Monday 7 August 2017

'பொய்யான தகவல், ஏமாற்று வேலை' 360 பேர் மீது போலீஸ் புகார்


தெலுக் இந்தான் -
360 பேர் சட்டத்திற்கு புறம்பான வகையில் வாக்களிக்கும் தொகுதி இடமற்றத்திற்கு விண்ணப்பம் செய்தது தொடர்பில் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் தெலுக் இந்தான் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

மலேசிய தேர்தல் ஆணையத்தின் 2017ஆம் ஆண்டு முதல் காலாண்டு பட்டியலில் வெளியிடப்பட்ட வேளையில்  ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் 3,400 பேர் வாக்காளராக பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த 3,400 பேரில் 360 பேரின் விவரங்களை ஆராய்ந்தபோது இதில் ஈப்போ, சித்தியவான், சுங்காய் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத்தில் தங்களை வாக்காளராக பதிந்து கொண்டது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து பேராக் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன் வழி நேற்று நடைபெற்ற விசாரணையில் பேராக் மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ உட்பட 120 பேர் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் வாக்களிக்க  முடியாது எனவும் பழைய தொகுதியிலேயே அவர்கள் வாக்காளர்களாக நிலைநிறுத்தப்படுவர் எனவும் விசாரணை முடிவில் தெரிவிக்கப்பட்டது.

முறையற்ற  விலாசம், பிறர் முகவரியில் வாக்காளராக பதிந்து கொள்வது என பொய்யான தகவல்களை வழங்கி மலேசிய தேர்தல் ஆணையத்தையும் தேசிய பதிவு இலாகாவையும் ஏமாற்றியுள்ளனர் என வலியுறுத்தி டத்தோ வ.இளங்கோ உட்பட 360 பேர் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டது என கேசவன் கூறினார்.

நிருபருக்கு மிரட்டல்
இதனிடையே, நேற்று பேராக் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணை தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற 'தமிழ் மலர்' நாளிதழ் நிருபர் டி.கே.மூர்த்தியை (வயது 71)  சில தரப்பினர் மிரட்டியுள்ளனர்.

'இந்த விசாரணை தொடர்பில் செய்திகளை வெளியிடக்கூடாது' என கடும் ஆவேசத்துடன் நிருபர் டி.கே.மூர்த்தியை ம இகாவைச் சேர்ந்த  தரப்பினர் சிலர் மிரட்டினர்.

இந்த மிரட்டல் தொடர்பில் டி.கே.மூர்த்தியும் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் புகாரின்போது சுங்காய் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ஆ.சிவநேசனும் உடனிருந்தார்.

No comments:

Post a Comment