ளைகளின் கல்விக்கு பெற்றோர்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் முதலில் பெற்றோர்களிடத்தில் மாற்றம் தேவை என்பதை உணர்ந்தேன் என்றார் கோலாலம்பூரைச் சேர்ந்த கணேஷ்குமார் ராமசாமி. 

No comments:

Post a Comment