Monday 8 May 2017

மஇகா வழக்கு; மே 8இல் மீண்டும் விசாரணை

மஇகா வழக்கு; மே 8இல் மீண்டும் விசாரணை


கோலாலம்பூர்-
நாட்டில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்த மஇகா- சங்க பதிவகத்துக்கு இடையிலான வழக்கு இன்று 8ஆம் தேதி  கூட்டரசு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

மஇகா பத்து தொகுதியின் தலைவர் ஏ.கே.இராமலிங்கம் உட்பட 8 பேர் தொடுத்த இவ்வழக்கில் மஇகா தேசியத் தலைவர்  டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், மஇகா உதவித் தலைவர்கள் டத்தோ டி.மோகன், டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், டத்தோ ஜஸ்பால் சிங், மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ ஏ.சக்திவேல், வழக்கறிஞர் ஏ.வசந்தி, சங்கப் பதிவக தலைமை இயக்குனர் முகமட் ரசின் அப்துல்லா, சங்கப் பதிவக அதிகாரி அக்மால் யாஹ்யா ஆகிய எண்மரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளனர்.

8 பேருக்கு எதிராக கடந்த 5.2.2016இல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில்  தொடரப்பட்ட இந்த வழக்கு பூர்வாகங் ஆட்சேபங்களின் அடிப்படையில் கடந்த 11.7.2016இல் தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்த தீர்ப்புகு எதிராக இராமலிங்கம் குழுவினர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் செய்திருந்த மேல் முறையீட்டை 10.1.2017இல் விசாரித்த நீதிமன்றம் அந்த வழக்கை பூர்வாங்க ஆட்சேபங்களின்படி தள்ளுபடி செய்திருக்கக்கூடாது என்று கூறி. மீண்டும் அந்த வழக்கின் முழு விசாரணையும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என தீர்ப்பு கூறியது.

இதனைத் தொடர்ந்து இந்த தீர்ப்புகு எதிராக பிரதிவாதிகள் (மஇகா- சங்கப் பதிவகம்) தரப்பில் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தான் மே 8ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

ஏ.கே.இராமலிங்கம், டத்தோ ஹென்றி பெனடிக் ஆசீர்வாதம், வி.கணேஷ்.,  எம்.சத்தியமூர்த்தி, ஜோர்ஜ் அலெக்சாண்டர் பெர்னாண்டஸ், ஆர்.எம்.பிரபு, ஆர். சிதம்பரம் பிள்ளை, டத்தோ எம்.வி. ராஜு ஆகியோர் இவ்வழக்கை தொடுத்திருந்த நிலையில் அதில் 5 பேர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெறும் வழக்கில் இவ்விவகாரம் உறுதி செய்யப்படும்.

No comments:

Post a Comment