Wednesday 10 May 2017

‘10 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர்’ ஆர்பிடியின் கல்வி வியூகம்

‘10 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர்

ஆர்பிடியின் கல்வி வியூகம் 



கோலாலம்பூர்,

கல்வியே ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய ஆயுதம் என்பதை உணர்ந்து இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி பயிலரங்கை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வருகிறது ராஜயோக சக்தி மிகுந்த ஆழ்நிலை தியான இயக்கம் (ஆர்பிடி).



இயக்கத்தின் ஸ்தாபகர் யோக ஞான சித்தர் ஓம் ஸ்ரீ ராஜயோக குரு டத்தோஸ்ரீ வி.பாலகிருஷ்ணன், அவர்தம் துணைவியார் டத்தின்ஸ்ரீ சுந்தரி பாலகிருஷ்ணன் தலைமையில் இந்த இலவச கல்வி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் 29ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகத்தில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

10 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் எனும் தத்தெடுப்புத் திட்டத்தை முன்வைத்து நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பிடி3, எஸ்பிஎம் தேர்வை எழுதும் ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர்

இக்கருத்தரங்கில் பங்கேற்ற 100 ஆசிரியர்களும் 10 மாணவர்களுக்கும் தேர்வு எழுதும் வரை வழிகாட்டுதலாக அமைவர். அதோடு ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களின் நேரடி வழிகாட்டுதல் இம்மாணவர்களுக்கு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் நிபுணத்துவ ஆசிரியர்களை எந்நேரத்திலும் தொடர்பு கொண்டு தங்களது ஐயங்களுக்கு தீர்வு காணலாம் என்று இயக்கத்தின் சேவையாளரான செல்வம் செய்தியாளர்களிடம் கூறினார்.

தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் கல்வி வளத்தையும் திறனையும் மேம்படுத்தி, தங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதோடு அனைத்து மாணவர்களும் யோகசக்தியைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் பட்டதாரிகளாகவும் தன்னுள் இருக்கும் தனித்துவம் வாய்ந்த ஆற்றலை மேம்படுத்திச் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொண்டு தனக்கும், தன் குடும்பத்திற்கும், தன் சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் சிறந்த குடிமகனாக ஆக வேண்டும் என கல்வி அமைச்சின் துணை இயக்குனர் டாக்டர் ஜெயகுமார்  குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment