Saturday 13 May 2017

கல்வியை போன்று விளையாட்டிலும் சமயத்திலும் ஈடுபாடு காட்டுவீர் - டத்தோ இளங்கோ அறிவுறுத்து

கல்வியை போன்று விளையாட்டிலும் சமயத்திலும் ஈடுபாடு காட்டுவீர்! - டத்தோ இளங்கோ அறிவுறுத்து


தஞ்சோங் மாலிம்-
மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது சமயத்திலும் விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்க பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என பேராக் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ வி.இளங்கோ வலியுறுத்தினார்.

இக்காலகட்டத்தில் கல்வி ஒவ்வொரு மாணவருக்கும் மிக முக்கியமானது. கல்வியில் சிறந்து விளங்கினால் மட்டுமே சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

ஆனால் அதையும் தாண்டி விளையாட்டுத் துறையிலும் மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். விளையாட்டுத் துறையில் காட்டப்படுகின்ற ஈடுபாடு கல்வி பயில்வதிலும்  இருக்க வேண்டும் என பெராங் ரீவர் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் சமய ஈடுபாட்டிலும் மாணவர்கள் அதிக ஈடுபாடு காட்டுவதை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும். சமயத்தின் பால் ஈடுபாடு கொள்வதன் மூலம் அவர்களை நல்வழிப்படுத்த முடியும்.



அப்போதுதான் இம்மாணவர்கள் இடைநிலைப்பள்ளிக்கு செல்லும்போதும் ஒழுக்க நெறியுடன் கட்டொழுங்குடன் நடந்து கொள்வர் என டத்தோ இளங்கோ  குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  டத்தோ இளங்கோ, டத்தோ கே.ஆர்.நாயுடு உட்பட பிரமுகர்கள் பரிசுகளை எடுத்து வழங்கினர்.

இதில் பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜு, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment