Tuesday 27 March 2018

தமிழ் இடைநிலைப்பள்ளி; தேமு நிலம் கொடுக்கவில்லையென்றால் நம்பிக்கைக் கூட்டணி கொடுக்கும்- கணபதிராவ்


ரா.தங்கமணி

ஈப்போ-
தமிழ் இடைநிலைப்பள்ளியை அமைப்பதற்கான நிலத்தை பேராக் மாநிலத்தை தற்போது ஆட்சி புரியும் தேசிய முன்னணி அரசாங்கம் ஒதுக்கீடு செய்யாவிட்டால் அம்மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சி அமைந்தால் நிச்சயம் ஒதுக்கீடு செய்யப்படும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

நம்பிக்கைக் கூட்டணி அறிமுகம் செய்துள்ள தேர்தல் கொள்கை அறிக்கையில் தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை நம்பிக்கைக் கூட்டணி கைப்பற்றினால் தமிழ் இடைநிலைப்பள்ளி நிச்சயம் நிர்மாணிக்கப்படும்.

தமிழ் இடைநிலைப்பள்ளியை அமைப்பதற்கு ஏதுவாக நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி புரியும் பினாங்கு மாநிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது சிலாங்கூர் மாநில அரசு 8 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

தற்போது அதிகமான இந்தியர்கள்  வாழ்கின்ற மாநிலமான பேராக் மாநிலத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிப்பதற்கு தற்போதைய தேசிய முன்னணி அரசு முனைய வேண்டும்.

இல்லையேல், வரும் தேர்தலில் பேராக் மாநில ஆட்சியை நம்பிக்கைக் கூட்டணி கைப்பற்றியதும் நிச்சயம் தமிழ் இடைநிலைப்பள்ளிக்கான நிலம் ஒதுக்கப்படும் என இங்கு நடைபெற்ற 'புதிய அரசாங்கம், புதிய நம்பிக்கை' எனும் தலைப்பிலான சொற்பொழிவில் உரையாற்றுகையில் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment