Saturday 24 March 2018

இந்தியர்கள் சார்ந்த கேள்விகளுக்கு 2 நிமிடங்களில் பதிலா? தேவமணியை சாடினார் சிவகுமார்


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
இந்நாட்டிலுள்ள இந்தியர்கள்  தொடர்பான   விவகாரங்களை மக்களவையில் விவாதிக்கும் போது அதற்கு பதிலளிக்க 2 நிமிடங்கள் மட்டும் போதுமா? என மஇகா தேசிய துணைத் தலைவரும் பிரதமர் துறை துணை அமைச்சருமான டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணியை கடுமையாக சாடினார் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார்.

மக்களவை கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று இந்தியர்கள் தொடர்பான விவகாரங்கள் தொட்டு கேள்வி எழுப்பினேன்.

குறிப்பாக மலேசிய இந்தியர் பெருவரைவு திட்டம், செடிக் தொடர்பான கேள்விகளை எழுப்பினேன். ஆனால் நான் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில் வழங்காமல் 2 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றியுள்ளதுதான் ஒரு பொறுப்புள்ள அமைச்சருக்கான தகுதியா?

இந்தியர்களை சார்ந்துள்ள பிரச்சினைகளை மக்களவையில் விவாதித்தால்தான் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்னவென்பது பிற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புரிய வரும்.

ஆனால் பிரதமர் துறை அமைச்சில் உள்ள ஏழு பேரில் மற்றவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தங்களிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கின்ற நிலையில் டத்தோஶ்ரீ தேவமணி மட்டும் இந்தியர்களை சார்ந்த விவகாரங்கள் தொட்டு எழுப்பியுள்ள கேள்விகளுக்கு 2 நிமிடங்களில் மட்டுமே பதில் கூறுவதுதான் இந்தியர்கள் மீதான அக்கறையா?

மக்களவையில் விவாதிக்கின்ற விவகாரங்கள் பிற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும், அதன் மூலம் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

அதையெதையுமே பொருத்படுத்தாமல் அலட்சியத்தனமாக பதிலளித்த தேவமணியின் நடவடிக்கை இந்திய சமுதாயத்தின் மீதான அக்கறையை புலப்படுத்தவில்லை என அவ கூறினார்.

No comments:

Post a Comment