Monday 21 August 2017

லிட்டில் இந்தியாவை அதிரவைத்தது கலை, பண்பாட்டு நிகழ்வு

(ரா.தங்கமணி)

ஈப்போ-
பேராக் இந்தியர் வர்த்தக சபையின்  80ஆம் ஆண்டு நிறைவு  விழாவை முன்னிட்டு  ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்தில் இந்தியர்களின் கலை, பண்பாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவை மாநில கலை, பண்பாட்டு இலாகா இயக்குனர் ரோஸ்மி ஜல்மி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். மூவின மக்கள் இங்கு வாழ்கின்ற நிலையில் அந்தந்த மக்களின்  கலை, கலாச்சாரத்தை அனைவரும் அறிந்திட வேண்டும். ஏனெனில் 'விசிட் பேராக்' (பேராக்கிற்கு வருகை புரியுங்கள்) பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் நமது மாநிலத்தின் கலை, கலாச்சாரத்தை அந்நிய நாட்டினர் புரிந்து கொள்வதற்கு இந்நிகழ்வு பேருதவியாக அமைந்துள்ளது.
லிட்டில் இந்தியா வளாகம் இந்தியர்களின் பாரம்பரியத்தை வெளிகொணரக்கூடிய வளாகமாகும். அவ்வகையில் மாநிலத்தின் கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பாராடுக்குரியதாகும் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பேராக் இந்தியர் வர்த்தக சபையின் தலைவர் எம்.கேசவன், சபை மேற்கொண்டு வரும் பல்வேறு நிகழ்வுகள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. வர்த்தகர்களை மேம்படுத்துவது மட்டுமின்றி கலை, கலாச்சாரத்தை வளர்த்தெடுக்க வேண்டும் எனும் நோக்கிலேயே இச்சபையின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா மட்டுமின்றி கலை, கலாச்சர நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன என கூறினார்.
இந்த நிகழ்வில் மலேசிய இந்து சங்கம்,கருடன் விளையாட்டு மன்றம், சேலை அழகு ராணி பங்கேற்பாளர்கள் உட்பட பலரது படைப்புகள் நடைபெற்றதோடு பரத நாட்டியம், கரகாட்டம், தற்காப்பு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த பாரம்பரிய நிகழ்வை திரளானவர்கள் கண்டு களித்ததோடு அன்றிரவு உள்ளூர் கலைஞர்களின் பங்கேற்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கானோர்  கண்டு களித்தனர்.

No comments:

Post a Comment