Saturday 22 December 2018

வேதாவை பதவி விலகச் சொல்வதா?; அடிப்படையற்றது- மணிமாறன் சாடல்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
அமைச்சர் பதவியிலிருந்து பொன்.வேதமூர்த்தியை விலகச் சொல்வது ஏற்புடைய ஒரு செயல் அல்ல என்று சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்திற்கும் அதன் பின்னர் கடுமையாக தாக்கப்பட்டதால் மரணமடைந்த தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப் மரணத்திற்கும் எவ்விதத்திலும் அமைச்சர் வேதமூர்த்தி பொறுப்பேற்க முடியாது.

இவ்விரு சம்பவங்களும் யாருமே எதிர்பாராத நிலையில் நடந்த ஒன்றாகும். அதற்கு வேதமூர்த்தி எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?

ஒருமைப்பாடு- சமூகநலத்துறை பொறுப்புக்கு பதவியேற்றுள்ளதால் நாட்டிலுள்ள இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை காக்கத் தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டி அவரை பதவி விலகச் சொல்வது நியாயமாகாது.

சீபில்ட் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்திற்கு யார் மூலக் காரணம் என்பதை நாடே அறியும். அப்படியிருக்கும்போது வேதமூர்த்தி மீது மட்டும் குறி வைத்து தாக்குதல் தொடுப்பது ஏற்க முடியாததாகும்.

வீணான கோரிக்கைகள் விடுத்து நாட்டில் இன்னமும் இனவாத அரசியலை தூண்டி கொண்டிருப்பதை விட 'புதிய மலேசியாவை' கொள்கையை அறிவித்த பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அதனை செயல்படுத்துவதில் முக்கியத்துவம் காட்ட வேண்டுமே தவிர இதுபோன்ற விவகாரங்களில் அல்ல என்று மணிமாறன் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment