Saturday 13 January 2018

தமிழ்ப்பள்ளிகளை இந்திய சமுதாயம் கைவிட்டு விடாது- டத்தோ தங்கேஸ்வரி


ரா.தங்கமணி/ புனிதா சுகுமாறன்

ஈப்போ-
தமிழ்ப்பள்ளிகள் மீதான நம்பிக்கையை இந்திய சமுதாயம் இழக்கவில்லை. நிச்சயம் இம்மண்ணில் தமிழ்ப்பள்ளிகள் நிலைபெற்றிருக்கும் என பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ எஸ்.தங்கேஸ்வரி குறிப்பிட்டார்.

இவ்வாண்டு பள்ளி தவணை தொடங்கியபோது பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்தது. அதே போன்று சில தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவை கண்டது.

மாணவர் எண்ணிக்கையில் ஏற்றமும் சரிவும் சகஜமானதுதான். சில நேரங்களில் பெற்றோர் தங்களுக்கு அருகிலேயே உள்ள பள்ளிகளை தேர்ந்தெடுப்பதால் தமிழ்ப்பள்ளிகளின் தரம் குறைந்துள்ளது, புறக்கணிக்கப்படுகிறது என அர்த்தகாமாது.

இந்திய சமுதாயம் தமிழ்ப்பள்ளிகளை ஒருபோதும் கைவிடாது. தங்களது பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளிக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தை பல பெற்றோர்கள் கடைபிடித்து வருகின்றனர். அதற்கேற்ப தமிழ்ப்பள்ளிகளும் தற்போது பல வசதிகளை கண்டு வருகின்றன.

மாணவர் எண்ணிக்கை சரிவு கண்டால் மனம் சோர்ந்து விடாமல் பெற்றோரிடையே தமிழ்ப்பள்ளிகள் மீதான நம்பிக்கையை வளர்த்தெடுக்க பள்ளி நிர்வாகங்கள் கூடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அதுதான் ஆக்கப்பூர்வமான நடவவடிக்கையாக திகழும் என இங்கு மெத்தடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் வசதி குறைந்த 100 மாணவர்களுக்கு புத்தகப்பைகள், அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது டத்தோ தங்கேஸ்வரி இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் சுற்று வட்டாரத்திலுள்ள 10 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த வசதி குறைந்த மாணவர்கள் அடையாளம் காணபட்டு உதவிகள் வழங்கப்பட்டன.
புந்தோங் மெத்தடிஸ்ட் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியை திருமதி கமலா, பேராக் மாநில மஇகா மகளிர் பிரிவுத் தலைவி திருமதி தங்கராணி, பேராக் மாநில மஇகா நிர்வாக செயலாளர் பாலையா, சுங்கை சிப்புட் மஇகா மகளிர் பிரிவுத் தலைவி விஜயகுமாரி உட்பட தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மஇகாவினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment