Tuesday 24 July 2018

மண்டபங்களை நிர்மாணிப்பதை இலக்காகக் கொண்டு பேரா பொருளாதார முன்னேற்ற கூட்டுறவு கழகம் செயல்படும்- நிறுவனர் டத்தோ ஏ.கே.சக்திவேல்


ரா.தங்கமணி

ஈப்போ-
அண்மையில் அமைக்கப்பட்ட  பேரா பொருளாதார முன்னேற்ற கூட்டுறவுக் கழகம் முறைப்படி பதிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராஃபாட் பின் வரிசை முகம்மட் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்த கூட்டுறவு கழகம் குறித்து விளக்கமளித்த  அதன் நிறுவனர் டத்தோ டாக்டர் ஏ.கே.சக்திவேல், இதற்கு முன்னர் குடும்ப கூட்டுறவின் மூலம் செயல்பட்டு வந்தோம். ஆனால் இந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு நாம் எவ்வாறு பங்காற்ற போகிறோம் என கேள்வி எழுந்தபோது உதித்ததே இந்த கூட்டுறவு கழகம்.

பேரா பொருளாதார முன்னேற்ற கூட்டுறவு கழகத்தின் மூலம் இந்தியர்களுக்கான திருமண மண்டபங்களை நிர்மாணிக்கும் இலக்கு கொண்டுள்ளோம்.

இந்நாட்டில் கூட்டுறவு கழகத்தின் மூலம் பல்வேறு ஆக்ககரமான திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அவ்வகையில் இக்கூட்டுறவு கழகத்தின் மூலம் திருமண மண்டபங்களை நிர்மாணிக்கும் இலக்கில் வெற்றி பெற முடியும்.

இந்தியர்களுக்கென மண்டபங்கள் இல்லையே என்ற குறையை போக்கும் வகையில் இக்கூட்டுறவு கழகம் மண்டபங்களை நிர்மாணிக்கும். இதற்கு முன்னர் குடும்ப கூட்டுறவு கழகத்தின் மூலம் சில முதலீட்டாளர்களின் உதவியோடு 5 மண்டபங்களை நிர்மாணித்துள்ளேன்.

அடுத்ததாக 6ஆவது மண்டபம் நிச்சயம் பேரா பொருளாதார கூட்டுறவு கழகத்தின் மூலம் நிர்மாணிக்கப்படும் என கூறிய டத்தோஶ்ரீ சக்திவேல், கூட்டுறவு கழக இயக்குனர்கள், உறுப்பினர்களின் ஆதரவோடு நிச்சயம் அது சாத்தியமாகும் என்றார்.

நேற்று முன்தினம் இங்குள்ள டத்தோஶ்ரீ டாக்டர் ஏ.கே.சக்திவேல் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத்தின் அறிமுக நிகழ்வில் அவர்  உரையாற்றினார்.

மேலும், அடுத்தாண்டு நடைபெறும் முதலாவது கூட்டத்தில் இக்கூட்டுறவில் அங்கம் பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு நிச்சயம் 8 விழுக்காடு லாப ஈவு வழங்கப்படும்.

இங்குள்ள பல கூட்டுறவு கழகங்கள் 100 ஏக்கர், 500 ஏக்கர் நிலம் வேண்டும் என  மாநில அரசிடம் கோரிக்கை விடுக்கின்றன. ஆனால் நாங்கள் 3 ஏக்கர் நிலத்தை மட்டுமே கேட்கிறோம். மண்டபத்தை கட்டுவதற்கு நிலம் மட்டும் ஒதுக்கினால் போதும் என இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராஃபாட் பின் வரிசை முகமட்டிடம் கோரிக்கை விடுத்தார்.

பேரா பொருளாதார முன்னேற்றக்  கூட்டுறவு கழகத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய முகமட் அராஃபாட், இந்த கூட்டுறவு கழகத்தை அமைத்துள்ள டத்தோஶ்ரீ சக்திவேல், அவர்தம் குழுவினரை வெகுவாக பாராட்டினார்.

நாட்டில் பல கூட்டுறவு கழகங்கள் அமைந்துள்ளன. அவற்றில் பல வெற்றி கண்டுள்ளன. சில தோல்வியை சந்தித்துள்ளன. நஷ்டத்தை பற்றி கவலைபடாமல் உங்களது திட்டங்களை வெற்றிகரமான செயல்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

இக்கூட்டுறவு கழகத்திற்கு என்னுடைய ஆதரவு நிச்சயம் இருக்கும் என குறிப்பிட்ட அவர், 3 ஏக்கர் நில கோரிக்கையை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அராஃபாட் கூறினார்.
இந்நிகழ்வில் கூட்டுறவு கழகத்தின் வாரிய இயக்குனர்கள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment