Sunday 25 March 2018

செடிக் மானியத்தில் 'முறைகேடுகளா'?; மூடி மறைப்பது ஏன்? - சிவகுமார் கேள்வி


ரா.தங்கமணி

ஈப்போ-
இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட 'செடிக்' அமைப்பின்  வழி இந்திய அரசு சாரா பொது இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட மானியம் தொடர்பான தகவலை பொதுவில் அறிவிக்க முடியாது என கூறப்படுவதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளடங்கியுள்ளதால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட  வேண்டும் என பத்துகாஜா நாடாளுமன்ர உறுப்பினர் வீ.சிவகுமார் வலியுறுத்தினார்.

ஆளும் தேசிய முன்னணி அரசாங்கம் முன்பு மஇகாவின்  வழியே இந்திய சமுதாயத்திற்கான மானியங்களை வழங்கியது. ஆனால் கொடுக்கப்பட்ட மானியம் முறையாக இந்திய சமுதாயத்தை சென்றடையவில்லை எனும் அதிருப்தி மேலோங்கிய நிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் 'செடிக்' அமைப்பை உருவாக்கி அதன்வழி இந்திய சமுதாயத்தின்  மானியங்கள் பகிரப்படுவதை உறுதி செய்தார்.

எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் சுயேட்சையான முறையில் செயல்பட தொடங்கிய 'செடிக்' பின்னாளில் அரசியல்வாதிகளின் ஆளுமைக்குள் கட்டுப்பட்டது.

அரசியல்வாதிகள் சார்ந்துள்ள இயக்கங்களுக்கு அதிகமான மானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்த சிவகுமார், மலேசிய இந்தியர் காற்பந்து சங்கம் (மீஃபா), பக்தி சக்தி, ஶ்ரீ முருகன் நிலையம் ஆகிய அமைப்புகளுக்கு எவ்வளவு மானியம் செடிக் அமைப்பின் மூலம் வழங்கப்பட்டது என மக்களவை கூட்டத்தொடரில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினேன்.
மக்களைவில் அளிக்கப்பட்ட பதில்...
பிரதமர் துறையின் கீழ் இயங்கும் 'செடிக்' அமைப்பின் மானியங்கள் கண்காணிக்கும் பொறுப்பு பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணியின் கீழ் வருவதால் அதற்கு பதிலளித்த அவர், செடிக் மானியத்தின் மூலம் மீஃபா வழி  2015, 2017ஆம் ஆண்டுகளில் 22,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது எனவும் பக்தி சக்தி மூலம் ,1,500 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன எனவும் ஶ்ரீ முருகன் நிலையத்திற்கு மானியங்கள் வழங்கப்படவில்லை எனவும் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கப்பட்டது.

மேலும், செடிக் அமைப்பிற்கும் சம்பந்தப்பட்ட பொது இயக்கங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் வழங்கப்பட்ட மானியங்களை பொதுவில் கூறமுடியாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கேள்வி எழுப்பிய சிவகுமார், 'செடிக்' மூலம் வழங்கப்பட்ட  மானியங்கள் யாவும் தனிநபரின் பணம் கிடையாது, அது முழுக்க முழுக்க மக்கள் பணம். மக்கள் பணம் யாருக்கு வழங்கப்பட்டது, எவ்வளவு வழங்கப்பட்டது என்பதை கூற முடியாத அளவுக்கு அது ரகசிய காப்பு சட்டத்திற்கு உட்பட்டதா?

கொடுக்கப்பட்ட பணத்தை பொதுவில் சொல்ல முடியாது என கூறுவதற்கு யார் வீட்டு அப்பன் பணமும் கிடையாது. மக்கள் பணத்தை பகிர்ந்தளிப்பதில் எவ்வித முறைகேடுகளும் நிகழக்கூடாது.
வழங்கப்பட்ட மானியத்தை வெளியில் தைரியமாக சொல்ல முடியாது என்றால் அதில் ஏதோ முறைகேடுகளும் தவறுகளும் நிகழ்ந்திருக்கலாம் என தோன்றுகிறது.

அதனை முறையாக விசாரிக்கும் பொருட்டு காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக சிவகுமார் இன்று ஈப்போ மாவட்ட போலீஸ் தலைமையகத்தின்  முன்பு நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்

No comments:

Post a Comment