Friday 5 May 2017

கால்நடை வளர்ப்போரை வெளியேற்றுவதா? சைம் டார்பி அவசரம் காட்டக்கூடாது

கால்நடை வளர்ப்போரை வெளியேற்றுவதா?

சைம் டார்பி அவசரம் காட்டக்கூடாது


சுங்கை சிப்புட்-
தங்களது நிலங்களில் கால்நடைகளை வளர்ப்போர் அவற்றை கூடிய விரைவில் வெளியேற வேண்டும் என சைம் டார்பி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை அவர்களை வெகுவாக பாதிக்கும் என சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் கூறினார்.

கடந்த நான்கு தலைமுறைகளாக கால்நடைகளை வளர்த்து வரும் வேளையில் கடந்த 19.4.2017இல் எல்பில் தோட்டத்தில் நடந்த சந்திப்புக் கூட்டத்தில் சைம் டார்பி நிறுவனத்தின் அதிகாரி ரஸாஸி செய்த இந்த அறிவிப்பு கால்நடைகளை வளர்ப்போருக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

சைம் டார்பிக்கு சொந்தமான கெமிரி, எல்பில் தோட்டங்களில் 13 பேர் கால்நடைகளை வளர்த்து வரும் வேளையில் நிறுவனத்தின் இந்த முடிவினால் அவர்கள் எங்கே செல்வது? என தெரியாமல் தடுமாறுகின்றனர்.

தங்களது வெளியேற வேண்டும் என கூறும் சைம் டார்பி, அவர்களுக்கு ஒரு மாற்று நிலத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த முடிவினால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் தங்களது வருமானத்தை இழப்பதோடு மக்களுக்கு தேவையான இறைச்சி, பால் ஆகியவற்றின் தட்டுப்பாடு நிலவலாம்.

மேலும், கால்நடை வளர்ப்பில் தற்போது இளைஞர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் இத்தகைய நடவடிக்கையினால் அவர்கள் சமூகச் சீர்கேடுகளில் சிக்கிக் கொள்ளும் ஆபத்து உள்ளது. கால்நடைகளை வளர்க்க தேவையான நிலம் எதுவும் காலியாக இல்லாததால் புதிய நிலம் அடையாளம் காணப்படும் வரை சைம் டார்பி நிறுவனம் அவசரம் காட்டக்கூடாது என டாக்டர் ஜெயகுமார் குறிப்பிட்டார்.

அதோடு, நாடு முழுவதும் உள்ள சைம் டார்பி நிலத்தில் கால்நடை வளர்ப்போருக்கும் இந்த பிரச்சினை உண்டாகலாம் என்பதால் பாதிக்கப்படும் தரப்பினர் எங்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும் சுங்கை சிப்புட் பிஎஸ்எம் கட்சியின் தலைவர் சுகுமாறன் தெரிவித்தார். தொடர்புக்கு: 01-5061357 சுகுமாறன், 016-5540052 மணிபாலன்.

No comments:

Post a Comment