Wednesday 7 June 2017

பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் பெற்றோரும் பங்கெடுக்க வேண்டும்!


சுங்கை சிப்புட்-
பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள பெற்றோர் அவர்களுக்காக நடத்தப்படும் கருத்தரங்குகள், தன்முனைப்புத் தூண்டல் நிகழ்வுகளில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும் என மதிலன் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான யோகேந்திர பாலன் வலியுறுத்தினார்.

பிள்ளைகளில் கல்வி நலனில் அக்கறை கொண்டுள்ள பெற்றோர் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாது அவர்களுடன் இணைந்து கல்வி நடவடிக்கைகளில் பங்களிப்பை வழங்க வேண்டும்.



அப்போதுதான் பிள்ளைகளும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் தங்களது பெற்றோருடன் இணைந்து செயல்படுவர்ஆதலால் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டி அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக திகழ வேண்டும்.


அதேவேளையில் இத்தகைய நடவடிக்கையை 9 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின்  செயல்பாடுகளை வெகுவாக பாராட்டுவதாக  அண்மையில் இங்குள்ள வனத்துறை இலாகா மண்டபத்தில் சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 9ஆம் ஆண்டு யூபிஎஸ் ஆர் கருத்தரங்கு நிகழ்வில் சிறப்புரை ஆற்றுகையில் யோகேந்திர பாலன் குறிப்பிட்டார்.


இந்நிகழ்வில் உரையாற்றிய சங்கத்தின் தலைவர் வீ.சின்னராஜு, இவ்வியக்கம் 12 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வேளையில் யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கு கடந்த 9 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் நமது பங்களிப்பு இருக்க வேண்டியது அவசியம் என்ற நிலைப்பாட்டில் பல்வேறு நல்லுள்ளங்களின் உதவியோடு இந்த யூபிஎஸ்ஆர் வழிகாட்டி  கருத்தரங்கு நடத்தப்படுகிறது.


குறிப்பாக சங்கத்தின் ஆலோசகர் அமுசு பெ.விவேகானந்தன், மதிலன் நிறுவனத்தின் இயக்குனர் யோகேந்திர பாலன், சுங்கத்துறை இலாகாவின் துணை இயக்குனர் ஷமில் செல்வம் ஷா பின் அப்துல்லா, மருத்துவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் பெருமளவு உதவிகளை வழங்கி வருகின்றனர். அவர்களின் பேராதரவு  சங்கத்தின் வளர்சிக்கு என்றென்றும் தேவை எனவும் சின்னராஜு குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கோலாகங்சார் மாவட்டத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்களும் அவர்களின் பெற்றோரும், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment