Wednesday 7 March 2018

உள்ளூர் வேட்பாளர் விவகாரம்; மஇகா தேசியத் தலைவருக்கு நெருக்குதல் கொடுத்தது கிடையாது - இளங்கோவன் முத்து


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளூர் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என குரல் எழுப்பப்பட்டு வந்தாலும் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கட்சி தேசியத் தலைவரைச் சார்ந்தது. அவரின் முடிவில் ஒருபோதும் நான் தலையிட்டது கிடையாது என சுங்கை சிப்புட் மஇகா தொகுதித் தலைவர் இளங்கோவன் முத்து தெளிவுபடுத்தினார்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும்  என விருப்பத்தை வெளிபடுத்திய உள்ளூரைச் சேர்ந்த நான்கு பேரின் விருப்புரிமையை மஇகா தேசியத் தலைவரின் பரிசீலனைக்குக் கொண்டுச் சென்றேன்.

மாறாக, இவர்தான் இத்தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டும் என கட்சி தலைவருக்கு நான் ஒருபோதும் நெருக்குதல் கொடுத்தது கிடையாது.

இன்றைய தமிழ் நாளிதழ் ஒன்றில் 'சுங்கை சிப்புட் தொகுதியில் மண்ணின் மைந்தரை நிறுத்துங்கள்;தேசியத் தலைவருக்கு தொகுதித் தலைவர் கடிதம்' எனும் தலைப்பில் வெளிவந்துள்ள செய்தியில் உண்மை கிடையாது.

நான்கு பேரின் விருப்புரிமை பூர்த்தி செய்யும் வகையில் கட்சி தொகுதித் தலைவர் எனும் முறையில்  சிபாரிசு கடிதம் வழங்கியுள்ளேன். ஆனால் தனிப்பட்ட ஒரு நபருக்காக பரிந்துரைத்து தேசியத் தலைவருக்கு நான் கடிதம் எழுதியது கிடையாது.

வேட்பாளர் தேர்ந்தெடுப்பதும் நியமிப்பதும் கட்சி தேசியத் தலைவரின் பிரத்தியேக உரிமை என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளேன். அதை ஏற்றுக் கொள்கிறேன்.

இந்த தேர்தலில் சுங்கை சிப்புட் தொகுதியை தேசிய முன்னணி மீட்க வேண்டும். அதுதான் இப்போது முக்கியம். தேமு வேட்பாளரின் வெற்றிக்காக தொகுதி  மஇகா  பாடுபடும் என இளங்கோவன் முத்து கூறினார்.

No comments:

Post a Comment